விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின்  இறு­திக்­கட்­டத்தில்  இலங்கை  விமா­னப்­படை கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தி­யதா என்ற விவாதம், மூன்று வாரங்­களைக் கடந்தும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

போரின்  இறு­திக்­கட்­டத்தில்  பெரு­ம­ள­வான மக்கள், கிளஸ்டர் மற்றும்  இர­சா­யனக் குண்­டு­க­ளி­னா­லேயே  மர­ண­மா­ன­தாக  மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப், இம்­மாத தொடக்­கத்தில் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த அமெரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தில் போர்க்­குற்ற  விவ­கா­ரங்­களைக் கையாளும் தூது வர் ஸ்டீபன் ரெப்­பிடம் எடுத்துக் கூறி­யி­ருந்தார்.

இதைக் கூறி­ய­தற்­காக யாழ்ப்­பாணம், மன்னார் ஆயர்­களைப் பயங்­க­ர­வா­திகள் என்றும், அவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர­சாங்கத் தரப்பில் அமைச்­சர்­க­ளாக உள்­ள­வர்­களும், சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தி­களும் போர்க்­கொடி எழுப்பி வரு­கின்­றனர்.

இலங்கை அர­சாங்கம் போரில் கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தி­ய­தான குற்­றச்­சாட்டு இப்­போது தான் கிளம்­பி­யுள்ள ஒன்று அல்ல.

அது இறு­திக்­கட்டப் போர், வன்­னியின் கிழக்குப் பக்கம் நகரத் தொடங்­கிய போதே அவ்­வப்­போது, கிபிர் போர் விமா­னங்கள் மூலம் கிளஸ்டர் குண்­டுகள் வீசப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யாகி வந்­தன.

அவ்­வாறு வீசப்­பட்ட குண்­டுகள் சில­வற்றின் படங்­களும் விடு­தலைப் புலி­களால் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. ஆனால், அர­சாங்கம் ஒரு­ போ­துமே, கிளஸ்டர் குண்­டு­களைத் தாம் போரில் பயன்­ப­டுத்­து­வ­தாக ஒத்துக் கொண்­ட­தில்லை. கிளஸ்டர் குண்­டுகள் என்­பது உலகின்  அபா­ய­க­ர­மான  ஆயு­தங்­களில் ஒன்­றாக  கணிக்­கப்­ப­டு­கி­றது.

விமா­னத்தில் இருந்து வீசப்­படும் ஒரு குண்டு, இடையில் பிரிந்து, பரந்த பிர­தேசம் எங்கும் வீழ்ந்து வெடிக்கும் திறன் கொண்­டது. இதன் மூலம் குறிப்­பிட்ட ஒரு பிர­தே­சத்தை ஆட்­க­ளற்ற பிர­தே­ச­மாக மாற்றி விட முடியும்.

2008 ஆம் ஆண்டில் உல­க­ளா­விய ரீதி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கிளஸ்டர் ஒழிப்பு பிர­க­ட­னத்தில் இது­வரை 112 நாடுகள் இணைந்து கொண்­டுள்­ளன. ஆனால், இதில் கையெ­ழுத்­தி­டாத அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 83 நாடு­களில் இலங்­கையும் உள்­ள­டங்­கு­கி­றது.

அது­மட்­டு­மன்றி, அண்மைக் காலத்தில் கிளஸ்டர் குண்­டு­களைப் பாவித்த நாடு கள் என்று 16 நாடுகள் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றில் இலங்­கையும் ஒன்­றாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், புது­டில்­லியில் உள்ள ஏ.பி. செய்­தி­யாளர் ரவி நெஸ்மன், இலங்­கையில் போரின் போது கிளஸ்டர் குண்டு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தான தக­வலை அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருந் தார்.

வன்­னியில், கண்­ணி­வெ­டி­களை அகற்றும்  பணியில்  ஈடு­பட்­டி­ருந்த ஐ.நா அபி­வி­ருத்தித் திட்ட அதி­கா­ரி­யான, அலன் போஸ்டன், வெடிக்­காத கிளஸ்டர் குண்­டு­களை தாம் மீட்­டுள்­ள­தாக, அவ­ருக்கு தகவல் வழங்­கி­யி­ருந்தார். ஆனால் அதனை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருந்­தது.

இறுதிப் போர் நடந்த பகு­தி­களை இரா­ணுவம் துப்­ப­ரவு செய்த பின்­னரே, அந்தப் பகு­திக்கு ஏனைய கண்­ணி­வெடி அகற்றும் குழுக்கள் அனு­ம­திக்­கப்­பட்­டன.  எனவே, போரின் இறு­திக்­கட்­டத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட குண்­டுகள் தொடர்­பான ஆதா­ரங்கள் பல­வற்றைப் படை­யி னர் முன்­னரே மறைத்து விட்­ட­தாக கூறப்­ப­டு­வ­துண்டு.

தாம் ஒரு­போதும் கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தி­ய­தில்லை என்று அர­சாங்­கமும் படைத்­த­ரப்பும் கூறி வந்­த ­தற்கு இந்தத் துணிவு கூட கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம்.

அண்­மையில், மன்னார் ஆயரின் குற்­றச்­சாட்டை மறுத்த இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய, தாம் கிளஸ்டர் குண்­டு­களை ஒரு­போதும் பயன்­ப­டுத்­தி­ய­தில்லை என்று மட்டும் கூற­வில்லை. கிளஸ்டர் குண்­டு­களை ஏவும் வச­திகள் இலங்கைப் படை­யி­ன­ரிடம் கிடை­யாது என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், அதற்கு முர­ணான வகையில், கருத்து வெளி­யிட்­டுள்ளார் முன்னாள் விமா­னப்­படைத் தள­ப­தி­யான எயர் மார் ஷல் றொசான் குண­தி­லக. கிளஸ்டர் குண்­டு­களை பயன்­ப­டுத்தும் வச­திகள் இருந்­தாலும், தாம் ஒரு­போதும் அவற்றைப் பயன்­ப­டுத்­தி­யது கிடை­யாது என்று அவர் கூறி­யுள்ளார்.

இலங்கை விமா­னப்­படை போரில் பயன்­ப­டுத்­திய, இஸ்­ரே­லிய தயா­ரிப்பு கிபிர், ரஷ்யத் தயா­ரிப்பு மிக் – 27, சீனத் தயா­ரிப்பு எவ்- 7 ஆகிய தரைத் தாக்­குதல் விமா­னங்­களில் கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்தும் வச­திகள் உள்­ளன.

போரில், கிளஸ்டர் குண்­டு­களை மனி­தர்­க­ளுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­து­வதை விட, விமான ஓடு­பா­தை­களை அழிப்­ப­தற்கு பயன்­ப­டுத்­து­வதே முக்­கி­ய­மா­னது.

விமான ஓடு­பா­தை­களை சேதப்­ப­டுத்தி, எதி­ரியின் போர் விமா­னங்­களை தரை­யி­லேயே செய­லி­ழக்க வைக்க கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்­து­வது வழக் கம்.

எனவே, அமெ­ரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா போன்ற நாடு­களால் வடி­வ­மைக்­கப்­படும் போர் விமா­னங்­களில் குறிப்­பாக, தரைத் தாக்­குதல் விமா­னங்­ களில் ஓடு­பா­தை­களை அழிக்கும் கிளஸ் டர் குண்­டு­களை செலுத்தும் வச­திகள் நிச்­சயம் இருக்கும்.

ஆனால், அந்த போர் விமா­னங்­களைப் பயன்­ப­டுத்தும் எல்லா நாடு­களும் அதற்­கு­ரிய கிளஸ்டர் குண்­டு­களை வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சியம் கிடை­யாது.

இலங்கை அர­சாங்­கமோ, கிளஸ்டர் குண்­டுகள் தம்­மிடம் இல்லை என்­கி­றது.

ஆனால், ஒரு கட்­டத்தில் தமக்கு அமெ ­ரிக்­காவே கிளஸ்டர் குண்­டு­களை கொள்­வ­னவு செய்­யு­மாறு ஆலோ­சனை கூறி­ய­ தான தக­வ­லையும் அர­சாங்கம் வெளி­யிட்­டது. அது கிளஸ்டர் குண்டு குற்­றச்­சாட்டில் அமெ­ரிக்­கா­வையும் மாட்டி விடும் நோக்­கி­லா­னது.

2002 ஆம் ஆண்டு, விடு­தலைப் புலி­களுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்­கத்­துக்கும்  இடையில் போர்­நி­றுத்தம் நடை­மு­றைக்கு வந்த பின்னர், இலங்கைப் படை­யி­னரைப் பலப்­ப­டுத்­து­வது குறித்து அமெ­ரிக்கா அறிக்கை ஒன்றைத் தயா­ரித்­தி­ருந்­தது.

அமெ­ரிக்­காவின் பசுபிக் கட்­டளைப் பீடத்தை சேர்ந்த முப்­படை அதி­கா­ரிகள் குழு, 2002 செப்­டெம்பர் 12 ஆம் திகதி தொடக்கம் ஒக்­டோபர் 24 ஆம் திகதி வரை­யான காலப் பகு­தியில், ஒரு விரி­வான ஆய்வை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

மூன்றாம் கட்ட  ஈழப்­போரில் இலங்கைப் படை­யினர்  புலி­க­ளிடம் கண்­டி­ருந்த தோல்­வி­களை அடிப்­ப­டை­யாக வைத்து, அதற்­கான கார­ணங்­களை மதிப்­பிட்டு, மீண்டும் ஒரு போர் வெடித்தால் அதற்குத் தயா­ராக இருக்கச் செய்­வதற்கான ஆய்வே அது. இதன்­போது, இரு­த­ரப்பு ஆயு­த­பலம், ஆட்­பலம், படைத்­த­ளங்­களின் பாது­காப்பு, உள்­ளிட்ட அனைத்தும் கவ­னத்தில் எடுக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து அமெ­ரிக்க பசுபிக் கட்­டளைப் பீடம் சமர்ப்­பித்த அறிக்­கையின் பெரும்­பா­லான அம்­சங்­களை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­டது.

அந்த அறிக்­கையில் தான், கிளஸ்டர் குண்­டு­களை விமா­னப்­படை கொள்­வ­னவு செய்ய வேண்டும் என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது. அதைத் தாம் நிரா­க­ரித்து விட்­ட­தாக இலங்கை அர­சாங்கம் கூறி­யி­ருந்­தாலும், அமெ­ரிக்­கா­வுக்குத் தெரியாமல் ரஷ்­யா­வி­டமோ, சீனா­வி­டமோ அவற்றை இலங்கை அர­சாங்கம் கொள்­வ­னவு செய்­தி­ருக்­கலாம்.

ஏனென்றால், போரின் இறு­திக்­கட்­டத்தில் பெரும்­பா­லான ஆயு­தங்­களை இந்த நாடுகள் தான் இலங்­கைக்கு விநி­யோ­கித்­தி­ருந்­தன.

இலங்கை அர­சாங்கம், கிளஸ்டர் குண்­டு­களைப் போரில் பயன்­ப­டுத்­தி­ய­தாக, கூறினால் கூட, அதற்­கெ­தி­ராக எதுவும் செய்ய முடி­யாது.

ஏனென்றால், கிளஸ்டர் எதிர்ப்பு பிர­க­ட­னத்தில் இலங்கை கையெ­ழுத்­தி­ட­வில்லை.

ஆனால், போரின் இறு­திக்­கட்­டத்தில் கிளஸ்டர் குண்­டு­களை பயன்­ப­டுத்­தி­ய­தாக ஒத்துக் கொண்­டாலோ, அவை பயன்­ப­டுத்­தப்­பட்­டது உறுதி செய்­யப்­பட்­டாலோ இலங்­கைக்கு சிக்­க­லாகி விடும்.

பொதுமக்கள் செறிவாக குவிந்திருந்த ஒரு பிரதேசத்தில் பேரழிவை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக வகைப் படுத்தப்படக் கூடிய ஆபத்து உள்ளது.

அதனால் தான், கிளஸ்டர் குண்டுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் வந்ததுமே அரச தரப்பு அடியோடு நிராகரித்து வருகிறது.

போரில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன் படுத்தியதற்கான தடயங்களை அரச படை யினர் அழித்து விட்டிருக்கலாம்.

ஆனால், வெடிக்காத குண்டுகள் அனைத் தையும் அவர்களால் கண்டுபிடித்து அழித்தி ருக்க முடியாது.

அத்தகைய குண்டுகள் ஏதாவது வெளி நாட்டு கண்ணிவெடி அகற்றும் குழுக்களிடம் சிக்கியிருந்தால், அவை ஐ.நாவுக்கோ அமெ ரிக்காவுக்கோ முக்கியமான சான்றுப் பொரு ளாக கிடைத்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை.

(சுபத்ரா)

Share.
Leave A Reply