சிறிலங்காவின் புதிய அதிபராக, புதிய ஜனநாயக முன்னணியின் சின்னத்தின் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர்.
சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மைத்திரிபால சிறிசேன நேற்றைய தேர்தலில் 6,217,162 வாக்குகளைப் பெற்று (51.28%) தெரிவாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச, 5,768,090 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார். அவர், 47.58% வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகிந்த ராஜபக்சவை விட 449,072 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த முறையில் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜோன் கெர்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் அமைதியான முறையில் சுயாதீனமான தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையாளர், சிவில் சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரிக்கு மோடி வாழ்த்து
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைதியான மற்றும் ஜனநாயகமான தேர்தலை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மைத்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.