கடுகண்ணாவ பிரதேசத்தில் 18 வயதான யுவதி கடத்தப்பட்டு நால்வரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர்கள் குறித்த யுவதியை ஹதரலியத்த பிரதேசத்தில்  வைத்து பொத்தபிட்டிய பகுதிக்குக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் நான்கு சந்தேக நபர்கள்  தன்னை பாலியல் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகவும், முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்போது சந்தேக நபர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அனைவரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுகண்ணாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply