ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் இடம்­பெற்று நாளை­யுடன் ஆறு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன.

இந்த தாக்­கு­தலின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதை கண்­ட­றிந்து, அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்­பது, கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் வலி­யு­றுத்­த­லாக இருந்து வரு­கி­றது.

இந்த நிலையில், ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு முன்­ன­தாக, இது தொடர்­பான முக்­கி­ய­மான பல விப­ரங்கள் வெளி­யி­டப்­படும் என ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திச­நா­யக்க அண்­மையில் கூறி­யி­ருந்தார்.

இந்த தாக்­குதல் ஏன் நடத்­தப்­பட்­டது? யாரு­டைய பின்­ன­ணியில் இடம் பெற்­றது? அதற்கு தூண்­டு­த­லாக இருந்­த­வர்கள் யார் ? என்­பன போன்ற கேள்­வி­க­ளுக்கு இறு­தி­யான விடை­களைத் தேடு­வ­துதான் முக்­கி­ய­மா­னது.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்­த­வுடன் இது பற்­றிய விசா­ர­ணை­களை தொடங்­கி­யி­ருப்­ப­தாக அறி­வித்­தது.

ஆனால், புதி­தாக எந்த விசா­ரணைக் குழுவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஏற்­கெ­னவே, விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்த, குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை தான், விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

முன்னர் இந்த விசா­ர­ணை­களை மேற்­கொண்ட, ஷானி அப­ய­சே­க­ரவின் தலை­மையில் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தக­வல்கள் வெளி­யாகி இருந்­தன.

அண்­மையில் இந்த விசா­ர­ணை­களை சார்ந்து இரண்டு முக்­கி­ய­மான விட­யங்கள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

ஒன்று, – தேசிய புல­னாய்வுப் பிரிவை சேர்ந்த பொலிஸ் அதி­காரி ஒருவர் மட்­டக்­க­ளப்பில் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.

இன்­னொன்று – பிள்­ளையான் எனும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.

இந்த இரண்டு பேரும் அடுத்­த­டுத்த நாட்­களில் கைதா­கி­யி­ருக்­கின்­றனர்.

இந்த இரண்டு பேரும், ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஆனால், இந்த வழக்­கிற்கும் இவர்­களின் கைதுக்கும் தொடர்பு இருப்­ப­தாக தெரி­கி­றது.

மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீவு பாலத்தில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதி­கா­ரிகள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தை, விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பினர் ஒரு­வரின் மீது திசை திருப்­பினார் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே, பொலிஸ் அதி­காரி கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

saharan-hasim

அவர், அந்தச் சம்­ப­வத்தின் உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளான, சஹ்ரான் ஹாசிம் குழு­வி­னரின் பக்கம், அந்த விசா­ர­ணைகள் செல்ல விடாமல், விடு­தலைப் புலி­களின் முன்னாள் போரா­ளி­களின் பக்கம் அதனை திசை திருப்ப திரும்ப, மீண்டும் மீண்டும் தவ­றான தக­வல்­களைக் கொடுத்து புல­னாய்வு அதி­கா­ரி­களை ஏமாற்­றினார் என குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

அவர் ஏன் அவ்­வாறு செயற்­பட்டார், அவரை அவ்­வாறு செயற்­பட தூண்­டி­யது யார், என்­பன போன்ற விப­ரங்கள் கண்­ட­றி­யப்­பட்டால், ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­களை பாது­காக்கும் நோக்கில் செயற்­பட்­ட­வர்கள் யார் என்­பதை கண்­ட­றி­வது கடி­ன­மில்லை.

ஏனென்றால், அவர்­க­ளுக்கும், புல­னாய்வு அதி­கா­ரி­யினால். திசை திருப்­பப்­பட்ட விவ­கா­ரத்­துக்கும் நிச்­சயம் தொடர்பு இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

கிழக்கு பல்­க­லைக்­க­ழக முன்னாள் துணை­வேந்தர் ரவீந்­தி­ரநாத் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக, கைது செய்­யப்­பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்­ளையான், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் 90 நாட்கள் தடுத்து வைத்து விசா­ரிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில், ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான பல தக­வல்கள் பெறப்­பட்டு இருப்­ப­தாக பொது பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால கூறி­யி­ருக்­கிறார்.

இதனால், இந்த இரண்டு கைது­க­ளுக்கும், ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கும், தொடர்­புகள் இருக்க வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

ஏற்­கெ­னவே, பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொலை செய்­யப்­பட்ட வழக்கில், பிள்­ளையான் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரி­க­ளுடன், தொடர்பில் இருந்தார் என்றும், குண்டுத் தாக்­கு­த­லுக்கு அவர் உள்ளே இருந்து உத­வி­களை வழங்கி இருந்தார் என்றும் சனல்4 குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது. சனல் 4 குற்­றச்­சாட்டின் படி, ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­யாக இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் முன்னாள் பணிப்­பா­ளரும், அரச புல­னாய்வுச் சேவையின் முன்னாள் தலை­வ­ரு­மான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது குற்­றச்­சாட்­டுகள் தெரி­விக்­கப்­பட்­டன.

ஆனால், அவர் இந்தக் குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தி­ருந்தார்.

அந்தச் சந்­தர்ப்­பத்தில் தான் நாட்­டி­லேயே இருக்­க­வில்லை என்றும், மலே­ஷி­யாவில் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்­த­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

ராஜபக் ஷவி­னரை மீண்டும் அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரும் நோக்­கத்­து­டனே இந்த தாக்­குதல் திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக, சனல்4 சுமத்­திய குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே, குற்றப் புல­னாய்­வுத்­துறை இப்­போது விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஆனால், அதற்­க­மைய பிள்­ளையான் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்றும் அவ­ரிடம் அது­பற்றி விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்றும், பிள்­ளை­யானை சந்­தித்துப் பேசிய உதய கம்­மன்­பில தகவல் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, பிள்­ளையான் கைது செய்­யப்­பட்ட மறுநாள் அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு உரை­யா­டு­வ­தற்கு குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­க­ளிடம் முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முயற்­சித்தார் என்ற தக­வலை பொதுப் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பாது­காப்பு அதி­கா­ரி­களில் ஒருவர், குற்றப் புல­னாய்வு அதி­கா­ரி­களை தொடர்பு கொண்டு, இதற்கு அனு­மதி கேட்டார் என்றும், ஆனால், தடுப்­புக்­கா­வலில் உள்ள ஒரு­வரை தொலை­பே­சியில் பேச அனு­ம­திக்க முடி­யாது என்­பதால் அந்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அதே­போல பிள்­ளை­யானின் சட்ட ஆலோ­சகர் என்ற அடிப்­ப­டையில் அவரை சந்­திப்­ப­தற்கு உதய கம்­மன்­பில அனு­மதி கோரினார் என்றும் குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­களின் முன்­னி­லையில் அவரை சந்­திப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது என்றும் அமைச்சர் ஆனந்த விஜே­பால கூறி­யி­ருந்தார்

இந்த இடத்தில் பல்­வேறு சந்­தே­கங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன.

பிள்­ளையான் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தார்.

அத்­துடன் அவ­ரது அர­சாங்­கத்தில் அவர் இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் இணைக்­கப்­பட்­டி­ருந்தார்.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இருந்து பிள­வு­பட்ட கரு­ணா­வையும் பிள்­ளை­யா­னையும் பாது­காத்­தவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

பின்னர் அவர்­களை ராஜபக் ஷவினர் தமது பக்கம் கொண்டு வந்­தி­ருந்­தார்கள்.

பின்னர், பிள்­ளை­யானை தனது பக்கம் வைத்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

ஆனால், கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் நாமல் ராஜபக் ஷவை ஆத­ரிக்­காமல் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரித்­தி­ருந்தார்.

இந்த சூழலில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏன் பிள்­ளை­யானை தொடர்பு கொள்ள முயற்­சித்தார், ஏன் அவ­ருடன் தொலை­பே­சியில் உரை­யாட விரும்­பினார் என்­பது கேள்­விக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கி­றது.

அதற்­கான பதிலை ரணில் விக்­கி­ர­ம­சிங்க மாத்­தி­ரமே வழங்க முடியும்.

ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொலை­பேசி மூல­மாக பிள்­ளை­யா­னுடன் எந்த இர­க­சி­யத்­தையும் பேச முடியும் என்ற நம்­பி­யி­ருக்­க­மாட்டார்.

அதற்­கான வாய்ப்பும் இல்லை என்­பது அவ­ருக்குத் தெரிந்­தி­ருக்கும்.

அதனால், பிள்­ளை­யா­னுடன் இர­க­சியம் பேசு­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க முற்­பட்­டி­ருந்தார் என நம்­பு­வது கடி­ன­மா­னது.

அப்­ப­டி­யி­ருந்தும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை இந்த விவ­கா­ரத்­துக்குள் கோர்த்து விடு­வ­தற்கு அர­சாங்க தரப்பு முயற்­சிக்­கி­றது என்­பதை ஆனந்த விஜே­பா­லாவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடி­கி­றது.

இன்­னொரு பக்­கத்தில், பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வ­ரான முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில பிள்­ளை­யானை சந்­தித்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மான விடயம்.

அவர் ஒரு சட்­டத்­த­ரணி. பிள்­ளை­யானின் சட்ட ஆலோ­சகர் என்ற அடிப்­ப­டையில் அவர் சந்­திப்­புக்கு நேரம் கேட்­டி­ருக்­கிறார். அது வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதற்கு முன்னர் பிள்­ளையான் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது, உதய கம்­மன்­பில அவ­ரது சட்ட ஆலோ­ச­க­ராக செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.

இப்­போது திடீ­ரென ஏன் அவர் பிள்­ளை­யானின் சட்ட ஆலோ­ச­க­ராக நுழைந்­தி­ருக்­கிறார் என்­பது கேள்­விக்­கு­ரிய விடயம்.

பிள்­ளை­யானைச் சந்­திக்க அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர்­களும் குடும்ப உறுப்­பி­னர்­களும் கேட்டுக் கொண்­டதால் தான், இல­வ­ச­மாக சட்ட உதவி வழங்க முன்­வந்­தி­ருப்­ப­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார் கம்­மன்­பில.

சனல் 4 குற்­றச்­சாட்­டு­களை உதய கம்­மன்­பில நிரா­க­ரித்து வந்­தவர்.

இரா­ணுவ புல­னாய்வு அதி­காரி சுரேஷ் சலே மற்றும் பிள்­ளையான், கோட்­டா­பய ராஜபக் ஷ ஆகி­யோரைப் பாது­காக்கும் வகையில் தொடர்ச்­சி­யாக கருத்து வெளி­யிட்டு வந்­தவர் அவர்.

அதை­விட ராஜபக் ஷவின­ருடன் நீண்ட காலம் நெருக்­க­மான உறவில் இருந்த உதய கம்­மன்­பில, கோட்­டா­பய ராஜபக் ஷ வினால் அமைச்சர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட பின்­னரே, அவர்­க­ளு­ட­னான அர­சி­யலில் இருந்த வெளி­யே­றி­யவர்.

ஆனாலும், ஆழ்­ம­னதில் அவர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­பு­களும் உற­வு­களும் நீடிக்­கின்­றன.

ராஜபக் ஷவின­ருடன் இருக்­கின்ற நட்பு, அவர்­களைப் பாது­காப்­பதில் இருக்­கின்ற அக்­கறை, சிங்­கள பௌத்த தேசி­ய­வாதம் மீதான பற்­று­ணர்வு போன்ற கார­ணங்­க­ளினால் உதய கம்­மன்­பில இந்த விவ­கா­ரத்தில் நுழைந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் விவ­கா­ரத்தில் ராஜபக் ஷவினர் மீது சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து, அவர்களை பாதுகாக்க வேண்டுமானால், பிள்ளையானையும் பாதுகாக்க வேண்டும் என்பதை உதய கம்மன்பில உணர்ந்து இருக்கிறார்.

அந்த அடிப்படையில் தான் அவர் பிள்ளையானைச் சந்தித்திருக்கிறார்.

சட்டத்தரணியாக பிள்ளையானை தனிமையில் சந்திக்க முடியும் என்று அவர் நம்பியிருக்கிறார். ஆனால், 4 பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் தான் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் தனித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இது அவரை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.

பிள்ளையானை தனியாக சந்தித்து இரகசியமாக எதையோ பேசுகின்ற வாய்ப்பை கம்மன்பில எதிர்பார்த்திருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல மர்மமான முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

தேர்தலும் வரப் போவதால் அதற்குப் பஞ்சம் இருக்காது.

அப்படி புதிய தகவல்கள் அவிழ்க்கப்படாமல் போனால் ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்ற அவப்பெயருடன் தான், உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

-சுபத்ரா-

Share.
Leave A Reply