மதுரையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில், தன்னார்வலர்கள் முன்னின்று அடக்கம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுரையில் செல்லூர் பகுதியில் சில தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.
இப்பகுதிகளில் செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் சில தன்னார்வு அமைப்பினர் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
இறந்தவரின் உடலை வீட்டுக்கு எடுத்த வர வேண்டும் என அவரின் மனைவி விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து முறையான அனுமதி பெற்று அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
சமூகஇடைவெளியை பின்பற்றி அவரது உடலை பார்க்க உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் யாரும் கொரோனா அச்சத்தால் வரவில்லை. இறந்தவரின் மனைவி மட்டுமே வந்தார்.
உறவினர்கள் யாரும் வராத சூழலில், தன்னார்வலர்களே இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்து சென்றனர். இறந்தவரின் மனைவியை மயானத்துக்கு அழைத்து சென்று இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்தனர் .