கூடலூர்: இந்த நாற்பதாண்டு காலம் நான் இல்லாமல் போயிருந்தால் இசையுலகம் எப்படி இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினார் இசைஞானி இளையராஜா. கூடலூரில் உள்ள தனது லோயர் கேம்ப் இல்லத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் இளையராஜா இந்த கேள்வியை எழுப்பிய போது, இசை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும் என்று ரசிகர்கள் பதில் கூறினர். ஆனால் அதற்கு இளையராஜா சொன்ன பதில் வேறாக இருந்தது.

25-ilaiyaraaja-speaks-on-40-years-of-his-music-600

அவரது பேச்சின் ஒரு பகுதி: நல்ல இசை என்பது ஒரு மனிதனைப் பண்படுத்த வேண்டும். மனதை சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும். எத்தனை படங்களில் கத்தியும் ரத்தமும் வன்முறையும் கொப்பளித்தாலும், என் சப்த ஸ்வரம் அதை சரிப்படுத்தும்.அந்த வன்முறையைக் குறைத்து நல்ல மனநிலையுடன் உங்களை அந்தப் படத்துக்குள் இழுத்துப் போவதுதான் அந்த இசை. ஆனால் நான் ஒரு சூழலுக்குரிய இசையை உருவாக்கும் பொழுது அந்த மனநிலையில் போடுவதில்லை.

அது தானாக வருவது. சிந்தித்து மண்டையை உடைத்துக் கொண்டு, எதிலிருந்து திருடலாம் என்று யோசித்துப் போடப்படுவதல்ல என் இசை. உங்க பாட்டைக் கேட்காம என்னால தூங்கவே முடியாது சார்ங்றான்… அதே போல, காலையில் உங்க பாடல்தான் சார் எங்களை எழுப்புதுங்கறாங்க..

அதே போல இங்கே பேசிய அத்தனை அன்பர்களும் அவங்களோட வாழ்க்கையில பின்னிப் பிணைஞ்ச இந்த இசை பத்தி சொன்னாங்க.. இது யார்ன்னால சாத்தியம்.. இந்த நாற்பது வருஷ இசை வந்து… நான் இல்லேன்னு வச்சுக்கங்க… எம்ப்டியா, ஒரு சூனியமா இருந்திருக்காது..?

இதை யார் ஏற்படுத்துனது… என்னை இந்த உலகத்துக்குள்ள போடா கிடடா நாயேன்னு கடவுள் என்ன இசை உலகத்துக்குள்ளயே இருக்க வச்சிட்டான்.

நல்ல வேளை நான் வெளி உலகத்தில் இல்ல! சப்தஸ்வரங்களுக்குள்ளேயும், இப்படிப் பாடு, அப்படிப் பாடு, இப்படி வாசி-ன்னும் என்னை இசை உலகத்தோடேயே இருக்க வச்சிட்டான்!!” -இவ்வாறு இளையராஜா பேசினார்.

Share.
Leave A Reply