சர்வதேச நெருக்கடிகள் குறித்து அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது என்பதை, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் இலங்கைப் பயணத்தைக் கையாண்ட விதம் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளது.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் இலங்கைப் பயணம் கடந்த வாரம் கொழும்பையும் கனடாவையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.
முன்னறிவிப்பின்றியே அவர் இலங்கைக்கு வந்திருந்தாலும், அவரது வருகை பற்றிய தகவல்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், அவரது தனிப்பட்ட பயணம் கூட பொது நிகழ்ச்சிநிரலுக்குட்பட்ட ஒன்றாகிவிட்டது.
ஐந்து வயதில் மாவிட்டபுரத்தில் உள்ள தமது வீட்டை விட்டு வெளியேறி, கனடாவில் குடியேறிய ராதிகா சிற்சபேசன், கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினராக தமது சொந்த இடத்தை பார்வையிட வந்திருந்தார்.
சுற்றுலா விசாவில், தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்த அவரை, இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், அரச புலனாய்வு முகவர்களும் நிழல் போலப் பின்தொடர்ந்திருந்தனர்.
நன்கு அறியப்பட்ட ஒரு புலம்பெயர் பிரமுகராக இருந்த ராதிகா சிற்சபேசனை, கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கடவுச்சீட்டைக் கொண்டிருந்த அவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவ ரவு அதிகாரிகளால் இனங்காண்பது ஒன்றும் கடினமான காரியமில்லை.
பாதுகாப்பு அமைச் சின் கீழ், அரச புலனாய்வு அமைப்புகளுடன் நேரடித் தொடர்புடையதாக குடிவரவுத் திணைக்களம் இருக்கின்ற நிலையில், ராதிகா சிற்சபேசனால் ஒருபோதும், ஒளிந்தோ மறைந்தோ இலங்கைக்குள் வந்திருக்க முடியாது.
அவர் தன்னை வெளிப்படுத்தியோ அல்லது வெளிப்படுத்தாமலோ, அரச புலனாய்வுப் பிரிவுகளால் மோப்பம் பிடிக்கப்பட்டோ, அவரை புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்திருக்கலாம்.
கடந்த மாதம் 28 ஆம் திகதி எடிஹாட் விமானத்தில் கொழும்பு வந்த ராதிகா, மன்னார், கிளிநொச்சிப் பயணங்களை முடித்துக் கொண்டு, யாழ்ப்பாணம் சென்ற பின்னர் தான், அவர் இலங்கை வந்த விவகாரமே ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வந்தது.
அவர், ஆலயங்களுக்குச் சென்ற போதும், இடம்பெயர்ந்தோரை சந்திக்கச் சென்ற போதும், அவரைப் புலனாய்வாளர்கள் மொய்த்திருந்தனர். அதுமட்டுமன்றி, அவர் தங்கியிருந்த விடுதி கூட முழுநேரக் கண்காணிப்பிலேயே இருந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஒரு கட்டத்தில் அவர் விடுதியில் இருந்து வெளியேறவோ, யாரையும் சந்திக்கவோ விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாக, அது கனடா வரைக்கும் எதிரொலித்தது. கனேடிய அரசாங்கம் உடனடியாகவே விழிப்படைந்து. கொழும்புடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்து கொண்டது.
தாம் ராதிகாவை தடுத்து வைத்திருக்கவோ, கைது செய்ய எத்தனிக்கவோ இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், கைது செய்து நாடுகடத்த நேரிடும் என்று அச்சுறுத்தும் வகையிலும் இலங்கை அதிகாரிகள் நடந்து கொண்டதாக ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர், அவர் அத னைக் கூறவில்லை.
இலங்கையில் இருந்தபடியே தான், தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். சுற்றுலா விசாவில் வந்த ராதிகா சிற்சபேசன், பல்வேறு அரசியல் பிரமுகர்களை சந்தித்திருந்தார். பல்வேறு இடங்களுக்கச் சென்று பார்வையிட்டிருந்தார்.
அவரை, புலனாய்வாளர்களும் அதிகாரிகளும் பின்தொடர்ந்து கண்காணித்த போதிலும், கைது செய்வதற்கான முயற்சிகளில் இறங்குவது போலப் பாவனை காட்டிய போதிலும், அவரைக் கைது செய்து நாடுகடத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கவில்லை. அது ஏன் என்பது பலருக்கும் புரியாத விடயமாக இருந்தது.
கொமன்வெல்த் மாநாட்டுக்கு சில நாட்கள் முன்னதாக, நியூஸிலாந்தின் கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் இருவர், வடக்கில் தமது பயணங்களை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய போது, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதுபோலவே, சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகளான அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் பிறந்த- நோர்வேயில் வாழும் கவிஞர் ஜெயபாலன், மாங்குளம் வடகாட்டில் உள்ள தனது தாயாரின் கல்லறையில் அஞ்சலி செலுத்தச் சென்றபோது பிடிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட தமிழக ஊடகவியலாளரான மகா தமிழ் பிரபாகரன், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இவையெல்லாம் நடந்து நெடுநாட்களாகி விடவில்லை.
இவை இரண்டொரு மாதங்களுக் குள் நடந்த இலங்கை அரசாங்கத்தின் நாடு கடத்தல்கள்.
இவை அனைத்துமே சுற்றுலா விசா வில் வந்து – அதற்குரிய விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவங்களாகும். இவையெல்லாம் நடந்த சூழலில் தான், கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனும் இலங்கை வந்திருந்தார்.
ஆனால், ராதிகா விடயத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அவ்வாறு நடந்துகொள்ள முடியவில்லை.
ஏனென்றால், அண்மைய நாடு கடத்தல் சம்பவங்கள் அனைத்துக்கும் சுற்றுலா விசா விதிமுறை மீறல்களே காரணம் என்று அரசாங்கம் கூறிய போதிலும் அதனை சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் ஏற்கவில்லை.
ஊடகவியலாளர்களையும் சுதந்திரமான பார்வையாளர்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்துவதாகவும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை நசுக்குவதாகவும் தான் இவை வெளியுலகினால் பார்க்கப்பட்டன.
இத்தகைய சூழலில் ராதிகாவை கைது செய்து நாடுகடத்துவது ஒன்றும் கடினமான காரியம் இல்லாவிட்டாலும், அதன் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருந்தது. அதனால் தான், ராதிகா சிற்சபேசனால், புலனாய்வாளர்களின் தொந்தரவுகள் இருந்தாலும், தனது பயண நிகழ்ச்சித் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்ற முடிந்தது. குறிப்பாக, ஜெனீவா கூட்டத்தொடருக்கு தயாராகத் தொடங்கியுள்ள அரசாங்கத்துக்கு, ராதிகா போன்றவர்களை நாடு கடத்துவது பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து இருந்தது.
சற்று காலம்தவறியேனும் அரசாங்கம் இந்த உண்மையை புரிந்து கொண்டுள்ளது என்றே தெரிகிறது. அதுமட்டுமன்றி, மிக அண்மையில் கூட புலம்பெயர்ந்து சென்றவர்கள் மீளத் திரும்பி வரவேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ அழைப்பு விடுத்திருந்தார்.
கனடாவின் இராஜதந்திரப் பாதுகாப்பைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகாவுக்கே, அவ்வாறு திரும்ப வரமுடியாத நிலை உள்ளது என்பது உறுதியானால், அந்த அழைப்பு உண்மையானது அல்ல என்றாகி விடும்.
கவிஞர் ஜெயபாலன் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கடுமையான அழுத்தங்களை சந்திக்க நேரிட்டது.
அதாவது, தனது தாய்நாட்டில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவ மும், தனது சொந்த நிலத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்கச் சென்ற தற்காகவே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதும், புலம் பெயர் தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தவறானது என்ற கருத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய நிலையில், ராதிகா சிற்ச பேசன் நாடுகடத்தப்பட்டிருந்தால் கூட, அதன் மூலம் இலங்கைக்கு எது வும் கிடைத்து விட்டிருக்காது. மாறாக, அது பிரச்சினைகளைத் தான் ஏற்படுத்தியிருக்கும்.
தமக்குப் பிடிக்காதவர்களையெல் லாம் பிடித்து நாடு கடத்துவதென்ற கொள்கை தவறானது என்று இப்போ தாவது உணர்ந்திருந்தால், அது அர சாங்கத்துக்கு ஒரு நல்லதொரு மாற் றத்துக்கான அறிகுறியாக கருதலாம்.
ஆனால், ஜெனீவா கூட்டத்தொட ருக்குப் பின்னர், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
(ஹரிகரன்)