காலத்திற்கு காலம் மாற்றங்கள் பல நாட்டில் இடம்பெறுகின்றமை வழக்கமானது. ஏதோ ஓர் வழிமுறையில் பல்வேறு மாற்றங்களுக்கு அனைவரும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையில் தற்போதும் அவ்வாறான பல மாற்றங்கள் நிறைந்த காலப்பகுதியாக இக்காலம் அமைந்துள்ளது.
இன்று நாட்டில் சூடுபிடித்துள்ள அரசியல் நிலைமைகளுக்கு அமைய பலர் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். இல்லையேல் விரும்புகின்றனர் என்று கூற வேண்டும். கடந்த காலங்களை போன்ற வகையில் இல்லாது இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பல மாற்றங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தரப்பினர் மிக உறுதியான வெற்றியினை கைப்பற்றுவர் என்பது தெளிவாக தெரிந்தது.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் தமது வெற்றியினை தக்க வைத்துக்கொண்டனர். இது 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இராணுவம் வெற்றியடைந்தமை மற்றும் சிங்கள பெளத்த மக்கள் தமது ஆதரவினை வெளிப்படு த்தியமையினால் 57 வீதத்தினர் அரச வெற்றியினை தக்க வைத்தனர்.
எதிரணியில் பல கட்சிகளின் கூட்டணியில் இராணுவ நாயகன் சரத் பொன்சேகா களமிறங்கியும் தமது வெற்றியினை உறுதிப்படுத்த முடியவில்லை. நாட்டில் பெரும்பான்மை சமூகம் முழுமையாக அரசாங்கத்தினை ஆதரித்தமையும் தேசியத் தலைவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சித்திரித்தமையுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மிகப்பெரிய வெற்றியினை பெற்றுக்கொள்ளக் காரணமாக அமைந்தது.
மேலும் இக்காலப் பகுதியில் பல பேரினவாத செயற்பாடுகள் மற்றும் சர்வதேச தலையீடுகள் அரசாங்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்தியமை சகலருக்கும் நன்று தெரிந்த விடயமே.
எனினும் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் கடந்த தேர்தலைப் போல் அரசாங்கத்திற்கு நம்பிக்கையானதொரு தேர்தலாகவோ அல்லது ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாக்கப்பட்டுள்ள தேர்தலாகவோ கருத்திற்கொள்ள முடியாது.
ஏனெனில் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் தவிர்த்து ஏனைய பெரும்பான்மை வாக்குகளில் 80 வீதமான வாக்குகள் அரசாங்கத்திற்கு கிடைத்தது.
எனினும் அன்று அரசாங்கம் கூறிய கருத்துக்கள், உதாரணங்கள் எவையும் இன்று பெரும்பான்மை மக்களிடையே ஏடுபடாது போய்விட்டன. ஏனெனில் அன்று மக்கள் நாட்டில் அமைதியையும், சுதந்திரத்தையும் தீவிரவாதமில்லாத சுத்தமானதொரு நாட்டினை விரும்பினர்.
எனவே அப்போதைய நிலையில் நாட்டின் பொருளாதார சிக்கலோ அல்லது வாழ்க்கைச் செலவோ மக்களுக்குத் தெரியவில்லை. ஆயுத போராட்டம், தனி ஈழக் கொள்கையில் விடுதலைப் புலிகள் போராடிக்கொண்டிருந்த போது சகல கட்சிகளும் ஆயுதப் போராட்டத்தினை எதிர்த்தன.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஓர் அணியில் ஒன்று திரட்டும் முயற்சி பலரால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அடுத்த ஆண்டுகளில் பொய்யாகி விட்டது. தொடர்ந்தும் யுத்தம் என்ற கதையினை மாத்திரமே இந்த அரசாங்கம் பேசியதே தவிர மக்களின் நிலைமைகள் தொடர்பில் அக்கறை செலுத்துவதில் சற்று பின்நின்று விட்டது என்றே கூற வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியிருந்தும் அரசாங்கத்தின் பிரசார மேடைகள் முதற்கொண்டு அரச நிகழ்வுகள், சர்வதேச மாநாடுகள் வரை யில் விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியினை மாத்திரமே பறைசாற்றுகின்றனரே தவிர மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்பில் அக்கறை செலுத்தியது மிகவும் குறைவானதே.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கும் இடையில் பல ஒற்றுமைகளை காண முடிகின்றது.
அதேபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பல அச்சுறுத்தலான எச்சரிக்கை அறிகுறிகளும் தென்படுகின்றன. 2005இல் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்கு மிகவும் துணை நின்றவர்கள் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்கள கட்சிகள்.
மக்கள் விடுதலை முன்னணியினர் கம்யூனிசக் கட்சியென தம்மை அடையாளம் காட்டிக்கொண்டவர்கள் என்றாலும் நாட்டில் விடுதலைப் புலிகளை அழித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தினை மையப்படுத்தி ஆளும் தரப்பினருடன் கைகோர்த்தனர்.
அதே சந்தர்ப்பத்தில் 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் கைகோர்த்து 41 ஆசனங்களை பாராளுமன்றிற்கு பெற்றுக்கொடுத்ததுடன் இலங்கை அரசியல் வரலாற்றில் ஓர் தேர்தலில் கட்சி பெற்ற இரண்டாவது அதிகூடிய ஆசனத்தொகை இதுவேயாகும்.
2004ஆம் ஆண்டே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் கைகோர்த்து அரசை பலப்படுத்தியது மட்டுமன்றி 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களையும், பல எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பெளத்த சிங்கள வாக்குகளை குவித்தனர்.
அதேபோல் ஜாதிக ஹெல உறுமயவினரும் 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 9 ஆசனங்களை வென்றெடுத்ததுடன் அத் தேர்தலில் 5 இலட்சத்து 52 ஆயிரத்து 724 வாக்குகளைப் பெற்றிருந்தனர். அதேபோல் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அரசாங்கத்தை பலப்படுத்திய மிக முக்கியமான கட்சியாக விளங்கியது.
இவர்கள் இருவரும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ததுடன் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை அழிக்க இவ் இரு கட்சிகளும் அரசியல் ரீதியில் மிகப்பெரும் சக்தியாக விளங்கின.
என்றாலும் அதில் தவறில்லை. அன்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தங்கள், பயங்கரவாதத்திற்கு துணைபோகும் செயற்பாட்டினை எதிர்க்கட்சி செய்து விட்டதென்பதை இவர்களினால் தெளிவாகவும் உறுதியாகவும் பிரசாரம் செய்ய முடிந்தது.
எனினும் இவ்விரு கட்சிகளிடையேயும் ஓர் ஒற்றுமைத் தன்மையும் காணப்பட்டது. அதாவது யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.
நாட்டில் வடக்கு தொடக்கம் தெற்கு வரையில் ஒரே அரசியல், சமூக சூழ்நிலை காணப்பட வேண்டும் என்பதையும் தாண்டி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
ஜாதிக ஹெல உறுமய இக் கொள்கையில் சற்று பின்வாங்கிக் கொண்டிருந்தாலும் மக்கள் விடுதலை முன்னணியினர் மிகவும் தெளிவான கொள்கையில் செயற்பட்டனர்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி. யினர் தெரிவித்திருந்தபோது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க வேண்டும் என்ற உடன்படிக்கையினையும் முன்வைத்திருந்தனர்.
அதன் பின்னர் ஜே.வி.பி. அரசை விட்டு வெளியேறவும் இவ் உடன்படிக்கையினை அரசு ஏமாற்றியமையே காரணமாகும். அதேபோல் ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்தும் 2010 ஜனாதிபதி தேர்தலிலும் அரசாங்கத்தை பலப்படுத்தியதோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை அகற்றுவது தொடர்பில் மெளனம் காத்தது.
எனினும் அதன் பின்னர் ஒரு சில சந்தர்ப்பங்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கி நாட்டில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக தெரிவிக்க ஆரம்பித்தனர்.
இறுதிக் காலத்தில் அதாவது தற்போது ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான நோக்கமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க வேண்டும் என்பதை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
தற்போது இவர்கள் ஆளும் தரப்பினரை நிராகரித்து பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவும் இவ் நிறைவேற்று முறைமையின் மீது கொண்ட அதிருப்தியே காரணம். எனவே மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு கட்சிகளும் அரசாங்கத்தை நிராகரிக்கவும், தமது ஆதரவினை விலக்கிக்கொள்ளவும் இவ் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் மீதான அதிருப்தியும், அரசு செய்யும் ஏமாற்று வேலையுமே காரணமாக அமைந்து விட்டது.
இன்று இவ் இரு கட்சிகளும் ஒரே கொள்கைத் திட்டத்தில் ஒரு கோட்பாட்டில் நிற்கின்றன. 2004ஆம் ஆண்டு எவ்வாறு அரசாங்கத்தை பலப்படுத்திய இவர்கள் இன்று அதே அரசாங்கத்திற்கு எதிராகவே முரண்பட்டு நிற்கின்றனர்.
இன்று ஜனாதிபதித் தேர்தலில் இரு பெரும் தூண்கள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. யுத்தத்தினை வென்று நாட்டில் தீவிரவாதத்தினை அழித்த தலைவரும் அதே அரசாங்கத்தில் இருந்து யுத்தத்திற்கு துணை நின்ற செயலாளருமே ஒருவருக்கு ஒருவர் சவாலாக இரு அணிகளில் போட்டி போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது உறவினர்களின் உதவியுடனும் அரசாங்கத்தின் ஒரு சில கூட்டுக் கட்சிகளுடனும் களத்தில் இறங்கியிருக்கின்ற நிலையில் மறுபடியும் மைத்திரிபால சிறிசேன தனக்கென பொது எதிரணியினை தயார்ப்படுத்திக்கொண்டு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினையும் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தயாராகியிருக்கின்றார்.
ஆனால் இவை அனைத்தும் தெரிந்த விடயமாக இருந்தும் இதற்கு அப்பால் ஓர் சுவாரஷ்யமான தன்மை உள்ளது.
அதாவது 2004ஆம் ஆண்டில் அரசாங்கத்தை பலப்படுத்த, அரசாங்கம் வெற்றி பெற பிரதான பங்கினை வகித்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு கட்சிகளும் இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவரின் கரங்களை பலப்படுதவுள்ளன. இது பொது எதிரணிக்கு மிகப்பெரிய சக்தியாக மாற்றம் பெற்றுள்ளது என கூறுவதில் தவறில்லை.
மக்கள் விடுதலை முன்னணியினர் இன்னமும் வெளிப்படையாக பொது எதிரணியினரை ஆதரிப்பது தொடர்பில் தெரிவிக்காவிடினும் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை வீழ்த்த சகல நடவடிக்கைகளையும் எடுப்போம். இம்முறையோடு அரசாங்கத்தின் குடும்ப அரசியல் வீழ்ச்சி காண வேண்டும் என வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர்.
எனவே இரு அணிகளின் மோதலில் ஓர் அணிக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்குவது அடுத்த அணியின் வெற்றிக்கே வழிவகுக்கும். எனவே மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜே.வி.பி. மறைமுகமாக தமது ஆதரவினை வழங்குகின்றது என்பதே உண்மை.
அதேபோல் ஜாதிக ஹெல உறுமய தாம் நேரடியாகவே பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியினை வீழ்த்துவதற்கு சகல விதத்திலும் உதவுவதாகத் தெரிவித்துள்ளது.
எனவே 2004ஆம் ஆண்டின் அதே இரு கட்சிகளின் பலமும் 2014ஆம் ஆண்டில் கைகோர்த்துள்ளன. இது மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் தமது பலத்தில் பாதியினை இழந்து ஒரு சிலரின் நம்பிக்கையுடன் மாத்திரமே களத்தில் இறங்குகின்றது.
அதேபோல் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலர் இன்று பொது எதிரணியில் பொது மேடையில் வீற்றிருப்பதும் ஏனைய எதிர்க்கட்சிகள் இக்கூட்டணியுடன் கைகோர்த்திருப்பதும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பாதி நம்பிக்கையினை ஏற்படு த்தியுள்ளது.
எனினும் தமது வெற்றியினை தீர்மானிக்கும் சக்தி மக்களிடையே உள்ளது. சிறுபான்மை தலைமைகள் இல்லாவிடினும் சிறுபான்மை வாக்குகள் யாருக்கு என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது.
ஆனால் பெரும்பான்மை சமூகம் தமது மனச்சாட்சியின் படியா? அல்லது அறிவின் படியா? வாக்களிக்கும் என்பது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியது.
எனவே யார் யாருடன் இருக்கின்றனர். யார் எந்த வேட்பாளருக்கு தமது வாக்கினை வழங்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மாற்றம் என்ற சொல்லை தவிர மற்றைய அனைத்தும் மாறக்கூடியது என்பதற்கு அமைய இம்முறை மாற்றம் ஏற்படுமா அல்லது மஹிந்த ராஜபக் ஷ அரசு தன்னை தொடர்ந்தும் நிலைநாட்டி புதிய அரசியல் வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-ஆர்.யசி –