“இதை கருணைக் கொலையுடன் இணைத்து தவறாக புரிந்துகொள்ளக் கூடாது”
குணப்படுத்த முடியாத நிலையில், உயிர்காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் ‘கண்ணியத்துடன் இறப்பதற்கான’ உரிமையை அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, 2023இல் இத்தகைய நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம், 1994இன் கீழ் உரிய அதிகாரம் பெற்றவர்களால் ஒப்புதல் பெறப்பட்ட, மாவட்ட சுகாதார அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட நரம்பியல் வல்லுநர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அல்லது மயக்கவியல் நிபுணர்கள் இந்த இறப்புகளுக்கு முன்னதாகச் சான்றளிக்க வேண்டும் என, கர்நாடக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக” அச்செய்தி தெரிவிக்கிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி முதல் நிலையில் மருத்துவமனை அளவிலும், இரண்டாம் நிலையில் மாவட்ட அளவிலும் இந்த இறப்புகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதேபோன்ற உத்தரவுகளை, கேரளா, கோவா, மகாராஷ்டிரா ஆகியவையும் இயற்றியுள்ளதாக,” மருத்துவர் ரூப் குர்சஹானி என்பவர் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளார்.
மேலும், “இதை கருணைக் கொலையுடன் இணைத்து தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்றும், உயிர்காக்கும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கும், சிகிச்சையால் எவ்வித பயனும் இல்லாமல், குணப்படுத்த முடியாதவர்களுக்கும் மட்டுமே இது பொருந்தும் என அவர் கூறியுள்ளார்” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.