தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை.

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தன்னுடைய காண்ட்ராக்ட் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு டி.வி.எஸ். நகரில் இருக்கும் வீட்டுக்கு வரும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்.

தி.மு.க. ஆட்சியில் அழகிரிக்கு நிகராக பவர்ஃபுல்லாக வலம்வந்த பொட்டுவின் கொலை அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

pottu-suresh4அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் 17 நபர்கள் சிறைக்குச் சென்று தற்போது பிணையில் வந்துவிட்டார்கள். ஆனால், முதல் குற்றவாளியான அட்டாக் பாண்டியை இன்னும் கைதுசெய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது போலீஸ். அட்டாக் பாண்டியும் அழகிரியின் விசுவாசியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று நடந்த கொலை சம்பவத்தையும், அதன் பின்னணியையும் பார்ப்போம்…

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பும், 2013 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மதுரையே குலுங்கும் அளவில் தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அழகிரியின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அது, பொட்டு சுரேஷ் பல்வேறு வழக்குகளால் காவல்துறையின் உபசரிப்பை சந்தித்து வந்த நேரம். கட்சி மாறப்போகிறார், அழகிரியை காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று வதந்திகள் உலா வந்த காலம். அதனால், அழகிரியால் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு வந்தார் பொட்டு சுரேஷ். ‘அப்படியெல்லாம் இல்லை.

நான் எப்பவும் அழகிரியின் விசுவாசிதான்” என்பதைக் காட்டும் வகையில் அந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு முன்பாக அழகிரியைச் சந்தித்து வாழ்த்து கூறினார். அங்கு ரொம்ப நேரம் அவரால் இருக்க முடியவில்லை.

பிறந்தநாள் விழாவை சிறப்பாக முன்நின்று நடத்திய எஸ்ஸார் கோபி, மன்னன், மிசா பாண்டியன், உதயகுமார் போன்றோர் பொட்டுவால் பாதிக்கப்பட்டு வெறுப்பில் இருந்தவர்கள். அதனால், அழகிரிக்கு வாழ்த்து விளம்பரங்கள்கூட பொட்டுவால் செய்ய முடியவில்லை.

pottu-suresh-murder11

31 ஆம் தேதி மாலை சொக்கிகுளத்தில் இருக்கும் தன்னுடைய காண்ட்ராக்ட் அலுவலகத்தை விட்டு, காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் பொட்டு. அவர் காரை ஃபாலோ செய்து சில பைக்குகளும், மினிடோர் வண்டியும், அதன்பின் காரும் வந்து கொண்டிருந்ததைக் கவனிக்கவில்ல.

ஒரு சந்தில் வளையும் இடத்தில் பொட்டுவின் காரை ஃபாலோ செய்தவர்கள் மறிக்க, வழக்கமான கெத்தில் ‘யாருடா நீங்க?’ என்று பொட்டு காரை விட்டு இறங்கி கேட்க, அதற்குப்பின் நடந்தது எல்லாம் கொடூரத்தின் உச்சம். தலையிலும், உடலிலும் மாறி மாறி அரிவாளாலும், கத்தியாலும் குதறி எடுத்தார்கள். தப்பி ஓடியபோதும் விடவில்லை.

அந்தப் பகுதியில் ஒரு மன்னர்போல வலம் வந்தவர், கண்ணிமைக்கும் நேரத்தில் மண்ணில் ரத்தத்தோடு சாய்ந்தார்.  கொலைக்கும்பலலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சாவகாசமாக எஸ்கேப் ஆனார்கள். அதன் பின் நடந்ததும் நாம் அறிந்ததுதான்.

பொட்டு கொல்லப்பட்டதும் விசாரணையில் இறங்கிய சுப்ரமணியபுரம் போலீஸ், முதலில் தேடியது அட்டாக் பாண்டியைத்தான். காரணம் பொட்டுவுக்கும் அட்டாக்குக்கும் பல வருடங்களாகவே பகை வளர்ந்து வந்தது ஊரறிந்த விஷயம்.

இரண்டு தரப்புமே போலீஸில் புகார் செய்திருந்தது. போலீஸ் இருவரின் நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வந்தபோதிலும், பொட்டுவின் கொலை எப்படி நடந்தது என்பது விளங்கவில்லை.

போலீஸ் தேடி வருவதற்கு முன், அட்டாக் தன் குடும்பத்தினருடன் எங்கோ எஸ்கேப்பாகி விட்டார். அதற்குப்பின் அவர் நண்பர்கள், உறவினர்கள்  ஒவ்வொருவராக தூக்கி வந்து விசாரிக்க ஆரம்பித்தது போலீஸ்.

பொட்டுவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அழகிரி, ‘என் நண்பனை இழந்துவிட்டேன்’ என்று கதறினார். அப்போது பொட்டுவின் மனைவி அழகிரியிடம், ‘நம்ம ஆட்களே கொன்னுட்டாங்களே’ என்று அழுதார். அவ்வளவுதான்… அதற்கு பின் அழகிரி தன் நண்பனின் வழக்கு சம்பந்தமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

காரணம், அழகிரி மீதும் அவர் மகன் துரை தயாநிதி போன்றவர்கள் மீதும் சந்தேகத்தைத் திருப்புவதுபோல் போலீஸ் விசாரித்து வந்ததுதான். மன்னன், எஸ்ஸார் கோபி போன்றோர் விசாரிக்கப்பட்டனர். ஒரு க்ளுவும் கிடைக்கவில்லை.

அந்த நேரத்திலதான் மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம் ராஜூ என்ற நாகமுருகன், லிங்கம், செந்தில், சேகர்,  கார்த்தி ஆகிய 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதற்குப் பின்தான் இக்கொலையில் அட்டாக்கின் பங்கு முழுமையாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.

attack-pandi2

சரணடைந்த ஏழு பேரையும் ஆறு நாட்கள் தங்களது காவலில் எடுத்த மதுரை போலீஸ், தீவிர விசாரணை நடத்தனர். அப்போது சரணடைந்தவர்கள் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில்,  ”பொட்டுவைக் கொல்ல அட்டாக் உத்தரவிட்டார்.

பொட்டு சுரேஷ், அழகிரியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அதனால், தி.மு.க. ஆட்சியின்போது மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்தார்.

தான் நினைத்தைச் சாதிக்கும் பொட்டு சுரேஷ், ‘எங்கள் தலையை ஓவராக மட்டம் தட்டி அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகளையும். வருமானத்தையும் தடுத்தார்.

பொட்டுவால்தான் நிதி நிறுவன மோசடி புகாரில் போட்டு கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதனால், தி.மு.க. ஆட்சியில் அவர் வகித்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், மு.க.அழகிரியைச் சந்திப்பதற்கும், அண்ணனுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் பொட்டு சுரேஷ்தான் என்று எண்ணிய அண்ணன் பொட்டுவைப் போட்டுத்தள்ள நேரம் பார்த்து வந்தார்.

இந்நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பொட்டுசுரேஷ் போலீஸில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, பாண்டி அண்ணனை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

அதற்குப்பின் பொட்டுவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதால் நிலைமை மாறியது. சிறையில் இருந்து வெளியே வந்த பொட்டு சுரேஷ், அழகிரியைச் சந்திக்கவில்லை. அவர் அ.தி.மு.க.வில் அழகிரி அண்ணனுக்கு எதிராக புகார் கொடுக்கப்போவதாக தகவல் வந்தது. இதற்கிடையே எங்கள் தலைவரை போட்டுத்தள்ள அவரின் உறவுமுறையுள்ள ஒரு கும்பலுக்கு அட்வான்ஸ் கொடுத்தது தெரியவந்தது.

இதற்கு மேல் பொட்டுவை விட்டுவைக்க கூடாதென்றுதான் நாங்கள் போட்டோம். கடந்த ஜனவரி மாதம் முன்கூட்டியே பொட்டு சுரேஷ், மு.க.அழகிரியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இதை தொடரவிடக் கூடாது. இதனால் மறுபடியும் தன்னை அழகிரியிடம் இருந்து  பிரித்துவிடுவார் என்று தலை நினைத்தார்.

பொட்டுவை அழகிரியின் பிறந்தநாளன்றே கொலை செய்ய திட்டமிட்டோம். ஆனால் பொட்டு சுரேஷ் அதற்கு முன்தினம் கொடைக்கானல் சென்றுவிட்டார். அதனால் 30 ஆம் தேதி செய்ய முடியவில்லை. அதனால் 31 ஆம் தேதி போட்டோம்’’ என்று அவர்கள் கூறியதைக் கேட்டு போலீஸ் அதிர்ந்தது.

அதற்குப்பின் இக்கொலையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் யார், வேறு பெரிய புள்ளிகளின் தொடர்பு இருக்கிறதா, இல்லை பல்வேறு வகையில் பகையைச் சம்பாதித்து வைத்திருந்த பொட்டுவுக்கு வெளியில் உள்ள வேறு எதிரிகாளால் இச்சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரிக்க ஆரம்பித்தனர்.

தொடரும்…

Share.
Leave A Reply