வெனிசூலா நாட்டின் முன்னாள் அழகுராணி மொனிக்கா ஸ்பியரையும் அவரின் துணைவரையும் சுட்டுக்கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு வெனிசூலாவின் மிஸ் வெனிசூலா அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்ற மொனிக்கா ஸ்பியரும் அவரின் துணைவரான பிரிட்டனைச் சேர்ந்த தோமஸ் பெரியும் கடந்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதி காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது அக்கார் பழுதடைந்த நிலையில் திருடர்கள் குழுவொன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் வெனிசூலா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
இக்கொலைகள் தொடர்பாக, கைது செய்யப்பட்டிருந்த ஜொரார்ட்டோ ஜோஸ் கொன்ட்ரராஸ் அல்வெராஸ் எனும் இளைஞருக்கு வெனிசூலா நீதிமன்றமொன்று நேற்றுமுன்தினம் 25 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மொனிக்கா ஸ்பியர் சுட்டுக்கொல்லப்பட்டபோது 29 வயதானவராக இருந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த தோமஸ் பெரியை (39) அவர் திருமணம் செய்திருந்தார்.
இத்தம்பதி விவாகரத்து செய்திருந்தபோதிலும் தொடர்ந்தும் நண்பர்களாக இருந்ததுடன் தமது 5 வயது மகளின் பராமரிப்பிலும் இருவரும் அக்கறை செலுத்தினர்.
அமெரிக்காவில் வசித்து வந்த மொனிக்கா ஸ்பியர்ஸ் விடுமுறைக்காக வெனிசூலாவுக்குச் சென்றிருந்தார்.
அப்போது தனது மகள் மற்றும் முன்னாள் கணவருடன் வெளிசூலாவின் கரபோபோ நகரில் இரவு நேரத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களின் கார் பழுதடைந்தது.
அதையடுத்து அவர்கள் உதவிக்காக காத்திருந்தனர்.
ஆனால், ஆயுதக் குழுவொன்று அவர்களின் வாகனத்தையும் ஏனைய பொருட்களையும் கொள்ளையிட முயன்றது.
இதைத் தடுப்பதற்காக தோமஸ் பெரியும் மொனிக்காவும் காருக்குள் புகுந்து கதவுகளை பூட்டிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது கொள்ளையர் குழு துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.