விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சிங்கள மக்கள் மத்தியில் பேராதரவினைப் பெற்ற அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக விளங்கிய ராஜபக் ஷ சாம்ராஜ்யமானது கடந்த மாதம் எட்டாம் திகதியுடன் வீழ்ச்சியடைந்தது.
ஆம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் கடந்த மாதம் எட்டாம் திகதி நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வை எதிர்த்து போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்தே சரிந்தது ராஜபக் ஷவின் சாம்ராஜ்யம்.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக் ஷ தோல்வியடைந்ததையடுத்து கடந்த மாதம் ஒன்பதாம் திகதி காலை 6.30 மணிக்கு அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார்.
மஹிந்த ராஜபக் ஷவின் மீது வெறுப்புடன் இருந்தவர்களுக்குக் கூட அந்த சமயம் அவர் மீது அனுதாபம் ஏற்பட்டது. இவ்வளவு பெருந்தன்மையாக கௌரவத்துடன் தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேறுகிறாரே என்று அவர் மீது மதிப்பும் மரியாதையும் கூட ஏற்பட்டது எனலாம்.
ஆனால் அதன் பின்னரே பல்வேறு இரகசியங்களும் மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டன.
மஹிந்த ராஜபக்ஷ அவ்வளவு இலகுவாக தனது ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்லவில்லை என்றும் இறுதி நிமிடம் வரை அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளையும் சூழ்ச்சிகளை யும் மேற்கொண்டார் எனவும் தேர்தல் முடிவடைந்து இரண்டு தினங்களுக்குள் செய்திகள் வெளியாகத் தொடங்கின.
இராணுவத்தைக் கொண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான சதி முயற்சிகள் இறுதி நிமிடம் வரை மேற்கொள்ளப்பட்டதாக தற்போதைய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன கடந்த 10 ஆம் திகதி ஊடகங்களுக்கு அறிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவினுடைய இந்த முயற்சிக்கு இராணுவமும் பொலிஸாரும் ஒத்துழைக்கவில்லையெனவும் அதனாலேயே அவர் தனது சதிமுயற்சியை கைவிட்டு வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை தக்கவைப்பதற்காக சதி முயற்சியில் ஈடுபட்டதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர முறைப்பாடொன்றையும் பதிவு செய்தார்.
அந்த முறைப்பாட்டையடுத்து அதனை விசாரணைக்குட்படுத்துமாறு சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் குற்றப்புலனாய்வினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த சதி முயற்சி தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் பல அதிகாரிகள் சாட்சியமளித்து வருவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை இந்த சதித்திட்டமானது நிறைவேறியிருந்தால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்திருக்குமென்றும் இந்த சதி முயற்சியின் பின்னணி தொடர்பில் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியது.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகத் தொடங்கின.
அலரி மாளிகையில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த 500 கோடி ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதுமாத்திரமன்றி, அலரி மாளிகைக்குள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கென தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஒரு அறையிலிருந்து பெருந்தொகையான கணினிகள் மீட்கப்பட்டன. அத்தோடு அங்குள்ள மேலும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாவித்ததாகக் கூறப்படும் சிறிய ரக விமானங்கள், குதிரைகள், போனிகள் மற்றும் அரிய வகை பட்சிகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டன.
நாராஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள களஞ்சியசாலை யொன்றிலிருந்து சிறிய ரக விமானமொன்று கடந்த 13 ஆம் திகதி மீட்கப்பட்டது.
குறித்த களஞ்சியசாலைக்கு இரத்மலானையைச் சேர்ந்த ஏசியன் எயார் சென்டர் என்ற தனியார் விமான ஓட்டுநர் பயிற்சி நிலையம் ஒன்றைச் சேர்ந்த நால்வர் நாராஹேன்பிட்டியிலிருந்து அந்த விமானத்தைக் கொண்டு செல்ல முனைந்துள்ளனர்.
அதனையடுத்து, பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர். இந்த சிறியரக விமானமானது இருவர் பயணிக்கக் கூடியதாகும்.
விமானத்தை எடுத்துச் செல்ல வந்த நிறுவனத்தின் உரிமையாளரான திரைப்பட இயக்குநர் சந்திரன் ரத்னம் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.
அதேபோன்று வாழைச்சேனை கடதாசி ஆலையின் விடுதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் உலர் உணவுப் பொருட்களும் பாடசாலைப் பை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் என்பவையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் மூன்று விடுதிகளில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பொது மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களையே பொலிஸார் இவ்வாறு மீட்டுள்ளனர்.
இதேவேளை, காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர என்ற கப்பலிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆயுதங்கள் “எவன்ட் காட்” என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானவை எனவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அந்நிறுவனம் சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தும் ஆயுதங்களே கப்பலிலிருந்த மிதக்கும் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் உறுதியானது.
இந்த ஆயுத களஞ்சியசாலையும் அதிலுள்ள ஆயுதங்களும் சட்ட ரீதியானதே எனக் கருதப்படும் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
அலரி மாளிகையிலிருந்த சில பொருட் கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை பேலியகொடை பொலிஸார் கைப்பற்றினர். இச்சம்பவமும் கடந்த வாரம் இடம்பெற்றது. கைப்பற்றப்பட்ட கொள்கலன்களில் ஆடைகள், மரத் தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன.
அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இது தொடர்பில் விசாரணை நடத்திய போது அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக் ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 68,000 சுவர் கடிகாரங்கள் சபுகஸ்கந்தையில் வைத்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன.
இலங்கை துறைமுக அதிகாரி ஒருவரினால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு வாங்கப்பட்ட களஞ்சிய கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இக்கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, ராஜபக் ஷவினரின் சிகப்பு சால்வை பொறிக்கப்பட்ட தேநீர் கோப்பைகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இதனைவிட கடந்த 19ஆம் திகதி ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய பிரதேசத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக் ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 2500 கடிகாரங்களை பொலிஸார் கைப்பற்றினர்.
இவ்விரு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட கடிகாரங்களின் பெறுமதி 1,15,000 அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றை ஒரு வர்த்தகரே சீனாவிலிருந்து தருவித்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
அதேபோன்று, அலரி மாளிகையில் இருந்ததாக கூறப்படும் போனி எனப்படும் சிறிய இன குதிரைகள், நான்கு கோழிகள் மற்றும் ஒரு தொகுதி கோழிக்குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்துக்கு பொறுப்பாகவிருந்த நபரிடமிருந்தே மேற்குறிப்பிட்ட குதிரைகள், கோழிகள் மற்றும் கோழிக் குஞ்சுகளை 80ஆயிரம் ரூபாவுக்கு தாம் பெற்றதாக பிலியந்தலையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியிலிருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டது. ஸ்ரீ ஜயவர்தனபுர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களே இவ்வாறு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பழைய, புதிய மற்றும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத பல்வேறு ரகங்களை சேர்ந்த வாகனங்கள் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டன. அவற்றில் 34 கார்களும் 13 ஜீப் வண்டிகளும் 2வேன்களும் 2 கெப் வண்டிகளும் காணப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தில் மொத்தமாக 750 வாகனங்கள் இருந்ததாகவும் அவற்றில் 84 டிபெண்டர் ரக வாகனங்கள் இருந்ததாகவும் அவை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவை இவ்வாறு இருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பல்வேறு முறைப்பாடுகளும் குற்றச் சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கோத்தாபய பெற்ற 1000 கோடி ரூபா கடனை செலுத்தும் பொறுப்பை சுமக்கும் மின்சார சபைகொத்தலாவல தனியார் மருத்துவ பீடத்தை அமைப்பதற்காக தேசிய சேமிப்பு
வங்கியிலிருந்து கடனைப் பெற்றுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அந்தக் கடனைச் செலுத்தும் பொறுப்பை மின்சார சபை மீது சுமத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான வைத்தியசாலையை அமைப்பதற்காக கோத்தாபய ராஜபக்ஷ தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்தே தேவையான கடனைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அந்தக் கடனைச் செலுத்த வேண்டிய பொறுப்பு மின்சார சபை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து அதிக வட்டிக்கு 10 பில்லியன் ரூபாவைப் பெறுமாறு மின்சார சபைக்குப் பணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகையில்,
“மானிய வட்டிக்கு கோத்தாபயவின் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அதிக வட்டிக்குரிய தொகையை மின்சார பாவனையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரிக்குரிய 100 கிலோ தங்கம் மோசடியாக விற்பனை அரசாங்க திறைசேரிக்குரிய 100 கிலோ தங்கத்தை மோசடியாக விற்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல் பெண்மணியை குற்றஞ்சாட்டி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி பெரேரா இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மனைவிக்கு இந்த மோசடியுடன் தொடர்பிருப்பதாகவும் இதன் காரணமாக வாஸ் குணவர்தனவுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத் தல்கள் ஏற்பட்டதாகவும் தனது முறைப்பாட்டில் அவர் பதிவு செய்துள்ளார்.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக அவர் கடமையாற்றிய போது திறைசேரிக்குரிய 100 கிலோ தங்கத்தை மோசடியாக விற்க முயற்சி நடப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக அவர் விசாரணை நடத்திய போது இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக் ஷ இருப்பது தெரியவந்தது. இந்த நிலை யில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இடையூறு ஏற்பட்டது. பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
இவ்வாறான மேலும் பல தகவல்கள் வாஸ் குணவர்தனவிடமுள்ளன. அவற்றையும் வெளியிட அவர் தயாராக இருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இந்த தகவல்களை வாஸ் குணவர்தன வின் கோரிக்கை படி வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘திவிநெகும’ அபிவிருத்தி வங்கியில் 145 கோடி ரூபா பணம் மோசடி
திவிநெகும அபிவிருத்தி வங்கியிலிருந்து சந்தேகத்துக்கிடமாக 145 கோடி ரூபா பணம் பெறப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்துமாறு சமுர்த்தி அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் சங்கம் கணக்காய்வாளர் நாயகத்தை கோரியுள்ளது.
தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் னர் பத்தரமுல்ல வங்கிக் கிளையினூடாக இந்த பணம் மீளப் பெறப்பட்டுள்ளது. திடீரென பெருமளவு தொகை பணம் பெறப்பட்டிருப்பது சந்தேகத்திற்கு இடமானது எனவும் மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு மேற்படி அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திவிநெகும அபிவிருத்தி வங்கியினூடாக இலங்கை வங்கி தப்ரபேன் கிளையில் கணக்கு வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கடந்த 6 ஆம் திகதி 145 கோடி 69,80,000 ரூபா பணம் மீளப்பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் போது அங்கவீனமுற்ற மற்றும் வயதான சமுர்த்தி பயனாளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத் துச் செலவுக்கென்று கூறி நாடு பூராகவுமுள்ள திவிநெகும அதிகாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.
பெருமளவு தொகை பணம் திடீரென மீள பெறப்பட்டமை சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இது குறித்து விசாரணை நடத்துமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
மஹிந்த, கோத்தபாய, பஷில், நாமல் ஆகியோருக்கு எதிராக ஜே.வி.பி.முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ, ஹம்பாந்தோட்டை பாராளு மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பி.யினால் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதை தடுப்பதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
பஷில், கோத்தபாயவுக்கு எதிராக மேர்வின் முறைப்பாடு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா பயராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கடந்த 17ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள் ளார். அம்முறைப்பாட்டில் வெள்ளை வேன் கலாசாரம், ஆட்கடத்தல்கள் மற் றும் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு
குற்றச்சாட்டுக்களுடன் மேற்கூறிய இருவருக்கும் தொடர்புகள் உள்ளதாக அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டிருந்தார்.
யோஷித்த கடற்படையில் இணைந்ததும் புலமைப் பரிசில் பெற்றதும் எவ்வாறு?
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான யோஷித்த ராஜபக் ஷ கடற்படையில் இணைந்தமை மற்றும் வெளிநாட்டிலுள்ள முன்னணி கடற்படை கல்லூரி யில் கற்பதற்கு எவ்வாறு புலமை பரிசில் பெற்றுக்கொண்டார் போன்ற மேலும் பல காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை தளபதிக்கு புதிய பாதுகாப்பு செயலாளர் எம்.யூ.டி.பஸ்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு கோல்டன் ஸ்போட் தொலைக்காட்சி சுயாதீன தொலைக்காட்சியில் ஆங்கில தொலைக்காட்சியான “பிரைம் ரீ.வி” என ஆரம்பிக்கப்பட்டது. அத் தொலைக்காட்சி அலைவரிசையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் யோஷித்த ராஜபக் ஷ எடுத்து கோல்டன் ஸ்போர்ட் சனல் என நடத்துகின் றார்.
நாட்டின் நாலா பாகத்திலுமுள்ள சுயாதீன தொலைக்காட்சியின் அன்டனாக்களையும் சீ.எஸ்.என். தொலைக்காட்சி பெற்றுக் கொண்டுள்ளது எனவும் ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக் ஷ பி.எச்.டி. படிக்க அனுமதி பெற்றது எவ்வாறு?
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜ பக் ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ எவ்வாறு பி.எச்.டி.படிக்க அனுமதி பெற்றார் என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் நாமல் ராஜபக் ஷவின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன திட்டத் தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்ப டும் மோசடிகள் குறித்தும் முறைப்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருவதுடன் பல் வேறு மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப் பட்டு வருகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் கசிந்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் இது தன் மீது சேறு பூசும் செயற்பாடு எனவும் அவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துமாறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.