அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவை கூட்டு எதிரணியின் வேட்பாளராக களமிறக்கும் முனைப்புகள், காணப்படுகின்ற சூழலில், அவர் சீனாவுக்கான சர்ச்சைக்குரிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.
ஏழாவது ஷியாங்சான் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்கே முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த மாநாடு பீஜிங்கில் உள்ள ஷியாங்சான் விடுதியில் கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.
இராணுவ விஞ்ஞானத்துக்கான சீன சங்கம் மற்றும் சர்வதேச மூலோபாய கற்கைகளுக்கான சீன நிறுவகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் சுமார் 64 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
சேவையில் உள்ள பாதுகாப்புத்துறை சார் அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் புலமையாளர்கள் என்று 400 பேர் வரையில் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவொன்று இந்த கருத்தரங்கில் பங்கேற்றிருந்த நிலையில் தான், கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடைந்ததையடுத்து, பாதுகாப்புச் செயலர் பதவியை இழந்த பின்னர், கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றிடமிருந்து விடுக்கப்பட்ட முதல் அழைப்பு இதுவாகும்.
சீனாவிடம் இருந்து அவருக்கு இந்த அழைப்பு கிடைத்தது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது, சீனாவுக்கு மிகவும் வேண்டியவராகவே அவர் இருந்தார். கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் சீனாவுக்கும் கூட அதிகளவு நெருக்கம் இருந்தது.
இந்த பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, கோத்தாபய ராஜபக் ஷ கடந்த 5ஆம் திகதி சீனாவுக்கான இரண்டு வாரகாலப் பயணத்தை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில் தான், அவன்ட் கார்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்தது.
அந்த தடையை விலக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு மீது கடந்த 3ஆம் திகதி விசாரணை நடத்திய கொழும்பு மாவட்ட மேலதிக நீதிவான் நீதிமன்றம் ஒக்டோபர் 5ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்தது.
இதன் பின்னரே கோத்தாபய ராஜபக் ஷ சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 12ஆம் திகதி முடிந்து விட்ட போதிலும், கோத்தாபய ராஜபக் ஷ இரண்டு வாரங்கள் அல்லது அதற்குக் கூடுதலான நாட்கள் அங்கு தங்கியிருக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
25 நாட்கள் அவர் சீனாவில் தங்கவுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
எனவே கோத்தாபய ராஜபக் ஷவின் இந்தப் பயணத்தின் அடிப்படை நோக்கம், பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பது மாத்திரம் அல்ல என்பது உறுதியாகிறது.
ஒன்றில் அவர் விடுமுறையைக் கழிப்பதற்காக அங்கு தங்கியிருக்க வேண்டும். அல்லது வேறேதும், இரகசிய சந்திப்புகள், பேச்சுக்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்காக தங்கியிருக்க வேண்டும்.
சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வவதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் மாதமாக ஒக்டோபர் மாதமே இருந்தாலும், கோத்தாபய ராஜபக் ஷவின் நோக்கம் அதுவா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
கூட்டு எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக் ஷவே போட்டியிடுவார் என்று, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில், கோத்தாபய ராஜபக் ஷவின் சீனப் பயணம் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
கோத்தாபய ராஜபக் ஷ அரசியலுக்கு வருவாரா என்பது தொடர்பாக கடந்த ஆண்டில் இருந்தே அவ்வப்போது ஊகங்கள் வெளியாகி வந்தன.
முதலில் அத்தகைய ஊகங்களுக்குச் சாதகமாகவே கருத்து வெளியிட்டு வந்த கோத்தாபய ராஜபக் ஷ, பின்னர் ஒரு கட்டத்தில், தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு ஊடகப் பேட்டியின் போது, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அத்தனை தகுதிகளும் தமக்கு இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
தாம் அரசியலுக்கு வருவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், எனினும் நாட்டு மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றலாம் என்று சிந்தித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தமை, குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைக்காது.
எனவே, கூட்டு எதிரணியிடம், மஹிந்தவுக்கு அடுத்த தெரிவாக கோத்தாபய ராஜபக் ஷவே இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
பசில் ராஜபக்ச இருந்தாலும், அவர் தனது பெயரை மகிந்த ஆட்சிக்காலத்திலேயே கெடுத்து விட்டார்.
எனவே சிங்கள மக்கள் மத்தியில் இன்னமும் கவர்ச்சி மிக்கவராக உள்ள கோத்தாபய ராஜபக் ஷவைக் களமிறக்குவதே, கூட்டு எதிரணியின் ஒரே தெரிவாக இருக்க முடியும்.
அதனால் தான், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் நான்கு ஆண்டுகள் இருக்கின்ற நிலையிலேயே, கூட்டு எதிரணி அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறது.
இன்னொரு பக்கத்தில், கோத்தாபய ராஜபக் ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக களமிறக்குவதற்கான முனைப்புகளில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் கூட சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனினும், இதுதொடர்பாக சீனா எந்தக் கருத்தையும் அண்மைக்காலங்களில் வெளியிடவில்லை. ஏற்கனவே, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக் ஷவை வெற்றிபெற வைப்பதற்கு சீனா பெருந்தொகையான நிதியை செலவிட்டதாக செய்திகள் வெளியான போது அதனை சீன அதிகாரிகள் மறுத்திருந்தனர்.
எந்த நாட்டினதும் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் சீனா தலையீடு செய்வதில்லை என்றும், அந்தக் கொள்கையையே இலங்கையிலும் கடைப்பிடிப்பதாகவும் அப்போது சீனா கூறியிருந்தது.
உள்நாட்டு தேர்தல் மற்றும் அரசியல் விவகாரங்களில் சீனாவின் தலையீடுகள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தாலும், இலங்கை விடயத்தில் சீனா அவ்வாறு ஒதுங்கி நிற்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
இந்தியப் பெருங்கடலின் கேந்திர மையமாக விளங்கும் இலங்கை சீனாவின் முத்துமாலை வியூகத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது. இன்னமும் இருக்கிறது.
இலங்கையில் தனது மூலோபாய நலன்களை முழுமையாக அனுபவிக்க வேண்டுமாயின், தமக்குச் சாதகமான அரசாங்கம் ஒன்று கொழும்பில் அமைந்திருக்க வேண்டும் என்றே சீனா விரும்பும்.
சீனாவைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலமே அத்தகைய வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்த பொற்காலமாக இருந்தது.
எனவே, மீண்டும் தமக்குச் சார்பான ஒரு ஆட்சி கொழும்பில் அமைவதை சீனா விரும்பாது என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
கோத்தாபய ராஜபக் ஷவை, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கான வாய்ப்புகளை சீனா தட்டிக்கழிக்காது.
அத்தகையதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவும் சீனா தயங்காது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராதல் என்பது சீனாவுக்கும், கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் அவசியமான ஒன்றாக இருந்தாலும், இத்தகைய கட்டத்தில் அதற்கான முயற்சிகள் தேவையா என்பது கேள்விக்குரிய விடயம் தான்.
இத்தகைய முயற்சிகளில் இறங்குவதற்கு இது காலம் முந்திய செயலாகும்.
எவ்வாறாயினும், கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் கூட்டு எதிரணியின் கனவு, சீனாவுக்கு சாதகமானதாக இருக்கும் நிலையில் அத்தகைய வாய்ப்புகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு சீனா ஒருபோதும் தயங்காது என்பது உண்மை.
எனவே, கோத்தாபய ராஜபக் ஷவின் சீனப் பயணத்தின் பின்னால் இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் இருந்தால் அது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.
– ஹரிகரன்-