யாழ்ப்பாணத்தில் தீபாவளி நாளில் மாட்டிறைச்சிக் கடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கலவரமானதில் இறைச்சி வாங்கச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இறைச்சிக் கடை உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள இறைச்சிக் கடையில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இறைச்சி வாங்கச் சென்ற குறித்த நபர், இறைச்சி பசு மாடு போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த உரிமையாளர் குறித்த நபரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான நபர் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இறைச்சி வாங்க வந்தவர் மதுபோதையில் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் கத்தியால் குத்தியதாகவும் இறைச்சிக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து மாட்டிறைச்சிக் கடைக்கு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.