கோவிட்-19 ரைவஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான ICMA நிறுவனத்தினால் தரப்படுத்தலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலின் பிரகாரம், கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை 9ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.

உலகின் வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, இந்தியா, ஜெர்மனி, சுவிஸர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை பின்தள்ளி, இலங்கை முன்னிலைக்கு வந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசத் தலைவர்கள் மற்றும் நாடுகள் முன்னெடுத்துள்ள சுகாதார கட்டமைப்பு தயார் நிலைமை குறித்து இந்த தரப்படுத்தலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலின் பிரகாரம், நியூஸிலாந்து முதல் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் 2ஆவது இடத்தையும், அயர்லாந்து 3ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியா 4ஆவது இடத்தையும் பின்லாந்து 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

இந்த தரப்படுத்தலில் இந்தியா 38ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை, ரஷ்யா 50ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்பெயின் இறுதி இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இலங்கை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் கடமையாற்றியதாக ICMA நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தரப்படுத்தல் தொடர்பில் நிறுவனத்தின் அறிக்கையில் தெளிவூட்டல்களை வழங்கியே இந்த விடயத்தை கூறியுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் தேசிய உளவுத்துறை ஆகியன எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கோவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்த பின்னணியில், அங்கு நிர்கதிக்குள்ளான 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்த முதலாவது நாடாக இலங்கை திகழ்ந்தது என அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் இலவச பொது சுகாதார அமைப்பு இருக்கின்றமையே இவ்வளவு சிறப்பாக இதனை முகம் கொடுக்க காரணம் என அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

பாடசாலை கல்வி முதல் பட்டதாரி வரை இலங்கையில் இலவச கல்வி முறை காணப்படுகின்றதை இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நன்கு ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் நவீன மருத்துவ பீடங்களின் நிலை மூலம் பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான தகுதி வாய்ந்த சுகாதார வல்லுநர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறையினர் இருந்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தீவு தேசமொன்று ஒரு வலுவான நூற்றாண்டு பழமையான சமூக சுகாதார திட்டத்தை கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் குறைவான தேசமாக இலங்கை காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் இன்றைய நிலைமை

இலங்கையில் ஜனவரி மாதம் 27ஆம் தேதி முதல் இன்று வரை கோவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு 244 பேர் இலக்காகியுள்ள நிலையில், அவர்களில் 77 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 160 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 148 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பரவ ஆரம்பித்த பின்னணியில், மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

கோவிட்-19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழும் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளுக்காக சுகாதார பிரிவினருடன் போலீஸார் மற்றும் முப்படையினர் இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியில் கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது பெருமளவு குறைவடைந்துள்ள நிலையில், இலங்கை எதிர்கொண்ட அச்ச நிலைமை நீங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply