‘ஒருபோதும் யாரிடமிருந்தும் தொலைபேசியில் கூட அச்சுறுத்தல் வராத எனக்கு என்ன நடந்தது என்பதை ஊகித்துக்கொள்ள முடியாதுள்ளது. என் மனைவி தம்மிகா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வாகனத்துக்குள்ளேயே என்னை கொலை செய்திருப்பார்கள்’
இது கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி , கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்கொட பஹல யாகொட வீதியில் தனது மனைவியுடன் காரில் பயணித்த போது அதிகாலை வேளையில் கடும் தாக்குதலுக்கு உள்ளான ரிவிர, திவயின பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை அறைக் கட்டிலில் வைத்து தன்னைப் பார்க்க வந்த ஊடகவியலாளர்களிடம் கூறிய விடயங்களே அவை.
அன்று, அதாவது 2009 ஜனவரி 23 ஆம் திகதி அதிகலை 6.40 மணியிருக்கும். வீட்டிலிருந்து தனது காரில் மனைவியுடன் அலுவல் ஒன்றின் நிமித்தம் வெளியேறிச் சென்ற உபாலி தென்னக்கோன் இம்புல்கொட பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான விடயம் குறித்து, கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
எனினும் அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. இந் நிலையில் தான் இது குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பாரப்படுத்தப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் மேற்பார்வையில் இந்த விசாரணைகளும் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளரான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவிடமே ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் சுதத் ஆகியோருடன் உபபொலிஸ் பரிசோதகர்களான சுனில் சரணபால, ஜயவீர உள்ளிட்ட குழுவினர் இந்த விவகாரம் மீதான விசாரணைக் குழுவுக்குள் உள்ளீர்க்கப்பட்டனர்.
உண்மையில் இந்தத் தாக்குதல் நடந்து சுமார் ஏழரை வருடங்கள் கடந்ததன் பின்னரே அதன் முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜரே இந்தத் தாக்குதல் குழுவிலும் இருந்தவர் என புலனாய்வுப் பிரிவு கூறுகின்ற நிலையிலேயே அந்த விவகாரம் தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லசந்தவின் கொலையையும் உபாலி தென்னக்கோனின் கொலை முயற்சியையும் ஒரே குழுவே முன்னெடுத்தது என்பதற்கான ஆதாரங்கள் இது வரையிலான விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளன.
எனினும் அந்தக் குழுவில் அங்கம் வகித்ததாக நம்பப்படும் ஒரே ஒரு சந்தேக நபரே தற்போது வரைக்கும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி தம்மிகா தென்னக்கோன் ஆகியோர் மீதான தாக்குதல்கள் கடந்த 2009 ஜனவரி மாதத்தில் யுத்தம் உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போது முன்னெடுக்கப்பட்டவை.
எனவே அப்போது என்ன நடந்தது என்பதை உபாலி தென்னக்கோன் ஊடகவியலாளர்களிடம் வைத்தியசாலையில் வைத்து பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் கூறிய விதத்திலேயே நாம் அச்சம்பவத்தையும் மீள ஞாபகப்படுத்துகின்றோம்.
‘ அப்போது 6.40 மணி இருக்கும். இம்புல்கொடவில் உள்ள எமது வீட்டிலிருந்து நானும் மனைவியும் காரில் பயணித்தோம். கண்டி வீதிக்குச் செல்வதற்காக யாகொட வீதியுடன் இணையும் ட்ரக்மோ சந்தியூடாக நான் வாகனத்தை செலுத்தினேன்.
அப்போது பாதையின் ஓரத்தில் இருவர் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்களுக்கு பின்னால் மேலும் இருவரும் இருந்தனர்.
திடீரென அவர்களில் இருவர் எனது காரின் கண்ணாடிகளை உடைக்க ஆரம்பித்தனர். இதன்போது ஏனைய இருவரும் திடீரென என் பக்கம் பாய்ந்தனர். நானும் எனது மனைவியுமே வாகனத்தில் இருந்தோம். எனது இடது பக்க ஆசனத்தில் மனைவி இருந்தார். எனக்கு அப்போது எதனையுமே ஊகித்துக்கொள்ள முடியாமல் இருந்தது.
பொல்லுகளால் இருவர் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்த போதும் அவர்கள் எனது மனைவி தம்மிகா இருந்த பக்கம் செல்லவில்லை. இதன் போது காரினுள் கையைப் போட்ட அவர்கள் என்னை கூரிய ஆயுதங்களால் தாக்கமுற்பட்டனர்.
அதன்போது எனது மனைவி என்னை கட்டியணைத்துக்கொண்டார். அதனால் அப்போது எனக்கு கத்தித் தாக்குதல் காயங்கள் ஏற்படவில்லை. அவை எனது மனைவியைப் பதம் பார்த்தன.
எனது முகத்தை இருவர் பொல்லுகளால் பதம்பார்த்தனர். தொடர்ச்சியாக பொல்லுகளால் தாக்கி என்னை கூரிய ஆயுதங்களால் குத்தினர். நான் எல்லா பக்கமும் திரும்பித் திரும்பி என்னைக் காத்துக்கொள்ள முயன்றேன். எனது மனைவி என்னை கட்டியணைத்துக்கொண்டிருந்ததால் தாக்குதல்தாரிகளுக்கு என்னை சரியாக இலக்கு வைக்க முடியாமல் போனது.
மனைவியின் வலது கையில் தாக்குதல் காரணமாக இரத்தம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
ஒரு ஐந்து நிமிடம் கூட இருக்காது. கத்திக் குத்துகளால் எனது உடம்பில் காயம் ஏற்பட்டது. முகத்தை அவர்கள் தாக்கியதால் என்னால் என்ன நடக்கின்றது என்பதை உணரக் கடினமாக இருந்தது.
எல்லாம் முடிந்த பிறகு தாக்குதலுக்கு வந்த அந்த நான்கு பேரும் யாகொட புகையிரத நிலையப் பக்கமாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று மறைந்தனர். அவர்களை மீளக் காணுமிடத்து அடையாளம் காட்டவும் முடியும்’
என உபாலி தென்னக்கோன் அப்போது பொலிஸாரிடமும் ஊடகவியலாளர்களிடமும் சம்பவம் குறித்து விபரித்திருந்தார்.
இந்தத் தாக்குதல் இடம்பெற்ற போது அதனை கண்ணால் கண்டவர்கள் எவரும் அப்பிரதேசத்தில் இருந்ததாக இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும் தாக்குதலுக்கு வந்தோரை மீண்டும் கண்டால் நிச்சயம் அடையாளம் காட்டலாம் என உபாலியும் அவர் மனைவியும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளமையானது விசாரணையாளர்களுக்கு மிகப் பெரிய ஒரு பிளஸ் பொயின்ட் எனலாம்.
எனினும் உபாலியின் கொலை முயற்சி தொடர்பில் எதுவித ஆதாரங்களும் சிக்காத நிலையில் அது குறித்து பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த தாக்குதலையடுத்து உபாலியும் அவர் மனைவியும் கூட பாதுகாப்பு கருதி அமெரிக்காவில் தங்கிவிட்டனர்.
இந்நிலையில் தான் கடந்த 2015 பெப்ரவரி மாதம் அப்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனினால் லசந்த படுகொலை விவகாரம் குறித்த விசாரணைகள் சிறப்பு விசாரணை அதிகாரியான நிஸாந்த சில்வாவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
அதனையும் நடத்தும் போதே உபாலி தென்னக்கோன் கொலை முயற்சி மற்றும் லசந்தவை கொலை செய்தோர் ஒரே குழு என்பதற்கான சான்றுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றன. (லசந்தவின் கொலை சந்தேகநபர் கைதானமை தொடர்பில் அண்மையில் விரிவாக தந்திருந்தோம்)
லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த நால்வரால் அத்திட்டிய பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையிலேயே அதே ஆண்டு அதே மாதம் 23 ஆம் திகதி கம்பஹாவில் வைத்து உபாலி தென்னக்கோன் மீதும் அதே பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் லசந்த படுகொலை தொடர்பில் விசாரணை செய்யும் தற்போதைய சிறப்பு விசாரணை அதிகாரி நிஸாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழு, அக்கொலையுடன் தொடர்புடைய தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டது.
இந்த சிம் அட்டைகள் எவ்வாறு யாரால் பெறப்பட்டன என்பது குறித்து நாம் ஏற்கனவே லசந்த கொலை விவகாரம் தொடர்பில் அண்மையில் எழுதிய கட்டுரையில் விரிவாக தந்திருந்தோம்.
இந் நிலையில் லசந்த கொலை செய்யப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் இணைப்பில் வந்திருந்த குறித்த 5 தொலைபேசி இலக்கங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்த போதே உபாலியையும் அவர் மனைவியையும் தாக்கியோரும் குறித்த சந்தேக நபர்களே என்ற விடயத்தை புலனாய்வுப் பிரிவினரால் வெளிப்படுத்த முடிந்தது.
எவ்வாறாயினும் குறித்த ஐந்து தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தியோர் யார் என்பது இதுவரைக் கண்டறியப்படவில்லை.
இந்த 5 தொலைபேசிகளையும் பயன்படுத்தியோர் லசந்த விக்ரமதுங்க வழமையாக பயன்படுத்தும் அனைத்து வீதிகளிலும் லசந்தவை பின்தொடர்ந்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் தொலைபேசி வலையமைப்பு தகவல்கள் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம் உள்ளன.
அதே போன்று 2009.01.06 முதல் 2009.01.07 வரையில் உபாலி தென்னகோன் வீட்டின் அருகிலும் இவர்கள் தகவல் சேகரித்துள்ளனர். உபாலி தென்னக்கோன் வீட்டின் அருகில் இருக்கும் டயலொக் தொலைபேசி கோபுர ஆய்வுத் தகவல்கள் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதனை உறுதி செய்கின்றனர்.
இந்நிலையில் தான் ஒப்பீட்டின் அடிப்படையில் லசந்த கொலைக்காரர்களே உபாலி மீதான தாக்குதலையும் முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவியல் ரீதியிலான தடயங்களை வைத்து வாதிடுகின்றனர்.
இதனை விட உபாலி தென்னக்கோன் சென்ற வீதியில் குறித்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தியோர் அன்றைய தினம் இருந்தமைக்கான அறிவியல் தடயங்களும் புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டுள்ளன.
லசந்த கொலை விவகாரத்தில் கண் கண்ட சாட்சி ஒருவர் உள்ளார். அத்துடன் கொலையின் பின்னர் லசந்தவின் சாரதியும் கடத்தப்பட்டார். அதனால் அவர் தன்னை கடத்தியவரை அடையாளமும் காட்டியுள்ளார்.
இந்நிலையில் உபாலி தென்னக்கோன் அப்போது பொலிஸாருக்கு தெரிவித்த, ‘தாக்குதல்தாரிகளை மீளகாணும் இடத்து அடையாளம் காட்டுவேன்’ என்ற வார்த்தையின் பிரகாரம் லசந்த கொலை குறித்து கைதான இராணுவ சார்ஜன்ட் மேஜர் உடலாகமவை உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி அடையாளம் காணும் பொருட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கம்பஹா நீதிவான் காவிந்யா நாணயக்கார கடந்தவாரம் உத்தரவொன்றினையும் பிறப்பித்த நிலையில் அடையாள அணிவகுப்பானது எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அமெரிக்காவிலிருந்து இலங்கை வரும் உபாலி தென்னக்கோன் அன்று அடையாள அணிவகுப்பில் தனது மனைவி சகிதம் பங்கேற்று தன்னை தாக்கியவர்களில் தற்போது கைதாகியுள்ள சார்ஜன்ட் மேஜர் இருந்தாரா என்பதை அடையாளம் காட்டவுள்ளார்.
அந்த அடையாள அணிவகுப்பைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேலும் பல திருப்பங்கள் இருக்கும் என நம்பலாம்.
எம்.எப்.எம்.பஸீர்