திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பள்ளித் தோழிகளுடன் செல்பி எடுக்க முயற்சித்த வாழைத் தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடலில் தவறி வீழ்ந்த தனது நண்பியைக் காப்பாற்றச் சென்றபோதே இவர் கடலில் மூழ்கியுள்ளார்.
நேற்று முன்தினம் பொங்கலன்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் வாழைத்தோட்ட கிராமத்தைச் சேர்ந்த செல்வசிங்கம் பிரதீபா (21) என்ற மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.
செல்பி எடுத்தபோது கடலில் வீழ்ந்த தோழியைக் காப்பாற்ற குதித்த போதே சம்பவம்
வாழைத்தோட்டத்துக்கு அருகில் உள்ள புன்னையடி கிராமத்தின் கடற்பிரதேசத்தில் மலைக்குன்றில் நின்று தனது இரு தோழிகளுடன் செல்பி எடுக்க முற்பட்டபோது இவரது நண்பி கால் தவறி கடலில் வீழ்ந்துள்ளார்.
அவரைக் காப்பாற்றுவதற்காக இவர் உடனடியாக கடலில் குதித்துள்ளார். கடலில் வீழ்ந்த இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், தோழியைக் காப்பாற்ற கடலில் பாய்ந்த பிரதீபா உயிரிழந்துள்ளார்.
அவரது தோழி தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சடலம் கையளிப்பு
பிரேதம் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை க்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
கலைப் பிரிவில் 3 ஏ சித்திகள் பெற்றவர், 19 ஆம் திகதி பல்கலை நுழையவிருந்தார்
தனது க.பொ.த உயர்தரத்தை வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வராவில் கற்ற இம் மாணவி 2015 பரீட்சையில் கலைப்பிரிவில் மூன்று ஏ சித்திகளைப்பெற்றதாகவும் கிழக்கு பல்கலைக்கழத்துக்கு தெரிவான இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி பல்கலைக்கழகம் செல்ல இருந்தார் எனவும் பாடசாலை அதிபர் க.சொக்கலிங்கம் தெரிவித்தார்.
குறித்த மாணவியின் குடும்பத்தினர் மீனவ தொழில் செய்து வருகின்றனர். இம் மாணவி ஆரம்பக் கல்வியை வாழைத்தோட்டப் பாடசாலையில் கற்றுவந்த நிலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்க எமது துவாரக வித்தியாலயத்தில் சேர்ந்து கல்வி கற்றார்.
இவர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்து அகில இலங்கை ரீதியில் ஓட்டங்களில் சாதனை படைத்த திறமைசாலியாவார் என்றார்.
இந்நிலையில் சிறந்த பெறுபேற்றை க.பொ.த சாதாரண தரத்தில் பெற்ற இவர் வாழைச்சேனை சென்று கறுவாக்கேணி விக்னேஸ்வரா வில் க.பொ.தரத்தில் கற்று சிறந்த பெறுபேற்றை பெற்றநிலையில் பல்கலைக்கழத்துக்கு நுழைவதற்கான சகல ஏற்பாட்டையும் பூர்த்தி செய்திருந்தார்.
எதிர்வரும் 19 ஆம்திகதி பல்கலைக்கழகம் செல்ல விருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.