வலப்பனை-கண்டி பிரதான வீதியில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட “விஷன் மதர்” ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் (09) மாலை 6 மணியளவில் வாகன விபத்து இடம்பெற்றதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பகுதியிலிருந்து வலப்பனையை நோக்கி வருகை தந்த விறகு ஏற்றும் பார ஊர்தி (லொரி) ஒன்று கட்டுப்பாட்டை மீறி, இரண்டு ஓட்டோக்களில் மோதுண்டு,அப்போது அதேவீதியில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த 8 வயதுடைய சிறுவன் வலப்பனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். 14 வயதுடைய சிறுமி,நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ கல்லூரியில் தரம் 1 இல் கல்வி கற்கும் நிர்மல நயனகாந்த என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த விபத்து சம்பவத்தில் தொடர்புபட்ட விறகு ஏற்றும் பார ஊர்தி வலப்பனை பிரதேச சபை முன்னால் தலைவர் ஒருவருக்கு சொந்தமானது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த விபத்து சம்பவத்தில் தொடர்புடைய லொரியின் சாரதி நிலுஷ சஞ்சீவ சம்பத் விதானகே, என்பவரை வலப்பனை பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.