கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு இன்று 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவல் தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னும் முற்றுமுழுதாக நீங்கவில்லை என்று தெரிவித்திருக்கும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, தொழில்களுக்கு செல்பவர்களைத் தவிர்த்து ஏனையவர்கள் அவர்களின் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் விதிக்கமையவே செல்ல முடியும் என்றும், கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளுக்க தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்காக அரசாங்கம் முடிவெடுத்திருந்தாலும், கொரோனா தொற்று தொடர்பான எச்சரிக்கை நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை.
இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்ளில் அமுல் படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் அரச பொறிமுறைகளை செயற்படுத்தும் திட்டத்திலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் தமது தொழில்களுக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினர் அவர்களின் சொந்த வாகனங்களில் செல்வதாயின், அரச ஊழியர்கள் முற்பகல் எட்டு மணிக்குள் தமது தொழில் நிலையங்களுக்கு செல்வதற்கு முயற்சிப்பதுடன், பிற்பகல் 3 மணி அல்லது 3.30 மணிக்குள் தொழில் நிலையத்திலிருந்து வெளியேற வேண்டும்.
இதேவேளை தனியார் துறையினர் முற்பகல் 8. 30 மணியிலிருந்து 10 மணிக்குள் தொழில் நிலையங்களுக்குச் செல்வதுடன், மாலை 4 – 5 மணிக்குள் தொழில் நிலையத்திலிருந்து வெளியேற வேண்டும். இந்த காலப்பகுதியில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்நிலையில் வழமை போன்றே சோதனைச்சாவடி நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன், நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணுவதற்காக ஒரு இடத்தில் அதிகளவான சோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் அவர்களின் அடையாள அட்டை இறுதி இலக்த்திற்கமையவே செல்ல வேண்டும். அதற்கமைய 1,2 என்ற இறுதி இலக்கம் கொண்ட அடையாள அட்டையை உடையவர்களே செல்லவேண்டும்.
வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவ செய்து கொள்வதே மீகவும் சிறந்த வழிமுறையாகும்.
இதேவேளை இந்தக்காலப்பகுதியில் வினோத பயணங்கள், உற்சவங்கள் என்பன தொடர்ந்தும் தடைச் செய்யப்பட்டுள்ளதுடன், மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளியை பேணிக் கொள்ளுதல் அவசியமாகும்.
தனிமைப்படுத்தல் செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை என்பதுடன், அவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் சிக்குண்டு இருப்பவர்கள் தொடர்ந்தும் அமைதியாக இருக்கவும். உங்களை சொந்த ஊர்களுக்க அனுப்பிவைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய நீங்கள் அனைவரும் உங்களது சொந்த ஊர்களுக்க அனுப்பிவைக்கப்படுவீர்கள்.