2015ம் ஆண்டுஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த தேசிய அரசின் பயணம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பிளவுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐ தே கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பிளவு தவிர்க்க முடியாதது என எண்ணத் தோன்றும் அளவிற்கு வளர்ந்து செல்கின்றன.

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள இச் சிக்கலான நிலைகள் தொடர்பாக அல்லது அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை வழங்க அல்லது அறிவூட்டத் தமிழ் ஊடகங்கள் தவறி வருகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் சமான்ய பிரச்சனைகளாக கருத முடியவில்லை. அரசியல் அமைப்பு விவகாரத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பலமான பிளவு உள்ளது.

அதாவது புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்போர், ஜனாதிபதி ஆட்சியை மாற்ற முடியாது என்போர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்போர் என பல குழுக்கள் அங்கு இயங்குகின்றன.

17-257x300அதே போல ஐ தே கட்சியினர் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தம்மை அழிக்க திட்டமிடுவதாகவும், அதன் காரணமாகவே மத்திய வங்கி பண முறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும்,   ஈற்றில் நாட்டின் பிரதமரையே சாட்சியம் அளிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக ஒரு சாராரும், இன்னொரு சாரார் ஜனாதிபதி   மக்களுக்கு வாக்குறுதி   அளித்தபடி புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற வேண்டுமெனவும், ஜனாதிபதி ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமெனவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகளை மேலும் விரிசல் அடையச் செய்யும் வகையில் தமது அழுத்தங்களைப் ஐ தே கட்சியினர் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய முன்னணி அமைப்பதற்கு முன்னர் அதாவது ஜனாதிபதி தேர்தலின் போது கடந்த அரசின் ஊழல்களை விசாரிக்கப் போவதாக கூறிய மைத்திரி தற்போது தனது கவனத்தை ஐ தே கட்சி மேல் குவித்துள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்குத் தான் காரணமல்ல எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி, ஐ தே கட்சியின் அமைச்சர்களே அமைச்சரவை ரகசியங்களை மகிந்த தரப்பினருக்கு வழங்கி நிலமைகளை மோசமாக்கி உள்ளதாக நேரடியாகவே கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த மறு நாளான ஜனவரி 9ம் திகதி ஐ தே கட்சியின் முக்கியஸ்தர்களே மகிந்தவிற்கு விமானத்தை வரவழைத்து அவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தவர்கள் எனவும் கூறி ஐ தே கட்சிக்கும், மகிந்தவிற்கும் இடையிலான உறவுகளைப் போட்டுடைத்துள்ளார்.

சமீபத்தில் ஜனாதிபதி ஹட்டார் நாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி முன்னிலையில் முக்கிய பிரமுகர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பத்திலேயே முடித்திருந்தால் இந்த தேர்தலுக்கான சிக்கல் நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்திருந்தார்.

blogger-image--934052410சிறீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மக்கள் ஆதரவை இழந்திருப்பதற்குக் காரணம் ஐ தே கட்சியிலுள்ள சிலர் அரச இரகசிய தகவல்களை மகிந்த தரப்புடன் பரிமாறுவதே என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.

இதன் காரணமாகவே மகிந்த தரப்பால் மீண்டும் அரசியலில் தலை நிமிர்த்த வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்ல,

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அரசிற்குள் ஊழல் அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பனவும் மகிந்தவிற்கான அரசியல் வாய்ப்புளை அதிகரிக்க உதவியுள்ளது. இவை யாவும் இரு கட்சிகள் மத்தியிலே பிளவுக்கான நிலமைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளுராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பிளவுகள் அதிகரித்துள்ளமை ஆரோக்கியமான அரசியல் சூழலைத் தரவில்லை.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி என பெயரளவில் இயங்கும் மகிந்த தரப்பினர் தாம் மைத்திரி தரப்பினருடன் இணைவதற்கு ஐ தே கட்சியின் உறவுகளைக் கைவிட வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மைத்திரி தரப்பினர் ஐ தே கட்சியிடம் அடமானம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் சமீபத்தில் வெளியாகிய தகவல்களின் பிரகாரம் பார்க்கையில் பொது நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பாராளுமன்றக் குழு  அதன் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது ஐ தே கட்சியின் முக்கிய அமைச்சர்கள் அத் தகவல்களை அந் நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுக்குத் தொலைபேசி மூலம் வெளிப்படுத்திய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனால் அரசிலுள்ள பல அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இப் பின்னணியில் காலம் சென்ற வண. பௌத்த பிக்கு மாடுலுவேவ சோபித தேரர் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தில் ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை இப் பிளவுகளை மேலும் உறுதி செய்தது.

7820வண. சோபித தேரர் அவர்களின் சமூக நீதிக்கான சமூக இயக்கத்தின் இணைப்பாளரான பேராசிரியர். சரத் விஜேசூரிய அவர்கள் அங்கு ஆற்றிய உரை பிளவின் ஆழத்தை உணர்த்தியது.

அக் கூட்டத்தில் பிரதமர் ரணிலும் பங்குபற்றுவதாக இருந்தது. ஆனாலும் அவர் அங்கு சமூகமளிக்கவில்லை. இருப்பினும் ஏற்கெனவே தயாரித்த உரை என்பதால் பேராசிரியரின் உரை பிரதமரை நோக்கியதாக அமைந்திருந்தது. அந்த உரையின் சில பகுதிகளை வாசகர்களின் தேவை கருதி தரப்படுகிறது.

‘………… பிரதமர் அவர்களே! நீங்கள் 40 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அரசியல்வாதியாகும். உங்கள் அரசியல் ஒரு போதும் இனவாதமாக அல்லது மதவாதமாக இருந்ததில்லை.

2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிய ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடாமல் மேற்கொண்ட தியாகத்தினைக் கௌரவிக்கிறோம்.

நீங்கள் எடுத்த காத்திரமான முடிவே தேசிய அரசு ஒன்றினை அமைக்கவும், அரசியலமைப்புச் சீர் திருத்தங்களை மேற்கொள்ளவும் வழி சமைத்தது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஒரு சாரார் உங்களை விமர்ச்சித்த போதிலும், நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டியது வரவேற்க வேண்டியதே. ஆனால் வண. சோபித தேரரின் வழியில் செல்லும் நாம் சிலவற்றைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

2015ம் ஆண்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முன்னரேயே அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்திருந்தீர்கள். அம் மாற்றத்திற்கான பிரதான பங்கினை நீங்கள் வகித்திருந்த போதிலும், உங்களால் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியவில்லை.

இதற்குக் காரணம் உங்களின் கட்சியிலுள்ள சில அமைச்சர்களும், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும், அவநம்பிக்கையுமேயாகும். இதுவே அரசியல் மாற்றங்களுக்கான தடைகளாக உள்ளன.

அவ்வாறான அச்சத்தையும், அவநம்பிக்கையையும் போக்குவது உங்கள் கடமையாகும். கட்சியின் எதிர்காலம் உங்களின் நடவடிக்கைகளில்தான் தங்கியுள்ளது. உங்களின் அரசியல் எதிர்காலமும் அதில்தான் தங்கிள்ளது.

நாட்டை ஆளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்த வேளைகளில் நாடும், மக்களும் உங்களுக்கு அதற்கான ஆணையைத் தரவில்லை. அது உங்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கலாம்.நீங்கள் அதற்கான காரணங்களை அடையாளம் காணாதிருந்தது கவலைக்குரியது.

நீங்கள் பிரதமராக வந்திருப்பதற்குப் பிரதான காரணம் சட்டத்தின் பிரகாரம் ஒழுகும் பிரஜைகள் ராஜபக்ஸ அரசை வெறுத்தார்கள். அந்த உண்மையை நீங்கள் ஏற்காதிருந்தால் பிரதமராக வந்திருக்க முடியாது. மகிந்த ராஜபக்ஸ தரப்பினர் ஜனநாயத்தைச் சிதைத்தார்கள் என்பதே பிரதான காரணமாகும். சுருக்கமாக கூறுவதானால் பிரஜைகளில் ஒரு சாராரின் தியாகங்களே உங்களைப் பிரதமராக்கி உள்ளன. இதனை நீங்கள் உணர்கிறீர்களா? நீங்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

வண. சோபித தேரர் ஊழலற்ற, கொலைகள் அற்ற, சட்ட விரோதமாக பணத்தைக் குவிக்கும் வாய்ப்புகளைத் தடுக்க, சுதந்திரமாக வாழ, நீதியை உறுதி செய்ய என ஒரு நாட்டை உருவாக்க மக்களிடம் ஆணையைக் கோரினார்.

ஆனால் இன்று நிலமை என்ன? ஊழல்வாதி எனக் குற்றம் சாட்டப்பட்டவரே, ஏனையோரை நோக்கி அதே குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

இது எப்படிப்பட்ட விதி? ஜனவரி 8ம் திகதி நிகழ்ந்த புரட்சியை ஆய்வு செய்தால் தற்போதைய நிலமை அரசிற்கு மிகவும் பாரதூரமானது. ராஜபக்ஸ அரசை விமர்ச்சித்தவர்கள் அதன் பின்னர் உயிர் வாழும் உரிமை அற்றவர்களாக உள்ளனர்.

மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு இந்த அரசு பொறுப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் கொலையுண்டவர்களுக்கான நீதியை உறுதி செய்யவில்லை.

கொலையுண்ட தனது கணவர் எக்னாலியகொட அவர்களுக்காக போராடும் அவர் மனைவி சந்தியா, கொலையுண்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜ்தீன் விசாரணைகளில் வெளிப்படும் உண்மைகள், பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்க மரணம், வெலிக்டைச் சிறைச்சாலை மரணங்கள், கடற்படைப் பாதுகாப்பிலிருந்த இளைஞர்களின் மரணங்கள், அவன்காட் பிரச்சனைகள், மிக் 27 விமானக் கொள்வனவு ஊழல்கள் போன்ற வழக்குகள் குறிப்பிடத்தக்கன.

பொது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். இவ் வழக்குகளில் பல குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் முடிவுகளுக்கு மூன்று வருடங்களாக காத்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக காத்திருக்கிறார்கள். விசாரணைகள் பூர்த்தி அடையாமல் இருப்பது குறித்தும், நீதி விசாரணைகள் தாமதப்படுவது குறித்தும் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இவைகளைப் பார்க்குமிடத்து ராஜபக்ஸ தரப்பினர் பாதுகாக்கப்படுகின்றனர் என்றே கருதுகிறோம். மக்களின் ஆணையைப் பெற்ற ஒரு அரசு அவ்வாறு நடந்து கொள்வதும், வறிய மக்களாலும், கல்வி அறிவற்றவர்களாலும் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது எனக் கருதுவதும் பாரிய குற்றமாகும்.

namal_

அதிகாரத்தைக் கைப்பற்ற ராஜபக்ஸ தரப்பினர் தம்மிடமிருந்த செல்வத்தைப் பயன்படுத்தினர். ஆனால் அவ் வழி முறைகளை சட்டப்படி ஒழுகும் பிரஜைகள் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிய ஜனாதிபதித் தேர்தலில் மாற்றி அமைத்தார்கள். அவ்வாறான வழிமுறைக்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.

பாரத லக்ஸ்மன் மரணத்திலும், சில் அனுட்டான புடவைப் பிரச்சனையிலும் பொது மக்கள் மனதில் சில நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால் அதன் பின்னர் பாரத லக்ஸ்மன் மரணம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டார்? ராஜபக்ஸ தரப்பினர் விரும்பும் நீதிபதி முன்னிலையில் விசாரணைகளை மேற்கொள்ள கடவுள் அனுக்கிரகம் அவர்களுக்குக் கிடைக்குமா? நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கினாலும், உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் பெறலாம் என முன்னாள் அமைச்சர் தனது வழக்குத் தொடர்பாக தெரிவித்திருந்தார்.

தனது வழக்குகளைத் தனது விருப்பத்திற்கேற்ற நீதிபதிகள் விசாரணை செய்யும் வகையில் விசாரணைத் திகதிகளை ஒரு வருடத்தின் பின்னர் பெறுவதில் பஸில் ராஜபக்ஸ வெற்றி கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவை சட்டம் சரியான விதத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை? என்பதை உணர்த்தவில்லையா? ஏன் சிறந்த, வினைத் திறன் மிக்க நீதிபதிகளின் சேவைகள் பெறப்படவில்லை? இவைவைத்தியசாலைகளில் சாதாரண நோய்களைக் குணப்படுத்த வைத்திய நிபுணர்களையும்.

சிக்கலான நோய்களைக் குணப்படுத்த தராதரம் குறைந்த வைத்தியர்களையம் பயன்படுத்தவதற்கு ஒப்பானது.இதற்குக் காரணம் என்ன? சட்ட விரோத நடவடிக்கைகளையும், ஊழலையும், கொலைகளையும் புரிந்தவர்களை விடுவிக்கும் நோக்கமே தவிர வேறு எதுவும் இல்லை. நீதித்துறை தவறாக பயன்படுத்தப்பட்டால் நிலமை நிச்சயமாக மாறும். மக்கள் நாட்டை ஆள ஆணை கொடுத்தார்களே தவிர நாட்டை உடமையாக்க அல்ல.

நாம் என்ன கோருகிறோம்? எனில் நாட்டைச் சிங்கப்பூராக மாற்றுவதற்கு முன்னர் நாடு சட்டப்படி ஆளப்பட வேண்டும் என்கிறோம்.நீதித்துறையில் மாற்றங்கள் ஏற்படாவிடில் ராஜபக்ஸ அரசிற்கு நடந்த கதியே ஏற்படும்.

நெருங்கிய நண்பர்களைப் பாதுகாத்து மெருகேற்றுவது நிறுத்தப்பட வேண்டும். அதே வேளை மக்கள் மிகவும் அறிவூட்டப்பட வேண்டும். இரண்டு கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்பட்டு திட்டமிட்ட வகையில் செயற்படாவிடில் நாடு சுடுகாடாகிவிடும்……..’
இவ்வாறு பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்களின் உரை அமைந்தது.

வாசகர்களே!
ஜனாதிபதி மைத்திரி முன்னிலையில் பிரதமர் ரணிலும் இருப்பதாகக் கருதி நிகழ்த்தப்பட்ட இந்த உரை அரசுத் தலைவர்களுக்கு மட்டுமல்ல எமது தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் அது பொருத்தமானதே.

சிங்கள மக்கள் மத்தியிலே எழுந்து வரும் ஜனநாயக அலையைச் சரியாகப் புரிந்து அதற்கு ஏற்றவாறான செயற்பாடுகளை நோக்கிச் செல்வதே இன்று தமிழ் மக்களின் தேவையாகவும் உள்ளது.

இந்த உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியிருந்தார். அவரது உரையின் சில பகுதிகளைப் படியுங்கள்.

‘……..பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சமூக நீதி, சட்டப்படியான ஆட்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் குற்றம் செய்தாராயின் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை? என்பதே எனது கேள்வியுமாகும். மந்திரி சபையில் நான் என்ன கூறினேன்? என்பதை மந்திரிகள் அறிவார்கள்.

மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் ஆணைக்குழு நிறுவியது குறித்து அரசிலுள்ள சிறு பிரிவினர் என்னைக் குறை கூறுகின்றனர். இப் பிரிவினர் முகப் புத்தகத்திலும், சில இணையத் தளங்களிலும் எனக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான கதைகளை வாரப் பத்திரிகைகளில் எழுத பணமும் கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் என்னைப் பற்றிப் பிரசுரிக்க அரசிலுள்ள சிறு குழுவினர் பணமும் செலவழிக்கின்றனர்.

இவை எதற்காக? மத்திய வங்கி பிணைமுறி சம்பந்தமாக எழுந்த சில கேள்விகள் தொடர்பாக விசாரணை செய்ய நான் ஆணைக்குழு நியமித்ததே இதற்குக் காரணமாகும். வண. சோபித தேரர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் எனது நடவடிக்கைகள் சரியென ஆதரித்திருப்பார்.

இந்த இடத்திற்கு நாம் வந்திருப்பதன் நோக்கமென்ன? அரசை ஏன் மாற்றினோம்? எமது உண்டியல்களை நிரப்பவா?நாம் கொள்ளையடிக்கவா? ஆணைக்குழுவினை நியமிக்கும் போது அரசிலுள்ள குறிப்பிட்ட நபரை அல்லது அமைச்சரைக் குறிபார்க்கவில்லை.

ஆணைக்குழு நியமிக்கும் போது இவ்வாறான நிலை ஏற்படும் என நாம் நன்கு அறிவோம். பொதுமக்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.

பிணைமுறி விவகாரம் ஊழல் தொடர்பான மிக முக்கியமான பிரச்சனை என அரசியல் கட்சிகளும் தெரிவித்தன. அவர்களும் ஆணைக்குழு நியமிக்கும்படி கோரினார்கள்.

நான் பதவியேற்று 3 மாதங்களில், அரசு அமைத்து 3 மாதங்களில் இப் பாதிப்பு அதாவது பிணைமுறி விவகாரம் இடம்பெற்றது. இப் பிணைமுறி விவகாரத்திற்குப் பொறுப்பானவரே இப் பாதிப்பிற்குப் பதில் கூற வேண்டும்.

எனக்குப் பதவி அதிகாரத்தில் பேராசை இல்லை.வரும்போதே வெளியேறுவதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் பதவியில் உட்காரும் நோக்கத்துடன் வரவில்லை. வெளியேறும் நோக்குடனே வந்தேன். நான் சரியான பாதையில் செல்வதற்கு எனக்கு ஆதரவு தேவை.

சில பிரச்சனைகள் எழுந்தபோது நான் ஏன் செயற்படவில்லை? எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாம் நல்லெண்ண அடிப்படையிலான அரசை நடத்துகிறோம். இந்த நல்லெண்ணத்தைப் பலப்படுத்துவது அவசியமானது.

பொது மக்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் இவ்வாறான அரசின் அனுபவம் கிடைக்கவில்லை. இது புதிய அனுபவமாகும். ஐ தே கட்சியானது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிந்தெடுத்தது.

இவை கடந்த 60 அல்லது 64 வருடங்களாக முட்டி மோதிய கட்சிகளாகும். என்மீது காணப்பட்ட நம்பிக்கை காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும். யாராவது தவறு செய்தால் அது அரச தரப்பிலிருந்தாலென்ன, எதிர்க்கட்சியிலிருந்தாலென்ன தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்……..’

வாசகர்களே!

இக் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது மூன்றாவது அரசியல் பாதைக்கான தேவை இருப்பதும், அதற்கான விவாதங்களே இவை என்பதையும் உணர முடிகிறது.

பிரதானகட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விமர்சனங்களும், போராட்டங்களும் அரசைப் பலவீனப்படுத்தி புதிய அரசியல் அமைப்பு யோசனைகளைத் தோற்கடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவை சாத்தியப்படாவிடில் மாற்று அரசியல் பாதை எவ்வாறு அமையும்? என்பதற்கான விவாதங்களுக்கான காலமிது. அரசியலில் ஏற்பட்டுள்ள இந் நெருக்கடிகள் எதிர்கால அரசியல் போக்கை, புதிய சமூக ஜனநாயக அரசியலை இப்போதிருந்தே திட்டமிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

தமிழர் தரப்பில் அரசியல் உரிமைகளை வலியுறுத்தும் போக்கே அதிக அளவில் காணப்படுகிறது. கூட்டமைப்பினரின் அரசியல் பாதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் இவை ஒட்டு மொத்த அரசியலின் போக்கிலேயே தங்கியுள்ளன. இலங்கை முழுவதற்குமான ஜனநாயக மாற்றங்கள் ஏற்படாத வரை தமிழ் அரசியலின் போக்கு வெற்றுக் கூச்சலாகவே அமையும்.

முதலில் தேசிய அளவிலான ஜனநாயக மாற்றத்தைக் கோருவதில் உறுதியான இணைப்புத் தேவையாக உள்ளது. அவற்றை இன்றுள்ள தமிழ் அரசியல் தலைமுறையால் தர முடியாது.

அதற்கானதூரப் பார்வை, விளக்கம், ஆளுமை, நிகழ்ச்சி நிரல் போன்றன அவற்றிடம் இல்லை. வெறுமனே பாராளுமன்ற உரைகள் மட்டும் தரப் போவதில்லை. புதிய தலைமுறையினரே இச் சவால்களை ஏற்க வேண்டும்.

-வி.சிவலிங்கம்

Email: vsivalingam@hotmail.com

Share.
Leave A Reply