தியகமவில் மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனித்தாவும் சந்திரசேகரம் சங்கவியும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
முதலாம் நாளான நேற்றைய தினம் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவியான ஜெகதீஸ்வரன் அனித்தா 3.40 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கடும் உஷ்ணம் காரணமாக தனது சொந்த சாதனையான 3.45 மீற்றர் உயரத்தை தாவ முடியாமல் போனதாக அவர் கூறினார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரம் சங்கவி 33.05 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பவானந்தன் சாத்விகா (2.90 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் சாவகச்சேரி இந்து கல்லூரியின் பாலேந்திரன் கிரிஜா (2.90 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சுற்றியல் எறிதல் போட்டியில் பாஷையூர் புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. சுகன்யா (19.44 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் ஐ. மேரி லக்சிதா (18.74 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.