இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உள்ளிட்ட எல்.டி.டி.ஈ தலைவர்கள் மூன்றாம் தரப்பிடம் சரணடைய ராஜபக்ஷர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பகிரங்க குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பின்வாசல் வழியாக தப்பிப்பதற்கு வாய்ப்பளிப்பதற்கு ராஜபக்ஷர்கள் முயற்சித்தனர்.

எல்.டி.டி.ஈ தலைவர்கள் இராணுவத்திடம் நேரடியாகச் சரணடைய மறுத்ததால், அவர்களை ஒரு மூன்றாம் தரப்பிடம் சரணடைய அனுமதிப்பது குறித்தும் ராஜபக்சக்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தனர்.

அவர்களது அந்த திட்டம் நிறைவேறியிருந்தால் இன்று நாட்டில் இந்த அமைதி ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

எனவே இராணுவத்தளபதியான தனது போர்க்கள மூலோபாயத்திற்கு முரணான தீர்மானங்களை எடுத்த ராஜபக்ஷர்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பொன்சேக்கா, அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோர் இராணுவ நடவடிக்கைகளை சீர்குலைக்க ஆரம்பித்துவிட்டனர்.

2008 ஜனவரியில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது, ராஜபக்ஷர்கள் எனது போர்க்கள மூலோபாயத்திற்கு முரணான ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.

அந்த நேரத்தில், நாம் வெலி ஓயாவில் படைகளை நிலைநிறுத்தி, எல்.டி.டி.ஈ படைகளை நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ந்திருந்தோம்.

எவ்வாறாயினும், எமது திட்டம் பயனற்றது என்றும் அது மோதலை நீட்டிக்கும் என்றும் என்னிடம் வாதிட்ட அந்த மூவரும், எதிரிகளை பல பக்கங்களிலிருந்தும் சூழ்வது உயிரிழப்புகளை மட்டுமே அதிகரிக்கும் எனக் கூறினர்.

அதற்குப் பதிலாக, வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடி முன்னேற்றத்தை அவர்கள் முன்மொழிந்ததோடு, அது போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் கூறினர்.

என்னை ஊக்கமிழக்கச் செய்வதற்கும் இராணுவத்தினரை தடம் புரளச் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட பரந்த முயற்சியின் ஒரு பகுதியே இதுவாகும்.

அத்தோடு போர் முடிவடைவதற்கு முந்தைய நாளான 2009 மே 17 ஆம் திகதி நான் சீனாவில் இருந்தபோதிலும், பாதுகாப்பான தகவல் தொடர்பு மூலம் கொழும்புக்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தேன்.

இருப்பினும், அன்று காலை இடம்பெற்ற ஒரு முக்கியமான கலந்துரையாடல் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து ஷவேந்திர சில்வாவுக்கு ஒரு அழைப்பு வந்ததுள்ளது.

அது தொடர்பான காணொளியை நான் வெளியிட்டிருக்கின்றேன். அந்தக் கலந்துரையாடலில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு (ஐ.சி.ஆர்.சி), சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் மற்றொரு அமைப்பின் உறுப்பினர்கள் ராபக்ஷக்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர்.

பசில் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் எல்.டி.டி.ஈ தலைவர்களுக்கு சரணடைவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தே அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இது எனது நேரடி உத்தரவுகளுக்கு எதிரானதாகும். அதாவது எல்.டி.டி.ஈ முற்றாகத் தோற்கடிக்கப்பட வேண்டும், அவர்களுக்குப் பின்வாசல் தப்பிப்பு வழிகளோ அல்லது பேச்சுவார்த்தைகளோ இருக்கக்கூடாது என்பதே என்னால் பிறப்பிக்கப்பட்டிருந்த அந்த உத்தரவாகும்.

மே 16 மாலை வேளையில், முல்லைத்தீவுக்கு வடக்கே வெள்ளமுள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் ஏரிப் பகுதிகளில் 400 மீற்றர் பரப்பளவிற்குள் எல்.டி.டி.ஈ சிக்கியிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் எல்.டி.டி.ஈ இன் தோல்வி உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அவ்வாறிருந்தும் எல்.டி.டி.ஈ தலைவர்கள் இராணுவத்திடம் நேரடியாகச் சரணடைய மறுத்ததால், அவர்களை ஒரு மூன்றாம் தரப்பிடம் சரணடைய அனுமதிப்பது குறித்து ராஜபக்சக்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அத்தகைய சரணடைவை ஏற்றுக்கொண்டு, எல்.டி.டி.ஈ இன் முக்கிய புள்ளிகளின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் தயாராக இருந்தனர்.

மே 17 அன்று ராஜபக்ஷக்களின் மனதில் இருந்த விஷம் கொண்ட எண்ணமே இதுவாகும். அவர்களின் திட்டம் நிறைவேறியிருந்தால் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான், அவரது மனைவி, கேணல் திலீபன் மற்றும் ரமேஷ் போன்றோர் இன்றும் உயிரோடு இருந்திருப்பார்கள்.

மே 17 அன்று மஹிந்த ராஜபக்ச அவர்களின் உயிரைக் காப்பாற்ற முயன்றார் என்ற உண்மையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், இப்போது பிரபலமாகிவிட்ட ‘வெள்ளைக் கொடி’ விவகாரத்தை சில ஊடகவியலாளர்கள் புனைந்துள்ளனர்.

சரணடைந்த எல்.டி.டி.ஈ உறுப்பினர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்த தான் உத்தரவிட்டதாக நிகழ்வுகளைத் எனக்கெதிராக திசைதிருப்பினர்.

முழு வெள்ளைக் கொடி சரணடைவு கதையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, எனக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. உண்மையில் நடந்ததை விட முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக அந்த விபரிப்பு மாற்றப்பட்டது.

எனவே நாடு கடும் நெருக்கடிகளை எதிர்கொண்ட போது மக்கள் கிளர்ச்சியின் போது பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டமைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றால், ஏன் நாட்டைக் காட்டிக் கொடுத்த ராஜபக்ஷர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது?

எனவே இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதில் சாட்சியமளிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அதேவேளை அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கின்றேன் என்றார்.

Share.
Leave A Reply