மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதியொருவர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்தமையை கண்டித்து, சிறைகைதிகள் சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஈஷா லெப்பை நஜீம் என்ற நபர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் கைதியாவார். இவர் இன்று (0501.2020) ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகயீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறை கைதியின் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் கவனயீனமே காரணமென சுட்டிக்காட்டி இருபதிற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலை கூரையினை உடைத்து கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து சிறைச்சாலைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.