தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம் இப்போது தைவான் நீரிணையில் குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
போர்ப் பயிற்சியின் ஓர் அங்கமான இந்தக் குண்டு வீச்சுகள் எதிர்பார்த்த முடிவுகளைத் தந்திருப்பதாகவும் சீன ராணுவம் கூறியுள்ளது.
கடற்பகுதியில் ஏராளமான ஏவுகணைகள் வீசப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டோங்ஃபெங் என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளை சீன ராணுவம் ஏவியதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தைவானின் தென்கிழக்கே பகுதியை ஒட்டிய பெருங்கடலை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
தைவானுக்குச் செல்வது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று சீனா எச்சரித்திருந்த நிலையும் நான்சி பெலோசி அதைப் பொருள்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி தைவானைச் சுற்றி வளைத்து சீன ராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
இந்தப் போர்ப்பயிற்சிக்கு தைவான் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. சாதாரண நிலையை மாற்றுவதற்கு இந்தப் போர்ப்பயிற்சிகளை சீனா பயன்படுத்துவதாக தைவான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒரு அறிக்கையில், “போரை நாடிச் செல்லாமல் போருக்குத் தயாராக இருக்கும் கொள்கையில் உறுதியாக இருப்பதாக” தைவான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு உதவுமாறு உலக நாடுகளை தைவான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
வியாழன் அன்று, வெளியுறவு அமைச்சகம் சீனாவை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு உலக சமூகத்தை வலியுறுத்தியது.
சீனாவுடன் தைவான் மோதும் சாத்தியம் உண்டா?
சீனா தைவானுக்கு நெருக்கமாக தனது போர்ப்பயிற்சிகளை தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கினால், நிலைமை மோசமடைய வாய்ப்பிருப்பதாக சர்வேதச மூலோபாய ஆய்வு மையத்தின் இயக்குநர் போனி லின் கூறுகிறார்.
“தைவானின் வான்வெளியில் விமானங்களை பறக்கவிட சீனா முடிவு செய்தால், தைவான் அவற்றை இடைமறிக்க முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. நடுவானில் மோதலாகவும் அது மாறலாம் இருக்கலாம், புதிய காட்சிகள் அரங்கேறலாம்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
தைவான் எங்கே அமைந்திருக்கிறது?
தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான “முதல் தீவு சங்கிலி” (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.
சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.
தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்தது ஏன்?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.
கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.
தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.
தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)