– மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர்
-வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார்
ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூர் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் திட்டங்களை முன்னெடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர்.
பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் மூதூரில் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தது.
ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் கடல்வழியாக மீண்டும் திருகோணமலை திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தனர்,ஆனால் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் கிளர்;ச்சி படையினர் மூதூரை இலக்குவைத்து தாக்குதலொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அரசசார்பற்ற அமைப்பின் 17 பணியாளர்களும் அங்கேயே நிற்கவேண்டிய நிலையேற்பட்டது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் மூண்ட மோதல்காரணமாக மூதூரை சுற்றியுள்ள வீதிகள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பற்றவையாக மாறியதால் படகு போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கொழும்பிலும் பிரான்ஸ் தலைநகரிலும் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 17 பணியாளர்களையும் மோதல்கள் முடிவிற்கு வரும்வரை மூதூர் அலுவலகத்திலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்வது என தீர்மானம் எடுக்கப்;பட்டது.
அந்த பகுதி முழுவதும் கடும் மோதலில் சிக்குண்டிருந்தது, எனினும் திருகோணமலை அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகள் பேணப்பட்டன. மூதூரில் உள்ள அலுவலகத்தில் 17 பணியாளர்களையும் தங்கியிருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அந்த தருணத்தில் சிறந்ததாக தோன்றியது.
ஆகஸ்ட் 2ம் திகதி மூதூரில் நிலைமை மேலும் மோசமடைந்தது,மனிதாபிமான பணியாளர்களை வெளியேற்றுவது சாத்தியமற்ற விடயம் போல தோன்றியது.
இதன் காரணமாக அந்த அலுவலகம் வெளியில் உள்ளவர்களின் கண்ணிற்கு தென்படுவதை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதனை அரசசார்பற்ற அலுவலகம் என அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மறுநாள் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த பணியாளர்களை படகு மூலம் வெளியேற்றுவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயற்சிகளை எடுத்தது , ஆனால் அது சாத்தியமாகவில்லை.மோதலில் ஈடுபட்டிருந்த தரப்பினரிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை சர்வதேச செஞ்சிலுவை குழுவினால் பெற முடியாமல் போனதால் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் சாத்தியமாகவில்லை.
மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த 17 பேரையும் அகதிகளிற்கான முகாமிற்கு கொண்டுபோய் சேர்ப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
எனினும் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் காரணமாக தங்களால் தங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மனிதாபிமான பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த உரையாடல் இடம்பெற்று 20 நிமிடத்தின் பின்னர் அகதிமுகாம் எறிகணை தாக்குதலிற்குள்ளானது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த காலப்பகுதியில் ஏசிஎவ் – பட்டினிக்கு எதிரான அமைப்பு இராணுவத்தினர் கடற்படையினர் பொலிஸாரை தொடர்புகொண்டு மனிதாபிமான பணியாளர்கள் நகரில் இருப்பதை தெரிவித்தது,
அவர்களின் அலுவலகத்தின் ஜிபிஎஸ் விபரங்களை வழங்கியது.இந்த தகவல்கள் தங்கள் பணியாளர்கள் தங்கியுள்ள கட்டிடம் தற்செயலாக எறிகணை தாக்குதலிற்குள்ளாவதை தடுப்பதற்கு உதவும் என பட்டினிக்கு எதிரான அமைப்பு நம்பியது.
இறுதியில் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் எனவும் ஏசிஎவ் நம்பியது.
ஏசிஎவ் குழுவினருக்கும் மூதூரில் சிக்குண்டிருந்த அதன் பணியாளர்களிற்கும் இடையிலான இறுதி தொடர்பாடல் நான்காம் திகதி காலை 7 மணிக்கு இடம்பெற்றது.
ஆனால் அவர்கள் அன்றைய தினம் உயிருடன் இருந்தார்கள் என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரமற்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
மூதூர் பணியாளர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டதும் அந்த அலுவலகத்திற்கு தரை மூலமாக செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்,ஆனால் மூதூரிலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள இராணுவசாவடியில் உள்ளவர்களால் அது தடுத்துநிறுத்தப்பட்டது.
ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பல தரப்பினரும் மூதூரில் உள்ள ஏசிஎவ் அலுவலகத்தில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
இரண்டாவது அணியொன்று திருகோணமலையிலிருந்து தோப்பூரிற்கு சென்று இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரை சந்தித்தது.அவர்களும்; மூதூருக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பான பயணத்திற்கு அனுமதி மறுத்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.
எனினும் அன்றைய தினம் மூதூர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக காண்பிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர்கள் குழுவினரை மூதூருக்கு அழைத்து சென்றிருந்தனர்.
ஆறாம் திகதியளவில் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த எமது பணியாளர்களை உயிருடன் பார்ப்போம் என்ற நம்பிக்கை குறைவடைய தொடங்கிவிட்டது.
எனினும் ஏசிஎவ் மூதூர் சென்று நிலைமையை கண்டறிவதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து தரைவழிப்பயணத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
எனினும் கிராமமொன்றை சேர்ந்த கும்பல் வீதியை மறித்து எங்களை தடுத்ததால் எங்கள் முயற்சி மீண்டும் தடைப்பட்டது.
படகு சேவை மீண்டும் இயங்கியதும் படகு மூலம் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்.எனினும் படகின் முன்னால் எறிகணைகள் விழுந்து வெடித்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.
எனினும் அதேகாலப்பகுதியில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பு மூதூரை சென்றடைந்திருந்தது.தரைவழியாக மூதூர் சென்ற அவர்கள் ஏசிஎவ் பணியாளர்கள் சிக்குண்டிருந்த அலுவலகத்தை சென்றடைந்தனர்.
அவர்கள் அங்கு சென்றவேளை முன்வாசலிலேயே 17 மனிதாபிமான பணியாளர்களும் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை பார்த்தனர்.
கொலைகளை எங்களிற்கு அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்,குற்றம் இடம்பெற்ற இடத்தின் படங்கள் எடுக்கப்பட்டன.
பெருமளவிற்கு ஏசிஎவ்வின் திருகோணமலை பணியாளர்கள் இடம்பெற்றிருந்த குழுவினரே உடல்களை சேகரித்தனர்.
மூதூருக்கு சென்றதும் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர்கள் தாங்கள் உடல்களை சேகரிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஐந்து பொலிஸார் அவர்களை மூதூர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர், படங்கள் எடுக்ககூடாது,தொலைபேசி அழைப்பில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.
பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தை படமெடுத்தனர் ஆனால் உடல்களை சேகரிப்பதில் உதவவில்லை.ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
என்ன நடந்தது என்பதை கண்டறிவது குறித்து அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இது காணப்பட்டது.