முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் ராஜபக்சக்களின் காலத்தைப் போன்று, தற்போதும் தமிழர்களின் உரிமைகள் சார்ந்த முக்கியத்துவம் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு அவ்வாறான பிரச்சினைகள் இல்லை என்பதைப் போன்றதொரு பிம்பம் கடந்த அரசுகளின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. தற்போதும் அவ்வாறான நிலையே தொடர்கின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான பிளவும் இதற்குப் பிரதான காரணமாக அமைகின்றது.
பிளவுகள் இருந்தாலும், தீர்வுக்கான பொது வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒருமித்துச் செயற்பட வேண்டும். ஆளும் கட்சிக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவுத் தேர்தல்களில்கூட ஆளும் கட்சிக்குத் தோல்வி ஏற்பட்டு வருகின்றது.
எனவே, மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்கே அதிகாரத் தரப்பு முற்படக்கூடும். அதற்கான ஆயுதமாக எல்லை நிர்ணய விடயம் பயன்படுத்தப்படலாம்.
எனினும், இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பன தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதால், தேர்தல் நடத்தப்படவும் சாத்தியங்கள் உள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

