வீதி ஒழுங்கை விதிமுறையின் கீழ், முச்சக்கரவண்டிகளுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் அதிக இடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்கைச் சட்டம் தொடர்பில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் நடாத்திய ஆய்வின் அடிப்படையில், குறித்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, நான்கு ஒழுங்கைகளை கொண்ட பாதையில் இடதுபக்க முதலாவது மற்றும் இரண்டாவது ஒழுங்கைகள் பஸ் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகளுக்காக ஒதுக்கப்படும் என்பதோடு, மூன்று ஒழுங்கைகளை கொண்ட பாதையில் இடதுபக்க முதலாவது ஒழுங்கையில் பஸ் வண்டிகள் பயணிக்க முடியும்.

இரண்டாவது ஒழுங்கையில் முன்னோக்கிச் செல்ல முடியும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஏனைய வாகனங்கள் நெரிசலின்றி பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பஸ் முன்னுரிமை ஒழுங்கை உட்பட, வீதி ஒழுங்கைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஒத்திகை நடவடிக்கை இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.

கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஶ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதி, காலி வீதிகளை இலக்காக கொண்டு வீதி ஒழுங்கைச் சட்ட ஒத்திகை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரோன் கமெரா மற்றும் CCTV கமெரா மூலம் வாகன போக்குவரத்து கண்காணிக்கப்படுவதோடு, இதற்கு விமானப்படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

எவ்வாறாயினும், பஸ் ஒழுங்கையில் மாத்திரம் மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளும் பயணிப்பதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக, சாரதிகள் பலர் விசனம் தெரிவித்திருந்தனர்.

இதனைக் கவனத்திற்கொண்டு இன்றையதினம் பஸ் முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கரவண்டிகளுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் அதிக இடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply