கொழும்பு மாநகர சபையை இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் பொது மக்கள் நிவாரண திணைக்கள காரியாலயத்தை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்திருக்கும் பொது மக்கள் நிவாரண திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையை நேற்றும் இன்றும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பெண் ஊழியர் பணிபுரிந்த காரியாலயத்தின் 80 ஊழியர்களிடம் நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தொற்றுக்கு உள்ளான பெண் நெருங்கிப் பழகியதாக இனங்காணப்பட்ட, நகரசபையைச் சேர்ந்த 110 பேரிடம் இன்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க தெரிவித்தார்.
அதன் காரணமாகவே மாநகரசபை மற்றும் மருதானை காரியாலயங்களை தற்காலிகமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் ஊழியரின் கணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் என்பது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.