மொசூல்(ஈராக்): வெள்ளை மாளிகைக்குள் புகுந்து உங்கள் தலையை வெட்டிக் கொல்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை முஸ்லிம் நாடாக மாற்றுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஈராக்கை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் ஆப் ஈராக் அண்ட் சிரியா (ஐஎஸ்ஐஎஸ்) தீவிரவாத அமைப்பு, தற்போது சர்வதேச அளவில், பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
ஈராக்கில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள், வெளிநாட்டவர்களையும், பத்திரிகையாளர்களையும் பிணைக் கைதிகளாக பிடித்து, அவர்களுடைய தலையை துண்டித்து விடுகின்றனர்.
அதனை வீடியோவாக படம் பிடித்து, தங்களை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று கூறி, உலகை அச்சுறுத்தி வருகின்றனர்.
அவர்களை ஒழிக்கும் பணியில், ஈராக் ராணுவத்துடன், குர்திஷ் படையினரும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இறங்கியுள்ளன.
அவர்கள் அதிகம் இருக்கும் மொசூல் நகரில், அமெரிக்கா வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இதையடுத்து, தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு பல்வேறு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீவிரவாதிகள் குர்திஷ் வீரர் ஒருவரது தலையை துண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், வீரருடைய தலையை துண்டிப்பதற்கு முன்பாக, முகமூடி அணிந்த தீவிரவாதி கூறியதாவது:
மொசூல் நகரில் அமைதியான வாழ்க்கை வாழக்கூடிய முஸ்லிம்கள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசுகிறது. விஷம் வைத்தும், மூச்சை திணறடிக்கச் செய்யும் வாயுக்களை பயன்படுத்தியும் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்.
ஓபாமாவே, நீ தெரிந்து கொள். நாங்கள் அமெரிக்காவுக்கு வருவோம். வெள்ளை மாளிகையில் வைத்து உன் தலையை துண்டிப்போம். அமெரிக்காவை முஸ்லிம் நாடாக மாற்றுவோம்.
பிரான்ஸ், பெல்ஜியம் மக்களே. இது உங்களுக்கான செய்தி. நாங்கள் கார் வெடிகுண்டுகளுடன் உங்கள் நாட்டுக்கு வருவோம். உங்களுடைய தலையையும் துண்டிப்போம்.
இவ்வாறு முகமூடி அணிந்த தீவிரவாதி வீடியோவில் கூறியுள்ளார். இதன் பின்னர், பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த, குர்திஷ் வீரருடைய தலை துண்டிக்கப்படும் காட்சி வீடியோவில் இடம்பெறுகிறது.
குர்திஷ் இன மக்களையும், ராணுவத்தையும் மிரட்டுவதற்காக தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.