சந்திரிகா பிரான்ஸை விரும்பினார்; பிரபாகரன் நோர்வேயை விரும்பினார்; அதனால்தான் சமாதானப் பணியில் இறங்கினோம் – சொல்ஹெய்ம்
விடுதலைப் புலிகள் விரும்பித் தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற சமாதானப் பேச்சுக்களில் நடுநிலைமை வகித்தது என நோர்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“இலங்கைக்கான சமாதான அனுசரணைப் பணியில் பிரான்ஸ் பங்கேற்கவேண்டுமென அப்போதைய அரச தலைவர் சந்திரிகா விரும்பினார்.
இருந்த போதிலும் இந்த அனுசரணைப் பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதன் அடிப்படையிலேயே நோர்வே இந்தப் பணியில் இறங்கியது.
இதற்காக 1998 ஆம் ஆண்டு நோர்வேயில் உள்ள எனது அலுவகத்துக்கு நேரில் வருகை தந்த தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பினர் என்னிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்” எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
அதேவேளை, நோர்வேயின் தலையீட்டுடன் நாட்டில் அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.