எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில், வியாழக்கிழமை (27) காலை மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டமானது தொடர்ந்து அருகாமையில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்து தொடர்ச்சியாக யாழ். ஆஸ்பத்திரி வீதியூடாக இராசாவின் தோட்ட வீதியினை அடைந்து தொடர்ந்து யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்தை அடைந்தது.

இதன் பொழுது, “நிறுத்து நிறுத்து இழுவை மடி தொழிலை நிறுத்து”, “தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாத”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” , “அள்ளாதே அள்ளாதே எமது வளத்தை அள்ளாதே” , “வாழ விடு வாழ விடு எங்களை வாழ விடு” , “எல்லை தாண்டி வந்து என் இனத்தை பட்டினி ஆக்காதே” ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இந்திய யர்ஸ்தானிகாரலயத்தில் மகஜரை வழங்க யாழ். பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி போராட்டகாரர்களுக்கு அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களில் சிலர் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளை சந்தித்து மகஜரை கையளித்தனர்.

இதேவேளை போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு போக்குவரத்து பொலிஸார் கடுமையான பாதுகாப்பு வழங்கியதோடு பொதுமக்களை குறித்த பாதையில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் சகிதம் இந்திய யர்ஸ்தானிகாரலயத்துக்கு முன்பாக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply