– 25 வருடங்களுக்கு பரோலில் வர முடியாத உத்தரவு

கனடா ஒட்டாவா பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தாயும், 4 குழந்தைகளும் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 மார்ச் 06ஆம் திகதி இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று ஒட்டாவா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 06 குற்றச்சாட்டுக்களில், 04 குற்றச்சாட்டுக்களை இலங்கையரான சந்தேகநபர் டி சொய்சா ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:

தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்ரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்ரமசிங்க – 04 வயது
றின்யானா விக்ரமசிங்க – 02 வயது
கெலீ விக்ரமசிங்க – 02 மாதங்கள்

காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய குடும்ப நண்பரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.

இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்ததுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு, குறைந்தபட்சம் 25 வருடங்களுக்கு பரோலில் வர முடியாத வகையில் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் அறிவித்துள்ளது.

கனடாவில் கல்வி கற்கும் பெப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa) என்ற இலங்கையருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என ஒட்டாவா மேயர் குறிப்பிட்டிருந்தார்.

கொலை இடம்பெற்ற தினத்திலேயே சந்தேகநபரான சொய்ஷா கைது செய்யப்பட்டார்.

மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தனித்ததாக ஆரம்பத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கொலையை நடத்துவதற்கு 05 நாட்களுக்கு முன்னரே தாம் திட்டத்தை வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கொண்டு, ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எவ்வித கற்றல் செயற்பாடுகளும், தொழிலும் இன்றி இருந்த சந்தேகநபர் ஒன்லைன் விளையாட்டுக்களில் தமது நேரத்தை செலவிட்டார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த ஒட்டாவா நீதிமன்றத்தின் நீதிபதி கெவின் பிலிப்ஸ், “இந்த வழக்கில் வன்முறையின் அளவு திகைப்பூட்டும், கொடூரமானதாக காணப்படுவதாக” மன்றில் அறிவித்துள்ளார்.

எனினும், விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது, ​​தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், “நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்” என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார்.

தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குலைத்து, குற்றவாளி கொலையை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply