தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் ஒருவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்து தந்தையின் உடலை பல ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தைவான் நாட்டில் அரங்கேறியுள்ளது.

அந்த பெண்ணின் தந்தை ராணுவத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், அந்த பெண் தனது தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வீட்டில் வசித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் ரூ.18 லட்சம் இழந்த பெண்! – நடந்தது என்ன?

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணின் வீட்டிற்கு சுகாதாரப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் சுகாதார ஊழியர்களை தனது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவருக்கு 60,000 நியூ தைவான் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பெண் பலமுறை சுகாதார ஊழியர்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தார். அதன் பின், இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் அந்த பெண்ணிடம் அவரது தந்தை குறித்து கேட்டனர். முதலில், அந்தப் பெண் தனது தந்தை முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

பின்னர், தனது தந்தையை சீனாவிற்கு தனது சகோதரர் அழைத்துச் சென்றதாக காவல்துறையிடம் கூறினார். தனது தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாகவும், அங்கிருந்து இவரின் உடலை எடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் பேச்சில் சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும், பெண்ணின் சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதைக் கண்டறிந்தனர். அதேபோல, அவரது தந்தை தைவானை விட்டு வெளியேறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கண்டறிந்தனர்.

காவல்துறையினரின் கிடுக்குபிடி விசாரணைக்கு பிறகு அந்த பெண் தனது தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், தனது தந்தையின் உடலை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். பெண்ணின் தந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தைவானிய சட்டத்தின்படி, சடலத்தை சேதப்படுத்துதல், சிதைத்தல், அவமானப்படுத்துதல் அல்லது திருடுதல் போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பெரிய அபராதம் விதிக்கப்படும்.

நேரடி உறவினர் அல்லது நெருங்கிய நபர் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால், தண்டனையை 1.5 மடங்கு வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply