இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் விக்னராஜ் வக்சன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அப் போட்டியை 14 நிமிடங்கள், 23.21 செக்கன்களில் வக்சன் நிறைவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பசிந்து மல்ஷான் (16.19 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் மதுஷானி ஹேரத் புதிய சாதனையுடன் (13.26 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் அதே போட்டியில் சஷினி உபேஷ்கா (12.79 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் இலங்கை அணியினர் (3:20.25) வெள்ளிப் பதக்கத்தையும் பெண்களுக்கான குண்டு எறிதலில் ஓவினி சந்த்ரசேகர (13.03 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
இதற்கு அமைய தெற்காசி மெய்வல்லுநர் சம்மேளனத்தின் 4ஆவது மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களுமாக மொத்த 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 2 தங்கங்கள் உட்பட 4 பதக்கங்கள்; மிதுன்ராஜுக்கு வெண்கலம்

இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று இலங்கைக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 4 பதக்கங்கள் கிடைத்தன.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சமோத் யோதசிங்க, பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பாத்திமா ஷபியா யாமிக் ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை வென்று தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரர், அதிவேக ஓட்ட வீராங்கனை ஆகினர்.
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமாஷா டி சில்வா வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை சமோத் யோதசிங்க 10.30 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் போட்டியில் பங்குபற்றிய டி. தியலவத்த (10.64 செக்.) நான்காம் இடத்தைப் பெற்றார்
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.53 செக்கன்களில் நிறைவு செய்த மொஹமத் பாத்திமா ஷபியா யாமிக் தங்கப் பதக்கத்தையும் 11.72 செக்கன்களில் நிறைவு செய்த அமாஷா டி சில்வா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 14.68 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவராவார்.
