இந்தியாவில் 2,126 யுவதிகள் இணைந்து வாள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வாள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.ராஜ்கோட் மன்னராக மன்தாதசின் ஜடேஜா கடந்த புதன்கிழமை முடிசூடுவதை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
1620 முதல் அதிகாரத்திலிருந்த ராஜ்கோட் மன்னர் ஆட்சி 1948 ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. எனினும் அரச குடும்பம் பாரம்பரிய முறைப்படி ‘மன்னரை’ தெரிவு செய்து வருகிறது.இறுதியாக ராஜ்கோட் மன்னராக விளங்கிய மனோஹரிஷ் சிங் ஜடேஜா 2018 ஆம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில் புதிய மன்னராக அவரின் மகன் மன்தாதசின் ஜடேஜா புதிய மன்னராகிறார். இவர் ராஜ்கோட்டின் 17 ஆவது மன்னராவார்.
மன்தாதசின் ஜடேஜாவின் முடிசூட்டுவிழா கொண்டாட்டங்கள் கடந்த 8 ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தன.
இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய வாள் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 2,126 யுவதிகள் இணைந்து வாள் நடனமாடியமை புதிய கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.