இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை முதல் சில விதிமுறைகளுக்கு அமைய தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை நாளை (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இதன்படி, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அடையாள அட்டையை பயன்படுத்தும் விதம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரகாரம் செல்லுமாறும் அதிகளவில் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரச தனியார் நிறுவனங்கள் பணியாளர்கள் பயணிப்பதற்காக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றினை தனிப்பட்ட பயணங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றும் அத்துடன் தொற்று பரவாதமுறையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க புதிய நடைமுறை ஒன்றை நாளை முதல் அமல்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 1 அல்லது 2ஆக காணப்படுமாயின், அவர்களுக்கு திங்கட்கிழமையும், 3 அல்லது 4ஆக காணப்படுமாயின் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும்.

அதேபோன்று 5 அல்லது 6 என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு புதன்கிழமையும், 7 அல்லது 8 என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமையும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.9 அல்லது 0 இலக்கங்களை இறுதியாகக் கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை மாத்திரமே வெளியில் செல்ல முடியும்.

Share.
Leave A Reply