உண்மை உறங்காது, நீதி தோற்காது என்பார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தினார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

உண்மையைக் கூற வேண்டும் என்பதற்காக இந்த இரகசியங்களை பொன்சேகா அம்பலப்படுத்தினாரா அல்லது எதிரணியினரின் அவமானப்படுத்தல்கள், சீண்டல்கள், கிண்டல்கள் காரணத்தினால் எழுந்த கோபத்தினால் அவரை அறியாமலே இவ்விடயங்களை சபையில் பகிரங்கப்படுத்தினாரா என்பது தெரியாது.

ஆனால் சரத் பொன்சேகா கூறிய விடயங்களை வைத்துக் கொண்டு அவரைச் சாட்சியாக நிறுத்திப் பலரைக் குற்றவாளிகளாக நிரூபிக்கக் கூடிய வகையிலேயே இந்த தகவல்கள் சபையில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
நடந்தது இதுதான்….

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றப்புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைத்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

இதில் பலர் உரையாற்றிய நிலையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் சம்பள அதிகரிப்பை இவர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உரையாற்றினார்.

சரத் பொன்சேகாவின் உரையைக் குழப்ப வேண்டும், அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்த வேண்டும், அவரைக் கோபப்படுத்த வேண்டும், சீண்ட வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அன்று சபையில் மகிந்த ராஜபக்ஷ ஆதரவு பொது எதிரணியினர் பலர் அமர்ந்திருந்தனர்.

ஏனெனில் பொன்சேகா உரையாற்ற ஆரம்பித்தது முதல் அவர் உரையை முடிக்கும் வரையிலான 45 நிமிடங்கள் எதிரணியினர் நடந்த கொண்ட விதம் இதனையே உணர்த்தியது.

மகிந்த ஆதரவு எதிரணியின் இத்தனை விசமத்தனங்களுக்கு மத்தியிலும் சரத் பொன்சேகா தன் உரையை முன்வைத்துக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பொது எதிரணியினர் எல்லை மீறி அவரை மிக மோசமாக விமர்சித்தனர். இதனால் மிகுந்த கோபப்பட்ட நிலையிலேயே சரத் பொன்சேகா காணப்பட்டார்.

இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகாவைப் பார்த்து பொது எதிரணியினர் லசந்தவைக் கொன்றது யார்? ( “சண்டே லீடர்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை) என சரத் பொன்சேகாவைப் பார்த்து தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதனால் கோபமுற்ற சரத் பொன்சேகா லசந்தவைக் கொன்றது கோதாபய.

இதனை நான் நிச்சயமாகக் கூறுகிறேன். லசந்தவைக் கொன்றது கோதாபயவே என முதலாவது குண்டை வீசினார். இதனால் எதிர்த்தரப்பு பகுதியில் கனத்த மௌனம் ஏற்பட்டது.

கோதாபயவே லசந்த கொலையாளி என்ற குண்டை வீசிய சரத் பொன்சேகா அத்துடன் நிறுத்தவில்லை.

தொடர்ந்து பல்குழல் பீரங்கி போல் பல குண்டுகளை வீசத் தொடங்கினார். அவற்றில் சில வருமாறு :

கோதாபயவின் மோசடிகள்

“நமக்காக நாம்” திட்டத்தின் மூலம் 45,000 இலட்சம்
நகர அபிவிருத்தி அதிகார சபை கடற்படை மூலம் 910 இலட்சம்.

லங்கா ஹொஸ்பிட்டலில் 6000 இலட்சம்.

அவன்கார்ட் மூலம் 111000 இலட்சம்.

இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு 4 மிக் விமானங்கள் கொள்வனவில் 42 000 இலட்சம்.

பசில் ராஜபக்ஷவின் மோசடி

திவிநெகுமவில் 29920 இலட்சம்.

மல்வானை, மாத்தறை காணி கொள்வனவில் 1000 இலட்சத்துக்கும் அதிகம்.

ஷிரந்தி ராஜபக்ஷ

கால்ட்டன் பாடசாலை தொடர்பில் 500 இலட்சத்திற்கும் அதிகம்.

விமல் வீரவன்ச தன் மனைவிக்கு 300 மில்லியன் பெறுமதியான இடத்தைப் பரிசாக வழங்கினார் என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

யோசித ராஜபக்ஷவின் மோசடிகள் தொடர்பிலும் பொன்சேகா பல புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

இதேவேளை மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷவின் மோசடிகள் என பல விடயங்களை சரத் பொன்சேகா குறிப்பிட்டபோதும் எதிரணியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவை ஹன்சாட்டிலிருந்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவினால் நீக்கப்பட்டன.

கோதாபய, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ என மகிந்த ராஜபக்ஷவின் குடும்பதின் இலட்சக்கணக்கான கோடி ரூபா மோசடியை சரத் பொன்சேகா பட்டியலிட்டபோதும் மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கவில்லை.

இதேநேரம் அவன்கார்ட் பிரச்சினையையும் முன்வைத்த சரத் பொன்சேகா, அவன் கார்ட் தலைவருடன் தற்போதைய அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் நேரடித் தொடர்பில் இருப்பதாகக் குற்றம் சாட்டியதுடன் அவர் வெளிநாட்டில் மிக அண்மைக் காலத்தில் அவன்கார்ட் தலைவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பிரதி சபாநாயகருக்கும் பொது எதிரணியினருக்கும் காட்டினார்.

இவரால் தான் அவன் கார்ட் தலைவர் பாதுகாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியதுடன் இவர் குறித்த புகைப்படம் ஒன்றை ஏற்கனவே தான் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்ததாகவும் நினைவுபடுத்தினார்.

இதேவேளை நாமல் ராஜபக்ஷவின் மீதான குற்றச்சாட்டுகளை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டுமென எதிரணியினர் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியபோதும் ஏனையவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டுமென பெரியளவில் அழுத்தம் கொடுக்கவில்லை.

எனினும் பொன்சேகாவின் உரைக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து கூச்சல், குழப்பங்களில் ஈடுபட்டதுடன் நீதிமன்றங்களில் உள்ள விடயங்களை சரத் பொன்சேகா பேசுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனையடுத்து நீதிமன்றங்களில் உள்ள விடயங்கள் தொடர்பில் பேசினால் அவற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டி வரும் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சரத் பொன்சேகாவிற்கு இடையிடையே அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

எனினும் சரத் பொன்சேகா தான் பொய் கூறவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையே தெரிவிப்பதாகவும் கூறியதுடன், தனது எந்தக் குற்றச்சாட்டையும் ஹன்சாட்டிலிருந்து நீக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் சரத் பொன்சேகாவிற்கு உரிய பேசும் நேரம் முடிவடைந்து விட்டதாக பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியபோது எதிரணியினர் கூச்சலிட்டு மகிழ்ச்சி தெரிவிக்கவே, தனது இருக்கையிலிருந்து எழுந்து சபா பீடத்தை நோக்கி ஓடோடி வந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகாவிற்கு தேவையான அளவிற்கு மேலதிக நேரத்தை வழங்கினார்.

இந்த நேரத்தைப் பயன்படுத்தியே மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின்மீது சரத் பொன்சேகா சரமாரித் தாக்குதலை மேற்கொண்டார்.

லசந்தவைக் கொன்றது கோதாபயவே என்ற சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும் மகிந்த ராஜபக்ஷ குடும்பம் மீதான புள்ளிவிபரங்களுடனான பகிரங்க குற்றச்சாட்டுகளும் ஊடகங்களுக்கு பெறுமதியான செய்தியாக அமைந்தபோதும் அவற்றை மறுநாள் வியாழக்கிழமை பத்திரிகைகளில் வெளியிட முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை அச்சு, இலத்திரனியல் ஊடங்களுக்கு ஏற்பட்டது.

இந்த நிலை அரச தரப்பினரால் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது சரத் பொன்சேகாவின் உரையிலுள்ள நிலையியல் கட்டளைகளுக்கு முரணான பேச்சுகளை நீக்குவது தொடர்பில் ஏற்பட்ட குழப்பநிலையினால் ஏற்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

குறிப்பிட்ட ஒரு பாராளுமனற உறுப்பினரின், அமைச்சரின் உரை நிகழ்த்தப்பட்டு அரை மணி நேரத்திற்குள் அவரது உரை ஊடகவியாளர்களின் செய்தி அறைக்கு வீடியோ பதிவாக வழங்கப்பட்டுவிடும்.

சரத் பொன்சேகாவின் உரையை முழுமையாகப் பெறுவதற்காக புதன்கிழமை இரவு 7.30 மணி வரைகூட ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோதும் அவரின் உரை அடங்கிய வீடியோ பதிவு வழங்கப்படவில்லை.

இதனால் அவரின் உரை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதிய அச்சு, இலத்திரனியல் ஊடங்கங்களால் சரத் பொன்சேகாவின் உரையை மறுநாள் ஒளி, ஒலிபரப்பவோ பிரசுரிக்கவோ முடியவில்லை.

எனினும் மறுநாள் வியாழக்கிழமை சரத் பொன்சேகாவின் உரையில் ஒரு சில குறிப்பிட்ட விடயங்கள் மட்டும் நீக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் செய்தி அறைக்கு சரத் பொன்சேகாவின் உரை அடங்கிய வீடியோ பதிவு வழங்கப்பட்டிருந்தது.

சரத் பொன்சேகா சாதாரண மனிதரல்ல. இராணுவத் தளபதியாக, கூட்டுப்படைத் தளபதியாகக் கடமையாற்றியவர்.

யுத்தத்தை முடித்துவைத்த பெருமையும் அவருக்குரியது. அதனாலேயே அவருக்கு ஜெனரல் அந்தஸ்தை வழங்கி மகிந்த ராஜபக்ஷ அரசு பெருமைப்படுத்தியது.

அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நிகராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் தென் பகுதி மக்களால் போற்றிப் புகழப்பட்டதுடன் வீதிக்கு வீதி கட்டவுட்டுகள் வைத்து மூன்று சிங்கங்கள் என கௌரவமளிக்கப்பட்டதுடன் அதி உயர் கௌரவமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டத்தையும் வழங்கியிருந்தார்.

அவ்வாறு கௌரவமளிக்கப்பட்ட சரத் பொன்சேகா நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்த விடயங்கள் சாதாரமானவை அல்ல.

அவர் பெயர் குறிப்பிட்டு சிலர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை சரத் பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை வைத்தே பலரைக் குற்றவாளிகளாக்கி தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

ஆனால் மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீனைப் போன்று செயற்பட்டு வரும் இந்த நல்லாட்சி அரசு, அதனைச் செய்யுமா என்பதே தற்போது உள்ள கேள்வி.

அரசிலுள்ள ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட “நெத்தலி”களை மட்டுமே பிடிக்கும் இந்த அரசு, “சுறா”க்களைப் பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ள நிலையில், சரத் பொன்சேகாவின் கோதாபய மற்றும் மகிந்த குடும்பத்தின் மீதான குற்றச்சாட்டுகளை இந்த நல்லாட்சி அரசு எந்தளவிற்கு கவனத்தில் எடுக்கும் என்பது கேள்விக்குறியே.

-தாயகன் –

Share.
Leave A Reply