ரஷ்யா உக்ரேனுக்கு எதிராக மேலும் நெருக்குதல்களைக் கொடுக்குமா என்ற கேள்வி 2016-ம் ஆண்டு எட்டாம் மாத்தில் இருந்து எழுப்பப்படுகின்றது.
அதற்கு ஏற்ப பல நகர்வுகள் ரஷ்யாவில் மேற்கொள்ளப்படுகின்றன. உக்ரேனைத் துண்டாடுவது என்பதில் இருந்து உக்ரேனை முற்றாக ஆக்கிரமிப்பது என்பது வரை ரஷ்யாவின் தெரிவுகள் பரந்துள்ளன.
உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையாமல் தடுப்பதில் ரஷ்யா தற்காலிக வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை நிரந்தரமாக்குவற்கு ரஷ்யா பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.
ரஷ்யாவின் எட்டாம் பொருத்தம்
ஆண்டின் எட்டாம் மாதம் என்பது ரஷ்யாவிற்கு மோசமான மாதம் என பல வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 1991-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமானது.
1999-ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் செச்னியப் போர் தொடங்கியது. 2000-ஆம் ஆண்டு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 118 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2008-ஆம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் போர். 2009-ஆம் ஆண்டு அணைக்கட்டு உடைப்பு. 2010-ஆம் ஆண்டு காட்டுத்தீ. 2011-ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு. இந்த மோசமான நிகழ்வுகள் வரிசையில் 2016-ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் விளடிமீர் புட்டீன் தனது நெருங்கிய தோழரும் படைத்துறைக்குப் பொறுப்பானவருமான செர்கீ இவனோவ் (Sergei Ivanov) பதவியில் இருந்து விலக்கினார்.
ரஷ்யாவின் இளமை இதோ! இதோ!!
செர்கீ இவனோவின் பதவிநீக்கம் உலகையே ஆச்சரியப்பட வைத்தது. புட்டீனைச் சுற்றியுள்ள அவரது ஆதரவாளர்கள் சிலொவிகி குழுவினர் என அழைக்கப்படுவர்.
அவர்களில் பெரும்பான்மையானோர் சோவியத் ஒன்றியத்தின் உளவுத்துறையின் உச்ச அதிகாரியாக புட்டீன் இருந்தபோது அவருடன் பணியாற்றியவர்களும் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகும்.
உக்ரேன் தொடர்பாக புட்டீனின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடே செர்கீ இவனோவின் பதவி விலக்கலுக்கான காரணம். செர்கீ இவனோவின் இடத்திற்கு 44 வயதான அண்டன் வைனோ நியமிக்கப்பட்டுள்ளார்.
புட்டீன் ஏற்கனவே பல முதியோரைப் பதவியிலிருந்து ஓய்வுபெறச் செய்து இளையோரால் அவர்களது இடங்களை நிரப்பியுள்ளார். அது புதிய சிந்தனையை நாட்டின் முகாமையில் கொண்டு வருவதற்காகவா அல்லது தனக்கு எதிராக எவரும் பதவிப் போட்டிக்கு வராமல் செய்யவா என்ற வினா எழுப்பப்படுகின்றது.
செல்வாக்கு
விளடிமீர் புட்டீனை மேற்கு நாடுகள் எதிர்க்கும் போதெல்லாம் அவரது செல்வாக்கு ரஷ்யர்கள் மத்தியில் அதிகரிக்கும். ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டு வந்தபோது அவரது செல்வாக்கு ரஷ்யாவில் அதிகரித்தது.
ரஷ்ய விளையாட்டு வீரர்கள் போதைப் பொருள்களைப் பாவித்தனர் என்ற குற்றச்சாட்டை மேற்கு நாடுகள் முன்வைத்தபோது புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. ரஷ்யா சிரியாவில் தலையிட்டதை மேற்கு நாடுகள் எதிர்க்க புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது.
2016 ஓகஸ்ட்டில் மேலும் ஒரு நிகழ்வு நடந்தது. ரஷ்யா தன்னுடன் இணைந்த கிறிமியாவின் எல்லையோரக் கிராமத்தில் கிறிமியாவில் உள்ள ரஷ்யப் படைநிலைகள் மீது தாக்குதல் நடத்த ஊடுருவிய உக்ரேனிய உளவுப் படையினரை ரஷ்யப் படையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து விளடிமீர் புட்டீன் உக்ரேன் பிரச்சினையைத் தீர்க்க ஏதும் செய்யாமல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரஷ்ய தொலைக்காட்சியில் தோன்றி தானும் தன்னுடன் ஊடுருவலில் ஈடுபட் டவர்களும் உக்ரேனின் உளவுத் துறை யைச் சேர்ந்தவர்கள் என்றார்.
உக்ரேன் ஊடுருவல்
உக்ரேனின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் ரஷ்யர்களின் பிரிவினைவாதிகளை உக்ரேனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைக்கப் போவதாகவும் ரஷ்யா மிரட்டுகின்றது.
அது நடக்கும்போது நிதி நெருக்கடியில் இருக்கும் உக்ரேனுக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் படைக்கலன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்படும்.
அந்த நாடுகளில் அதற்கு பெரும் ஆதரவு இருந்த போதும் ஐக்கிய அமெரிக்காவும் ஜேர்மனியும் அப்படிச் செய்து ரஷ்யர்களின் ஆத்திரத்தைத் தூண்ட விரும்பவில்லை.
படைகளை நகர்த்திய ரஷ்யா
உக்ரேனிய உளவாளிகள் கிறிமியா விற்குள் ஊடுருவினார்கள் எனச் சொன்ன ரஷ்யா, அந்த ஆபத்திலிருந்து தனது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற போர்வையில் தனது படையணிகளை மேலும் உக்ரேனை நோக்கி நகர்த்தியது. அதில் ரஷ்யாவின் எஸ் – -400 என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் அடங்கும்.
ஆனால் எஸ்- – –400 2016 டிசம்பர் மாதமளவில்தான் செயற்பட முடியும். உக்ரேனின் உளவாளிகளைக் கைது செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிமியாவிற்கு ரஷ்யாவிலிருந்து படையினர் நகர்த்தப்பட்டனர்.
ரஷ்யாவும் உக்ரேனும் வரலாற்றுப் பின்னணி
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை ரஷ்யா விரிவாக்கவே விரும்பியது. உக்ரேன் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு முக்கிய நாடாகும்.
ரஷ்ய விரிவாக்கத்தின் முதல் முயற்சியாக ரஷ்யாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின.
பின்னர் இதில் ஆர்மினியா, அஸர்பைஜான், கஸகஸ்தான், கிர்க்கிஸ்தான், மோல்டோவா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்தன.
1993ஆம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த ரஷ்யா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின.
சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட ரஷ்யா முயற்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக்கொள்ள மறுத்தன.
2013ஆம் ஆண்டு உக்ரேன், ரஷ்யா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில் தமது நிலப்பரப்பையும் பொருளாதார வலயத்தையும் விரிவாக்கிக் கொண்டு முன்னாள் சோவியத் நாடுகளையும் ரஷ்ய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க ரஷ்யாவிற்கு தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது.
அத்துடன் முன்பு ரஷ்யாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில் இணைந்திருந்த நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும் ரஷ்யாவைச் சிந்திக்க வைத்தது.
பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை ரஷ்யா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது.
ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி இதை ஒட்டி ஆரம்பமானது. உக்ரேன் தனது யூரோ – ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும் என ரஷ்யா உக்ரேனை நிர்ப்பந்தித்தது.
மறுபுறம் நேட்டோவின் விரிவாக்கத்தை ஒரு அமெரிக்க ஆக்கிரமிப்பாக வும் ரஷ்யா பார்த்தது. விளைவு உக்ரேனில் கிளர்ச்சிகள், இரத்தக் களரிகள் போன்றவை அரங்கேற்றப் பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ரஷ்ய ஆதரவு விக்டர் ஜனுக்கோவிச் பதவியில் இருந்து விரட்டப்பட்டு ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவான பெற்றோ பொறொசெங்கோ உக்ரேனில் 2014ஆம் ஆண்டு அதிபரானார்.
சோவியத்தின் வீழ்ச்சி இருபதாம் நூற்றாண்டில் நடந்த ஒரு மோசமான விபத்து. ரஷ்யா மீண்டும் சோவியத் ஒன்றியம் போன்ற ஒரு பேரரசைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட புட்டீன், உக்ரேனில் 2014ஆம் ஆண்டு நடந்த ரஷ்யாவிற்கு எதிரான ஆட்சி மாற்றத்தால் வெகுண்டு எழுந்தார்.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்கள் உக்ரேனிற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். ரஷ்யாவின் பெரும் கடற்படைத்தளம் அமைந்திருந்த உக்ரேனின் ஒரு பகுதியான கிறிமியாவை ரஷ்யா ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
அதனால் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. அத்துடன் தனது ஏற்றுமதி வருமானத்திற்கு எரிபொருளில் ரஷ்யா பெரிதும் தங்கியிருப்பதால் எரிபொருள் விலை வீழ்ச்சியடையச் செய்யப் பட்டது. இது ரஷ்யப் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது..
ரஷ்யாவிற்கு உக்ரேனின் முக்கியத்துவம்
1. உக்ரேன் ரஷ்யாவின் எதிரிகளின் கையில் இருந்தால் ரஷ்யா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டியிருக்கும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து.
2. ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியில் பெரும்பகுதி உக்ரேனுடாகச் செல்லும் குழாய்களூடாகவே நடக்கின்றன.
3. ஏற்கனவே லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா ஆகிய ரஷ்யாவின் எல்லை நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ள நிலையில் நேட்டோ என்னும் அமெரிக்காவின் ஆதிக்கத்திலுள்ள படைத்துறைக் கூட்டமைப்பில் இருந்து ஒரு கவசம் போல ரஷ்யாவிற்கு இருந்தது உக்ரேன் மட்டுமே.
4. ரஷ்யாவின் யூரோ – -ஏசிய பொருளாதாரக் கூட்டமைப்பில் உக்ரேனின் இணைவு முக்கியமான ஒன்றாகும்.
5. ரஷ்யா உக்ரேனைத் தனது பிடியில் இருந்து இழப்பது உலக அரங்கில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை இல்லாத ஒன்றாக்கிவிடும்.
உக்ரேனை ரஷ்யாவால் கைப்பற்ற முடியுமா?
உக்ரேனை ரஷ்யாவால் கைப்பற்றுவது கடினமான ஒன்றல்ல. 2014ஆம் ஆண்டின் பின்னர் ரஷ்யர்கள் பெரும்பாலும் வாழும் டொன்பாஸ் என அழைக்கப்படும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் ரஷ்யா உருவாக்கிய உள்நாட்டுப் போரால் அங்கு வாழும் 3.3 மில்லியன் மக்களில் 1.3 மில்லியன் மக்கள் உக்ரேனின் மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.
500,000 மக்கள் ரஷ்யாவிற்கு தப்பினார்கள். 100,000 மக்கள் வேறு நாடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஆனாலும் டொன்பாஸ் பிராந்தியத்தை உக்ரேனில் இருந்து பிரித்தெடுக்க ரஷ்யாவால் முடியவில்லை. இதற்குக் காரணம் படைத்துறை வலுவின்மையல்ல.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை நேட்டோ நாடுகள் மேலும் இறுக்கலாம் என்பதே. ஆறு இலட்சம் சதுர கிலோ மீட்டரைக் கொண்ட உக்ரேனைக் கைப்பற்றி ஆதிக்கத்தில் வைத்திருப்பது இலகுவானதல்ல.
மசகு எண்ணெயின் விலை ஐம்பது டொலர்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில் ரஷ்யா பொருளாதார ரீதியில் உக்ரேனைக் கைப்பற்றி வைத்திருப்பது கடினமாகும்.
உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச் சினை, சுற்றிவர இருக்கும் பதவி ஆசை கொண்டவர்களின் பிரச்சினை, ரஷ்யாவிலிருந்து மக்களும் மூலதனங் களும் வெளியேறும் பிரச்சினை ஆகி யவற்றிலிருந்து தப்புவதற்கு பன்னா ட்டு அரங்கில் ரஷ்யாவை ஒரு போர் முனையில் வைத்திருப்பது புட்டீனின் செல்வாக்கிற்கும் பதவிக்கும் பாதுகாப் பாக அமையும். ஆனால் ரஷ்யாவின் பொ ருளாதாரம்?