மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு செல்பவர்கள் பலரும், சமாதியில் காது வைத்தபடி, “”டிக்… டிக்… சத்தம் எனக்கு கேட்குது.
உனக்கு?”’என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வார்கள். காரணம், தமிழக முதல்வராக 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அதிகாலையில் மரணமடைந்த எம்.ஜி.ஆர். மறுநாள் (டிச.25) மாலையில் மெரினாவில் அடக்கம் செய்யப் பட்டார்.
அவரது வழக்கமான அடையாளமான தொப்பி -கறுப்புக்கண்ணாடி, வலதுகையில் அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்துடன்தான் புதைக்கப் பட்டார்.
அந்தக் கடிகாரம் இன்றும் ஓடிக் கொண்டிருப்பதாக நினைப்பவர்கள், சமாதியில் காது வைக்கிறார்கள்.
உண்மையில் “டிக்… டிக்…’ கேட்கிறதா? அதுதான் எம்.ஜி.ஆர். உருவாக்கிய பிம்பம். இறந்து 29 ஆண்டுகள் ஆனபிறகும் அந்த பிம்பம் உடையவில்லை. இதுவரை உடைக்கவும் முடியவில்லை.
எம்.ஜி.ஆர். இறந்தது, 1987ஆம் ஆண்டு. பிறந்தது? இலங்கையில் உள்ள கண்டி நகரில் பிறந்தார் எம்.ஜி.ராமச்சந்திரன்.
அவரது பூர்வீகம் கேரளா. மாஜிஸ்டிரேட்டாக இருந்த அவரது அப்பா மருதூர் கோபாலமேனன் இறந்துபோன தால் இலங்கையிலிருந்த குடும்பம் தமிழகம் வந்தது.
அம்மா சத்யபாமாதான் பிள்ளைகளை ஆளாக்கினார். கும்பகோணம் ஆனையடி பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார் எம்.ஜி.ஆர். அங்குள்ள பதிவேட்டில் இப்போது குறிப்பிடப்படும் எம்.ஜி. ஆரின் பிறந்த தேதியான 17-1-1917 என்பது மாறு பட்டிருப்பதை பிரபல தமிழ் இதழ் பல ஆண்டு களுக்கு முன்பே சுட்டிக்காட்டியிருக்கிறது.
எம்.ஜி. ஆரின் பிறந்த தேதியில் தொடங்கும் புதிர், அவரது நாடக -திரைப்பட -அரசியல் வாழ்வு நெடுகிலும் தொடர்ந்தது.
“சதி லீலாவதி’ என்பது எம்.ஜி.ஆர். சிறு வேடத்தில் நடித்த முதல் படம்.
எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற அன்றைய பெரிய நட்சத்திரங்களின் படங்களில் துணைப் பாத் திரங்களில் நடித்து வந்தவர், பலவித போராட்டங் களையும் அவமானங்களையும் கடந்து “ராஜகுமாரி’ படத்தில் ஹீரோவானபோது 30 வயதை கடந்திருந்தார்.
சளைக்காத முயற்சி, சாதுர்யமான அணுகுமுறைகளும் அவரை கதாநாயகனாக நிலை நிறுத்தி, திரையுலகில் 30 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக்கியது.
வசூலை வாரிக்குவித்த படங்க ளால், தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவராக இருந்தவர் எம்.ஜி.ஆர். தனது 60ஆவது வயதில் கடைசியாக நடித்த “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தின் இயக்குநரும் அவர்தான்.
நடிப்பில் தனது பலம்-பலவீனம் இரண்டையும் எம்.ஜி.ஆர் அறிந்தே இருந்தார்.
அதற்கேற்றாற் போல, தனக்கான திரைப்பாதையை உருவாக்கியது தான் அவரது தொடர் வெற்றிக்கும் நிலைத்த செல் வாக்குக்கும் காரணம்.
தான் நடிக்கும் படத்தின் அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தி, நடிப்பாற்றலில் உள்ள மேடு பள்ளங்களை சரிசெய்யும் வித்தை எம்.ஜி.ஆருக்கு அத்துப்படி.
மொத்தம் 136 படங்களில் நடித்தார். அதில் 3 படங்களை சொந்தமாகத் தயாரித்தார்.
மூன்றுமே சூப்பர் ஹிட். மூன்றில் இரண்டு படங்களை அவரே டைரக்ட் செய்திருந்தார்.
“நாடோடி மன்னன்’, “உலகம் சுற்றும் வாலிபன்’ என அந்த இரண்டு படங்களி லுமே அவருக்கு இரட்டை வேடம். அப்படங் களின் தொழில்நுட்ப நேர்த்தியை திரையுலகின் இன்றைய ஜாம்ப வான்களும் வியப்பது வழக்கம்.
சொந்தப் படம், பிறரது படம் என எதுவாக இருந்தாலும் நல்லவனாக, ஏழைகளின் வள்ள லாக, மது-புகை போன்ற பழக் கங்கள் இல்லாதவனாக, பெண் களின் பாதுகாவலனாக, மனிதாபி மானியாக, ஜனநாயகத்தை காக் கும் தலைவனாகத் தன்னுடைய கதாபாத்திரங்கள் அமையவேண் டும் என்பதில் மிகத்தெளிவாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
இதில் சில பண்புகள் அவருக்கேயுரிய இயல் பானவை. சில, “நாயகன்’ என்ற பிம்பத்துக்குத் தேவையானவை யாக அமைந்தன. இரண்டின் தன்மையிலும் ரசிகர்கள் எந்த வேறுபாடும் காண முடியாதபடி பார்த்துக் கொண்டார்.
“தனிப் பிறவி’, “இதயக்கனி’, “நினைத்ததை முடிப்பவன்’, “எங்கவீட்டுப் பிள் ளை’ போன்ற படத் தலைப்புகள் அவரது இயல்புக்கும் செல் வாக்குக்குமான அடையாளங்கள்.
நாயகன் என்ற பிம்பத்தை மெருகேற்ற அவருக்குத் தேவைப் பட்டதுதான், தனக்கு எதிரில் ஒரு நிரந்தர வில்லன் என்கிற தோற்றம். சினிமாவில் மட்டுமல்ல, அரசியலி லும் எம்.ஜி.ஆர். அதையேதான் கையாண்டார்.
இரண்டிலுமே மக்கள் அவரை நம்பினார்கள். வில்லன்களுக்கு எதிரான மன நிலையை மக்கள் மனதில் வளர்ப் பதில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றி தான் திரையிலிருந்து ஒதுங்கும் வரை நாயகனாகவும், மரணம்வரை அரசியல் களத்தில் முதல்வராகவும் அவரை நீடிக்கச் செய்தது.
தன்னுடைய பலம் குறை வாக இருந்தாலும், “வில்லன்’களின் பலவீனப் பகுதியைக் குறி வைத்து, அவர்களை அலேக்காகத் தூக்கிப் போடுவது எம்.ஜி.ஆர். பட சண்டைக் காட்சி சாகசங்களில் ஒன்று.
அரசியல் களத்திலும் அதையேதான் அவர் கையாண்டார். தனது வெற்றி இலக்கை அடைவதில் சளைக்காமல் போராடினார். எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்… உயிர் மீண்டு, குரல் பாதிக்கப்பட்டபோதும் திரையிலும் அரசியலிலும் அவர் குரல் ஒலித்தது.
ஆட்சியிலிருந்த தி.மு.க. தலைமையை எம்.ஜி.ஆர். எதிர்த்த நிலையில்… “உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை.
சென்னை நகரில், படத்தின் போஸ்டரை ஒட்ட முடியாதபடி ஆட்சியாளர்கள் கெடுபிடி செய்தனர். போஸ்டருக்குப் பதில் ஸ்டிக்கர் ஒட்டும் புதியமுறையை அறிமுகப்படுத்தி, படத்தை ரிலீஸ்செய்து வெள்ளிவிழா வெற்றியைக் கொண்டாடிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.
1972-ல் தனிக்கட்சி ஆரம்பித்து 1977, 1980, 1984 எனத் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார்.
ஏழை மக்களின் பசி போக்குதல், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் திட்டங்கள் இவற்றின் மூலம் மக்களிடையே தன் மீதான கனவுகளை வளரச் செய்தார். தன்னைப் பற்றிய கனவிலிருந்து மீளாதவர்களே அவரது வாக்கு வங்கி.
கொள்கை பற்றிக் கேட்டதற்கு “அண்ணாயிசம்’ என்றார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், மதம் என்ற கேள்விக்கு “திராவிடன்’ என்று சொன்னார்.
பொங்கல் விழாதான் எம்.ஜி.ஆர் கொண்டாடிய பண்டிகை. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை அவரது ஆட்சியின் மைல்கற்கள் ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து ஆட்சி யைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.
ஆனால் அவரும் ஊழலுக்கான விசாரணை கமிஷன்களை (நீதிபதிகள் ரே, பால் உள் ளிட்ட கமிஷன்கள்) சந்திக்க வேண்டி யிருந்தது. மேலே இருந்துகொண்டு அதிகாரம் செலுத்துபவர்களை எதிர்த்துக் கேட்கும் கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்தவர் எம்.ஜி.ஆர்.
அவர் பதவியிலிருந்த காலத்தில் மத்திய அரசில் 4 பிரதமர்கள் வந்து போனார்கள். எவரும் கோபப்பட்டு விடக் கூடாது என்ற கவனத்துடன் நட்பு பாராட்டினார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவான எம்.ஜி.ஆரின் உணர்வும் உதவியும் கூட மத்திய அரசின் நிலைப்பாட்டை அனுசரித்தே செய்யப்பட்டது.
திராவிட இயக்கம் வலியுறுத்திய சீர்திருத்த திருமணம் உள்ளிட்டவற்றைப் படங்களின் காட்சி களாக்கினார்.
ஆட்சியில் இருந்தபோது பெரியாரின் எழுத்து சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
இன்று கணினியில் பயன்படுத் தும் னை, லை, ணா இவற்றுக்கு இந்த எழுத்துச் சீர்திருத்தமே முன்னோடியாகும். அதேநேரத்தில், தன் திரைப்படங்களில் அண்ணா, காந்தி, புத்தர் உள்ளிட்ட பலரின் உருவப்படங்களைக் காட்டியவர், பெரியாரின் பெயரையோ அவரது படத்தையோ காட்டுவதை முடிந்தளவு தவிர்த்தார்.
விவசாயியாக நடித்தவர் ஆட்சிக்கு வந்தபோது, வாகைக்குளத்தில் விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியாயினர். “படகோட்டி’, “மீனவ நண்பன்’ என அவர்களின் உரிமையைப் பேசும் படங்களில் நடித்தவரின் ஆட்சியில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவ தாகக் கூறி, அதனை வாழ்விடமாகக் கொண்ட மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
சர்வாதிகாரத் தலைமைக்கு எதிரான மக்கள் புரட்சி பற்றிப் பல படங்களில் பேசியவர், தன் ஆட்சிக் காலத்தில் நக்சலைட்டுகளை நரவேட்டையாடினார். மது குடிக்காத நாயகனின் ஆட்சியில்தான் “டாஸ்மாக்’ என்ற நிறுவனமே உருவானது.
பத்திரிகையாளர் கைது, சிறைப்படுத்தல், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் பதவி பறித்தல், பரிசு பொருட்கள் மூலம் வாக்குகளைக் கவர்தல் போன்ற ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் எம்.ஜி.ஆர். காலத்திலேயே மிகுந்தன.
தலைமை மீதான தொண் டர்களின் விசுவாசத்தை, பச்சைக் குத்திக் கொள்ளு தல் என்ற கட்டாயத்திற்குள்ளாக்கி, அதன் வழியே காலில் விழுதல் உள்ளிட்ட தலைமை வழி பாட்டு அரசியலை வளர்த்தார் எம்.ஜி.ஆர்.
இத்தகைய செய்கைகள் எதுவும் அவருடைய செல்வாக்கைத் தகர்க்க வில்லை. தன்னைப் பற்றிய பிம்பத்தை நல்லமுறையில் பிறர் மனதில் அழுத்தமாய் பதிய வைத்துவிட்டால் அது எளிதில் மாறாது என்பதைத் திட்டமிட்டு வெற்றிகர மாக்கியவர் எம்.ஜி.ஆர். அது அவருக்குப் பின்னும் தொடர்கிறது.
“நாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்ற வசனம் புகழ்பெற்றது.
எம்.ஜி.ஆர் எப்போதும் நாயகன்தான்.
-கோவி.லெனின்