இலங்கையின் வடக்கே கிளிநொச்சி பாரதிபுரத்தில் இரண்டு குழந்தைகளை இராணுவ சிப்பாய் ஒருவர் காரணமின்றி தாக்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.
வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்களான 6 வயது மற்றும் 2 வயதான குழந்தைகளே இவ்வாறு தாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெற வேண்டும் என்று குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டிருப்பததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால், இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
6 வயதான பிருந்தா, 2 வயதான கிருஷாந்த் ஆகிய இரண்டு குழந்தைகளுமே இவ்வாறு தாக்கப்பட்டு இராணுவ சப்பாத்து காலினால் மிதிக்கப்பட்டதாகவும் நாடடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழோசையிடம் கூறினார்.
இரண்டு குழந்தைகளும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகளின் வீட்டருகில் தையல் கடை வைத்திருப்பவரான மாமா முறை உறவினர் ஒருவர் குழந்தைகள் தாக்கப்பட்ட காரணத்தைக் கேட்டபோது, அவரையும் அந்தச் சிப்பாய் தலையில் தடியாலும் வாளி ஒன்றினாலும் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் சிறிதரன் கூறினார்.
அவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற இராணுவ அடக்குமுறையின் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இவ்வாறு சிறுவர்கள் மீதான இராணுவ தாக்குதல்கள் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ள போதிலும் அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள சிறிதரன், இது தொடர்பாக மனித உரிமைகள் அமைப்பு மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பினரதும் காவல்துறையினரதும் கருத்துக்களை உடனடியாக அறிய முடியவில்லை.
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் ‘குர்பானும்’ கொடுக்க முடியாமல் போகும் – அஸ்வர்
மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு உணவு கிடைக்காது. அதேபோன்று ‘குர்பானும்’ கொடுக்க முடியாமல் போகும் எனத்தெரிவிக்கும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழில் ஒருவிதமாகவும் சிங்களத்தில் இன்னொரு விதமாகவும் மிருக வதையை ஒழிக்கும் விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்;
ரிஷாத் உட்பட சுமார் 72 ஆயிரம் முஸ்லிம்கள் கடல்மார்க்கமாக கல்பிட்டிக்கு வந்து சேர்ந்த பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன். மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் எதிரியாவார். நாணயத்தின் ஒரு பக்கம் பொதுபலசேனா என்றால் மறு பக்கம் மைத்திரிபால ஆகும்.
பொலனறுவையில் முஸ்லிம் அரிசி ஆலை உரிமையாளர்களை இரவோடிரவாக அவர் விரட்டியவர். முஸ்லிம்களுக்கு பொருளாதார அழிவை அவர் கொண்டு வந்தார்.
மைத்திரிபால சிறிசேன ஒரு முஸ்லிம் விழாவுக்கும் வருவதில்லை. ஒவ்வொரு தரப்பினருடனும் வெவ்வேறுபட்ட இரகசிய ஒப்பந்தங்களை இவர் செய்துள்ளார் என்றும் கூறினார்.
த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர் மீது சரமாரியாக தாக்குதல்
04-01-2014
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த ஏ.யோகராஜா (63வயது) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக நண்பருக்கு காத்திருந்தபோது சிவன் ஆலயத்துக்கு முன்பாகவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் தலைக் கவசனத்தினால் முகத்தினை மூடிவந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்தவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் காவலரண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.