“ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது.
நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்\” என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது.
இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். “,