அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாரான கமலா ஹரிஸின் தலைமை ஆலோசகராக ஈழத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஹினி கொசோக்லு என்பவரே செயற்படுகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், ஹரிஸின் தலைமைப் பணியாளராகப் ரோஹினி கொசோக்லு பொறுப்பேற்றார். இதன்போது அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க-ஆசியப் பெண் என்ற பெருமையையையும் அவர் பெற்றார்.

ரோஹினி கொசோக்லு, ரோஹினி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். மிச்சிகன் செனட்டர் டெபி ஸ்டெபெனோ சார்பில் பணியாற்றும்போது கடிதத் தொடர்பு மேலாளராக அரசியலில் நுழைந்தார்.

பட்டம் பெற்ற பின்னர் ஸ்டீபெனோவின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவர் கொலராடோ செனட்டர் மைக்கேல் பென்னட்டின் கீழ் ஒரு மூத்த சுகாதார ஆலோசகராக பணியாற்றினார். அந்த நேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார்.

ஏழு ஆண்டுகள் பென்னட்டின் அலுவலகத்தில் பணியாற்றிய ரோஹினி, அப்போது செனட்டர் கமலா ஹரிஸின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று தற்போது மூத்த ஆலோசகராக உயர்ந்துள்ளார்.

ரோகினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த நவம்பரில் ஜோ பிடைன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், துணை ஜனாதிபதியாக ஆசிய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முதல் கறுப்பின பெண்ணான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதேவேளை, அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய, அமெரிக்கப் பெண் ரோஹினி கொசோக்லு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்சபை உறுப்பினர் கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply