லிங்குசாமிக்கு சிறை தண்டனை நிறுத்தம் – என்ன வழக்கு? காசோலை மோசடி சர்ச்சையில் சிக்கிய மற்ற பிரபலங்கள் யார்?
திரைத்துறையில் பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் என பல தொழில்களை செய்து வரும் பிவிபி நிறுவனத்தின் ஒரு பிரிவான பிவிபி கேபிடல்ஸ் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் லிங்குசாமி. ஆனந்தம், ரன்,ஜி, சண்டக்கோழி 1& 2,பீமா, பையா,வேட்டை, அஞ்சான், வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
தற்போது செக் மோசடி வழக்கில் லிங்குசாமி ‘குற்றவாளி’ என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதே சமயம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை லிங்குசாமிக்கு வழங்கிய நீதிமன்றம் அதற்கு ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்தது.
2014ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ், பிவிபி கேபிடல்ஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் நிதியை கடனாக பெற்றிருந்தது.
இந்த நிலையில், தங்களிடம் இருந்து வாங்கிய கடனை லிங்குசாமி திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி 2016ஆம் ஆண்டில் அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிவிபி கேபிடல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனே பணத்தை திருப்பித் தருமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து வாங்கிய கடனுக்காக காசோலைகளை அந்நிறுனத்திடம் லிங்குசாமி அளித்துள்ளார்.
ஆனால், வங்கியில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலைகள் திரும்பி வந்தன. இதையடுத்து இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக பிவிபி நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கைத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22) தீர்ப்பளித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து பிபிசி தமிழுக்காக இயக்குநர் லிங்குசாமியை தொடர்பு கொண்ட கேட்டபோது, ” சைதாப்பேட்டை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆயத்தமாகி வருகிறோம்.
இதற்கு மேல் இவ்வழக்கு குறித்து விரிவாக பேச இயலாது, ஆனால் என்னுடைய திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்படும்” என்று கூறினார்.
செக் மோசடி வழக்கில் சிக்கிய மற்ற பிரபலங்கள்
1. நடிகர் சூரி சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலாவுக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். சென்னைக்கு அருகே உள்ள சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் ரூ.2.70 கோடி அளவுக்கு பண மோசடி செய்து விட்டதாக மனுவில் சூரி குற்றம்சாட்டி இருந்தார்.
நடிகர் விஷ்ணு விஷாலுடன் நடிகர் சூரி
தனது புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால், தனது தந்தை மீதான குற்றச்சாட்டுகளை நடிகர் விஷ்ணுவிஷால் மறுத்துள்ளார்.
2. நடிகர் விமல் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அதில், `தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவர் நண்பர்கள் சிலர், தன் பெயரைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் ‘மன்னர் வகையறா’ திரைப்பட விற்பனையில் தனக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விமல்
கடந்த சில தினங்களுக்கு மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் விமல் ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக தன்னிடம் பணம் வாங்கிவிட்டு, திருப்பி தராமல் மோசடி செய்து வருகிறார் என்று புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாருக்காக, விமல் வழக்கு விசாரணை செய்யும் அதிகாரிகள் முன்பு நேரில் சென்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலனை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.
3. நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், திரைப்பட தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ரேடியன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்திடம் கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.2 கோடி கடனாக பெற்றுள்ளனர்.
ரேடியன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கூறிய நிலையில், மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சத்திற்கு 2 காசோலைகளும், நடிகர் சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் ரூ.10 லட்சத்திற்கு 5 காசோலைகளும் வழங்கப்பட்டன.
மொத்தம் வழங்கிய 7 காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியதாக ரேடியன்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில ஏழு வழக்குகள் தொடரப்பட்டன.
இரு வழக்குகளில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும், மற்ற 5 வழக்குகளில் நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கணவரும் நடிகருமான சரத்குமாருடன் நடிகை ராதிகா
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலிசியா நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மொத்தம் உள்ள ஏழு வழக்குகளில் நடிகர் சரத்குமார் தொடர்புடைய ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார்,திரைப்பட தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் தொடர்புடைய இரு காசோலை மோசடி வழக்குகளில் மூவருக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.
மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மூவரும் தொடர்புடைய இரண்டு காசோலை வழக்குகளில் ரூ.2.80 கோடி அபராதமும் நடிகர் சரத்குமார் தொடர்புடைய 5 வழக்குகளில் ரூ. 50 லட்சம் அபராதமும் என மொத்தமாக ரூ.3.30 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரத்குமார் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4. பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் மீது மலேசிய நாட்டைச் சேர்ந்த ராஷித் அகமது கனி என்பவர் காவல்துறையில் புகாரளித்து இருந்தார்.
மலேசிய நாட்டில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன் என்ற பெயரில் இயங்கும் நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை நிர்வாக இயக்குநராக ராஷித் அகமது கனி என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிறுவனம் வெளிநாட்டில் தமிழ் திரைப்பட வெளியீடு உரிமையைப்பெற்று நடத்தி வருகிறது.
தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி
இந்நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முரளி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘பேட்ட’ படத்தின் விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி அப்படத்தின் மலேசியா விநியோக உரிமையை தங்கள் நிறுவனத்திற்கு தருவதாக உறுதியளித்தார்.
‘பேட்ட’ படத்தின் மலேசியா விநியோக உரிமை பெற நாங்கள் சம்மதித்து ரூபாய் 30 கோடி வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டு அவருக்கு 30 கோடியும் முன் பணமாகவே வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்பட உரிமை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பது எங்களுக்கு தெரியவர நாங்கள் அவரை தொடர்புகொண்டு பணத்தை திருப்பி அளிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
அதற்கு முரளி, ரூபாய் 15 கோடியை திரும்ப திருப்பி அளித்து விட்டு ரூபாய் 5 கோடிக்கு செக் ஒன்றினை வழங்கினார்.
மீதமுள்ள ரூபாய் 10 கோடிக்கு தங்களிடம் ‘காஞ்சனா 3’ மற்றும் நான் ருத்ரன் ஆகிய திரைப்படத்தின் உரிமை இருப்பதாக கூறினார். அதையும் நாங்கள் நம்பி ஒப்புக்கொண்டோம்.
அதன் பின் ‘காஞ்சனா 3’ திரைப்பட உரிமை அவரிடம் இல்லை என்பதும், நான் ருத்ரன் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது என்றும் எங்களுக்கு செய்திகள் கிடைத்தன.
அதேவேளையில் அவர் கொடுத்த ரூபாய் 5 கோடிக்கான காசோலை அவர் வங்கிக்கணக்கில் போதிய பணமில்லை என்ற காரணத்துடன் திருப்பி அனுப்பப்பட்டது.
எனவே அவரை தொடர்புகொண்டு கேட்டபோது பணமெல்லாம் தரமுடியாது என்றும் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், நான் தான் தற்போது தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பதால் உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் மிரட்டும் தொனியில் பேசியதாக ராஷித் அகமது கனி கூறியுள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
5. மறைந்த சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா 2012ஆம் ஆண்டு தொடர்ந்திருந்த வழக்கில், இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா திரைப்பட தயாரிப்பு பணிகளுக்காக ரூபாய் 65 லட்சம் கடனாக பெற்றிருந்ததாகவும், இந்த தொகையை தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தியான நடிகர் ரஜினிகாந்த் கொடுப்பார் என கடிதம் எழுதி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரிராஜா
காசோலை மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இயக்குநர் கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என நடிகர் ரஜினி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது, ரஜினியின் பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என முகுந்த் சந்த் போத்ரா தனது மனுவில் கூறியிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன்,ஃபைனான்ஸியர் முகுந்த் சந்த் போத்ராவுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஃபைனான்ஸியர் முகுந்த் சந்த் போத்ரா, மறைந்து விட்டதால், வழக்கை தொடர அவரது மகன் ககன் போத்ரா என்பவருக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ககன் போத்ரா தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் வழக்கை தொடர வாதிக்கு விருப்பமில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.