மட்டக்களப்பு, ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்திய குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ் ஆவாக்குழுவின் பாணியில் இடம்பெற்ற சம்பவத்தினால் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply