தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை அவதூறுக்கு உட்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் கட்டுரையை வெளியிட்டவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக உள்ளக மட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியானது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்தில் நேற்று வரை நீடித்த குறித்த விடயத்துக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் புதிதானவைஅல்லவெனவும் தமிழகத்தின் கடந்தகால மன நிலையையே இப்போராட்டங்கள் தற்போதும் வெளிப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழக முதல்வர் ஜெயலலித்தாவை அவதூறு செய்யும் விதமாக கருத்துக்கள் இருப்பதாக கூறியும் அதற்கு இலங்கையின் ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் உறுதியான நடவடிக்கைகள் அவசியம் எனவும் குறித்த கட்டுரையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று தமிழகமெங்கும் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கேசபிரிகேடியர் ருவான் வணிக சூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் திரை உலகினர்,அ.தி.மு.க. வினர்,தமிழக வழக்கறிஞர்கள், எம்.ஜி.ஆர்.முன்னேற்றக்கழகத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும் நேற்று தமிழகமெங்கும் போராட்டங்களை மேற்கொண்டனர்.
அத்துடன் நேற்று முன் தினம் திருச்சியில் உள்ள � லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினம் இலங்கையிலிருந்து சென்ற 15 வயதுக்கு உட்பட்ட தேசிய கிரிக்கட் அணி சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த வருடங்களில் இவ்வாறான ஏராளமான எதிர்ப்புக்களுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.
இலங்கையின் இராணுவ, கடற்படை வீரர்களுக்கு தமிழக எல்லைக்குள் பயிர்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுவதை அவர்கள் எதிர்த்தனர். அத்துடன் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் கடந்த ஆண்டு பங்குபற்றவும் தமிழகத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் இலங்கை பிரஜைகளும் பாதுகாப்பற்ற சூழல் ஒன்றுக்கு முகம் கொடுத்திருந்ததை மறுக்க முடியாது.
இந் நிலையில் இப்போராட்டங்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல. அவை தமிழகத்தின் பழைய மன நிலையை அப்படியே படம்பிடித்துக்காட்டுகின்றன. அவர்களது மன நிலையையே அவை வெளிப்படுத்துகின்றது.
குறித்த கட்டுரையையை வெ ளியிட்டமை தொடர்பில் நாம் மன்னிப்பு கோரினோம். அதனை இணையத்திலிருந்தும் நீக்கிவிட்டோம். அந்த கட்டுரையை எமது அனுமதியின்றி பிரசுரித்த நபருக்கு எதிராக அமைச்சு மட்டதில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அமைச்சு என்ற ரீதியில் அதனை நாம் முன்னெடுத்துள்ளோம் என்றார்.