கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகல் அவசியம் என்று வலியுறுத்தப்படும் சூழலில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சொந்த கிராமத்தில், தன் ஆதரவாளர்களைக் கூட்டமாகக் கூட்டி வெள்ளியன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
தும்கூரு மாவட்டத்தில் உள்ள துருவெக்கெரே சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் மசாலே ஜெயராம் கேக் வெட்டியபோது அங்கு கூடியிருந்தவர்கள் முகக்கவசம் எதுவும் அணியவில்லை என்கிறது டெக்கன் கிரானிக்கல் செய்தி.
இந்தக் கூட்டத்தில் குழந்தைகளும் இருந்தனர் என டெக்கன் கிரானிக்கல் செய்தி தெரிவிக்கிறது.
ஜெயராமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரியாணி விருந்தும் நடந்தது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே செல்லும்போது மக்கள், கூட்டம் சேராமல் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த கிராம மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்றும் ஜெயராம் கூறியுள்ளார்.