சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்துள்ளதுடன் கட்சியின் புதிய தலைவராக அவரை தெரிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அத்துடன் கட்சியின் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் தேசிய அமைப்பாளராக ஜனக பண்டார தென்னக்கோனும் பொருளாளராக
எஸ்.பி. நாவின்னவும் போஷகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் அதில் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் தகவல் அளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.நாவின்ன, பியசேன கமகே, சரத் அமுனுகம, ரெஜினோல்ட் குரே, அதாவுட செனவிரத்ன, ஜனக பண்டார தென்னகோன்,
விஜித் விஜிதமுனி சொய்சா, ஜகத் புஷ்பகுமார மற்றும் வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தமது ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிப்பதாக அறிவித்தனர்.
அந்த செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க குறிப்பிடுகையில்;
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்று புனித நாள். மத்திய குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒன்றுகூடி சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் புதிய தலைவராக மத்திய குழுவால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். இது கட்சிக்கு புதிய விடயமல்ல.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நாட்டின் உயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் சுதந்திரக் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்பது கட்சியின் யாப்பில் உள்ள விடயமாகும்.
அந்த வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகியதும் சந்திரிகாவுக்கு பதிலாக தலைவராக தெரிவானார்.
இந்நிலையில் தற்போதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சியின் செயலாளராகவிருந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவரை கட்சியின் தலைவராக யாப்பின் படி நியமித்துள்ளோம்.
அத்துடன் கட்சியின் செயலாளராக துமிந்த திசாநாயக்க ஆகிய நானும் தேசிய அமைப்பாளராக ஜனக பண்டார தென்னகோனும் பொருளாளராக எஸ்.பி. நாவின்னவும் நியமிக்கப்பட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கட்சியின் போஷகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எமது இந்த தீர்மானங்களுக்கு பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். அந்த வகையில் சுதந்திரக் கட்சி இன்று புதிய யுகம் படைக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் தெரிவானது அனைத்து மக்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் இணைந்து எமது தலைவரை தெரிவு செய்துள்ளனர். எனவே அவருக்கு அனைவரும் செவி சாய்க்க வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா குறிப்பிடுகையில், சுதந்திரக் கட்சியின் யாப்பின் 12 அ (1) பிரிவின் படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சியிலிருந்து விலக்கியதை மத்திய குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சூன்யப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறு சூன்யப்படுத்தப்பட்ட பின்னர் அதற்குப் பின்னர் எந்த செயற்பாடும் செல்லுபடியாகாது. உதாரணமாக ஜனாதிபதி மைத்திரிபாலவை கட்சியிலிருந்து விலக்கியமை சூன்யப்படுத்தப்பட்டுள்ளதால் அதன் பின்னர் அக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டமை என்பன செல்லுபடியற்றதாகிவிடும்.
அது மட்டுமன்றி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நாட்டின் உயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் சுதந்திரக் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்பது கட்சியின் யாப்பில் உள்ள விடயமாகும். அதன்படியே நாங்கள் இதனைச் செய்துள்ளோம்.
அந்த வகையில் கட்சியின் யாப்பின் படி தற்போது நாங்கள் கட்சிக்கான ஏனைய நிர்வாக உறுப்பினர்களையும் தெரிவு செய்துள்ளோம். மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எம்முடன் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்றார்.
சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவே! மத்திய குழு தீர்மானம் என்கிறார் சிறிபால டி சில்வா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நீடிப்பதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் 41 மத்தியகுழு உறுப்பினர்களே இந்த அனுமதியை நேற்று மாலை 4.00 மணிக்கு ஏகமனதாக வழங்கியதாகவும் முன்னாள் அமை ச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையக கட்டிடத்தில் நேற்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்ந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மைத்திரிபால சிரிசேனவும், செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சில உறுப்பினர்கள் சேர்ந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இது முற்றிலும் பொய்யான தகவலாகும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெரும்பாலான மத்திய சபை உறுப்பினர்கள் அதாவது 41 பேர் ஒன்று கூடி நாம் மஹிந்த ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நாம் தெரிவு செய்துள்ளோம்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமிப்பு சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட ஒருவரையே தெரிவு செய்ய முடியும். மாற்றமாக கட்சி அங்கீகரித்த உறுப்பினரை எதிர்த்து போட்டியிட்ட ஒருவர் தெரிவு செய்யப்பட முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
சிலர் கூடி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர், தலைவரை அறிவித்துள்ளமை போலியானதாகும். எங்களுடனேயே பெரும்பான்மையானோர் உள்ளனர். 53 உறுப்பினர்களில் 41 பேர் எம்முடனேயே உள்ளனர். என்றார்.
இதன் போது உரையாற்றிய முன்னாள் அமிச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கருத்து தெரிவிக்கையில்:
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் நானே. தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர நாம் அனுமதியளித்துள்ளோம். எமது மத்திய குழு இங்கு கூடி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. என்றார்.
இதனை அடுத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டைப்பின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
சிலர் எங்கோ ஒரு இடத்தில் ஒன்று கூடிவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், செயலாளர் என சிலரது பெயர்களை அறிவித்துள்ளனர்.
இது ஒரு சதி முயற்சியாகும். 40 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவும் 13 வருடங்கள் செயலாளராகவும் இருந்த செயலாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சென்ற போது நாம் அந்த சதி முயற்சி தொடர்பில் எதிர்வு கூறினோம்.
இப்போது துமிந்த திஸானாயக்கவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளராக அவர்கள் சிலர் ஊடகங்களிடம் அறிவித்துள்ளனர்.
இதிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவு படுத்த எடுக்கப்ப்டும் சதி அம்பலமாகின்றது அல்லவா? இங்கே 113 பாராளுமன்ற உருப்பினர்கள் உள்ளனர்.
அனுர பிரியதர்ஷன யாப்பா.
இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜப்ச்க்ஷவையே ஆதரிக்கின்றனர். கட்சியின் மத்திய குழுவின் பெரும்பான்மையானோரின் ஆதர்வுடன் மஹிந்த ராஜபச்க்ஷவையே தலைவராக நாம் தெரிவு செய்துள்ளோம். தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா. இதில் எந்த மாற்றமும் இல்லை. என குறிப்பிட்டார்.