சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது (1956 ஜூன் 5) பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு, சிங்களம் வாசிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சி போராடிய காலத்தில் (1952 முதல் 1956) சிங்கள முதல் சுயபாஷை இயக்கமென்ற இயக்கமொன்று தென்புலத்தில் தோன்றி இலங்கை அரசியலில் மும்மூரமாக ஈடுபட்டது. 1940 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில மொழிக்கு எதிராக போராடிவந்த இயக்கம் இது. பின்னர் தமிழ் மொழிக்கு எதிரான இயக்கமாக மாறியது மட்டுமல்ல, பண்டாவின் தனிச்சிங்கள சட்டத்துக்கு பலத்த ஆதரவு நல்கியது.
சிங்கள மொழிச்சட்டத்தை பிரதமர் கொண்டுவரப்போகிறார் என்பதை அறிந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் செயற்குழு, யாழில் அவசரமாக கூடியது. தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில் ஜூன் 5 ஆம் திகதியை தமிழ் மொழிக்கு உரிமை கோரி பிரார்த்தனை செய்யும் நாளாகவும், தமிழுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை அகிம்சை வழியில் எதிர்ப்பதற்கும், தமிழரசுக் கட்சியினர் முடிவு செய்தனர்.
அந்த தீர்மானத்துக்கு அமைய வடக்கு கிழக்கிலுள்ள கச்சேரிகளுக்கு முன்னால் சத்தியாக்கிரகம் மேற்கொள்வதற்கும் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது. இது பற்றி தமது அமைச்சர்களோடு ஆலோசனை நடத்திய பிரதமர் பண்டாரநாயக்க, தந்தை செல்வாவுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அரசாங்கத்தின் முடிவை எதிர்க்க ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவீர்களானால் அதை அடக்க நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்து செல்வாவுக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார். பிரதமரின் பயமுறுத்தலுக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சவில்லை. கொழும்பில் இடம்பெறவிருந்த சத்தியாக்கிரகத்துக்கு வடக்கு கிழக்கிலிருந்து சத்தியாக்கிரகிகள் வந்தனர்.
காலி முகத்திடலை நோக்கி அறப்போர் அரியரத்தினம் என்பவர் தமிழரசுக் கொடியை ஏந்திய வண்ணம் முன்னால் சென்றார். மற்றவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். காலிமுகத்திடலில் உள்ள கோல்பேஸ் ஹோட்டலுக்கு சத்தியாக்கிரகிகள் செல்லவும் ஏராளமான பொது மக்களும் ஒன்று கூடினார்கள். இந்த போராட்டத்தை தடுக்க அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கு அமைய காடையர்களும் பொலிஸாரும் ஒன்று சேர்ந்து சத்தியாக்கிரகிகளை கோரமாக தாக்கினார்கள்.
சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோப்பாய் வன்னியசிங்கம், சாவகச்சேரி வி.என். நவரத்தினம், நல்லூர் டாக்டர் நாகநாதன், சு.நடராசா, வி.ஏ. கந்தையா, திருமலை என்.ஆர். இராஜவரோதயம், சொல்லின் செல்வர் இராஜதுரை, தளபதி அ.அமிர்தலிங்கம் ஆகியோர் மிக கொடூரமாக காடையர்களால் தாக்கப்பட்டனர். அமிர்தலிங்கத்துக்கு நெற்றி பிளந்தது. கட்டியிருந்த வேஷ்டியை கிழித்து காயத்தின்மேல் கட்டுப்போட்டு, அந்த காயத்துடன் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார் அமிர்தலிங்கம். அமீரை காயத்துடன் பார்த்த பிரதமர் பண்டா கடும் சீற்றத்துடன் கத்தினார். தனது கடும் கோபத்தை வார்த்தைகளாக கொட்டினார்.
வீதியில் சென்று கொண்டிருந்த அப்பாவித் தமிழர்கள் தாக்கப்பட்டனர். நாடு முழுவதும் கலவரம் பரவியது. தமிழர்களின் வீடுகள், வாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. தந்தை செல்வாவின் 14 வயது ஆகாத மகன் மனோகரன் அவர் கண்முன்னே கடுமையாகத் தாக்கப்பட்டார்;. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என இது பலராலும் கண்டிக்கப்பட்டது.
இக்கலவரத்தைக் கண்டித்து பேசிய இடதுசாரி தலைவரான கொல் வின் ஆர்.டி. சில்வா, இலங்கையில் ஒரு மொழியானால் இரண்டு நாடும், இரு மொழியானால் ஒரு நாடும் இருக்குமென்பதை சுட்டிக்காட்டியிருந்தார். (இவர்தான் பின்னாளில் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்புக்கு தலைவராக இருந்து தயாரித்த அரசியல் திட்ட மேதை) காலிமுக சத்தியாக்கிரக போராட்டத்துக்குப்பின் என்ன செய்வது என தமிழரசுக்கட்சியின் செயற்குழு திருமலையில் கூடி ஆராய்ந்தது.
பெரியதொரு மகாநாட்டை திருமலையில் நடத்துவதென்றும், அம்மகாநாட்டில் ஓர் இணை அரசை கோருவதென்றும், தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதற்கு அமைய 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 இல் திருமலையில் மகாநாடு நடத்தப்பட்டது.
திருமலை மகாநாட்டில் 7 முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது, மட்டுமன்றி இந்த மகாநாட்டில் உரையாற்றிய தந்தை செல்வா நான்கு பிரச்சினைகள்பற்றி சுட்டிக்காட்டினார்.
பிரஜாவுரிமைச்சட்டம்.
வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றம்
தேசியக் கொடி விவகாரம்.
தமிழ் மொழிக்கான உரிமை
இந்த நான்கு விடயங்கள் பற்றி விரிவாக மகாநாட்டில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மொழிவழி அமைந்த தன்னாதிக்க தமிழரசு அல்லது பல மாகாணங்களைக் கொண்ட இலங்கை கூட்டாட்சி ஒன்றியத்துக்காக போராடுவது.
தமிழ் மொழி, சிங்களத்துக்கு நிகராக சம உரிமையோடு ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.
மலையக தமிழர் உரிமை பெற, பிரஜாவுரிமை சட்டம் நீக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த நான்கு தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் வடக்கு கிழக்கு தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக இலங்கையில் கூட்டாட்சி ஒன்றியம் (சமஷ்டி) அமைக்கப்பட வேண்டுமென்பதற்கு மகாநாட்டில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு சவால் ஏற்படும் வகையில் அடுத்த வருடம் பிரதமர் பண்டாரநாயக்கா மீண்டுமொரு இன கலவரத்துக்கான தூபத்தை இட்டார்.
சிங்கள ஸ்ரீ போராட்டம்
தமிழர்களை கொதித்தெழவைத்த இன்னொரு போராட்டமாக சிங்கள ஸ்ரீ போராட்டம் மாறுகிறது. 1957 ஆம் ஆண்டு பண்டாவின் மந்திரிசபையில் போக்குவரத்து அமைச்சராகவிருந்த மைத்திரிபால சேனாநாயக்க, வாகனங்களுக்கான இலக்கத்தகடுகளில் ஆங்கில எழுத்துக்குப் பதிலாக சிங்கள ஸ்ரீ என்ற எழுத்தை உபயோகிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
இதன்பிரகாரம் 57 ஜனவரி முதலாம் திகதி சிங்கள ஸ்ரீ பொறிக்கப்பட்ட பஸ்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுவாக பண்டாவின் அமைச்சரவையிலிருந்த அனைவருமே இனவாதத்தின் பிதா மக்களாகவே காணப்பட்டார்கள். நல்லதையும் கேட்டதையும் எடுத்துக்கூறுவாரும் இருக்கவில்லை. கேட்கும் நிலையிலும் அவர் இருக்கவில்லை. இருந்த பதியுதீன் மஹ்மூத்தும் இரட்டைவால் குருவிபோல் நடிப்புத்தாரியாகவே இருந்தார்.
ஜனவரி 19 ஆம் திகதி தமிழரசுக்கட்சி ஸ்ரீ இலக்கத்தை அழிக்கும் இயக்கத்தை ஆரம்பித்தது. வவுனியா, திருமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த அழிப்பு போராட்டத்தை தொடங்கியது. சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மக்களின் உணர்ச்சிகளை தூண்டியதுடன், பிரதேச வேறுபாடுகளைத்தாண்டி எதிர்ப்பு போராட்டம் வலுவடையத் தொடங்கியதன் காரணமாக 1957 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ல் இடம் பெறவிருந்த சுதந்திர தினப்போராட்டத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி தமிழரசுக் கட்சி கோரியது.
இந்த துக்க தின அனுஷ்டிப்பை மேற்கொள்ளும் முகமாக திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறி கறுப்புக் கொடி கட்ட முயன்றபோது நடராஜன் என்பவர் மீது எப்.ஜி. மனுவல் டி.சில்வா என்பவர் துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டதில் 22 வயதுடைய அந்த இளைஞன் கொல்லப்பட்டார். இது 1956 அல் இடம்பெற்ற வன்முறையை விட பல மடங்காக விஸ்தரிக்கப்பட்டது.
1957 தமிழரால் நாடெங்கிலும் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், ஒத்துழையாமைப் போராட்டம் என்பவற்றால் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டதனால் அவற்றால் விளையக்கூடிய ஆபத்தை உணர்ந்து கொண்ட பண்டாரநாயக்க, சிங்கள மொழிச்சட்டம், சிங்கள ஸ்ரீ திணிப்பு விவகாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் தீவிர உணர்வலையை ஊட்டிய நிலையில் தமிழ் மக்களின் இந்த கொந்தளிப்பு நிலையை சமாளிக்கும் முகமாக, செல்வாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
இந்த அழைப்பில் தந்தை செல்வா தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதமருக்கு தெளிவாக எடுத்து விளக்கினார். அந்த சந்திப்பில் சமஷ்டிக்கு அதிக அழுத்தம் கெடுக்கப்பட்டு ‘தமிழ் மக்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்று எண்ணிச் செய்வதற்கு ஏற்ற ஒழுங்கை தாங்கள் செய்யவேண்டும். தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய சமஷ்டி அமைப்பின் மூலமே அதை கொண்டு வர முடியும்’ என தந்தை செல்வா பிரதமர் பண்டாவிடம் அழுத்தமாக எடுத்துக் கூறினார். இந்த பேச்சுவாhத்தையின்போது வன்னியசிங்கம் டாக்டர் நாகநாதன், அமிர்தலிங்கம் ஆகியோரும் பங்குகொண்டனர். இதன்பிரகாரம் இரு பக்கத்தாரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள்.
பண்டா – செல்வா ஒப்பந்தம்
1957 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும், தமிழரசுக்கட்சி தலைவர் தந்தை செல்வநாயகத்துக்கும் இடையிலான ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் நடந்த முதலாவது ஒப்பந்தமாகவும், வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காணவேண்டும் என்ற நோக்குடன் இறங்கி வந்த சிங்கள தலைவருக்கும் தமிழ் தலைமை ஒன்றுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாக மதிக்கப்பட்டது.
பிராந்திய சபைகள்
இவ்வொப்பந்தம் மூலம் தமிழ் மக்களின் போராட்டவழிக் கோரிக்கைகளுக்கு நிலையான தீர்வு காணப்படும் வகையில் பிராந்திய சபைகள் அமைக்கப்படுமென கூறப்பட்டது. இப்பிராந்திய சபைகள் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரை எழுதப்பட்டிருப்பதாக இவ்வொப்பந்தத்தை ஆதரித்த அரசியலாளர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
இந்த பிராந்திய சபைகளில் வட மாகாணம் ஒரு பிராந்தியமாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது 3 பிராந்தியங்களாக உருவாக்கப்படுமெனவும், இரண்டு அல்லது மூன்று பிராந்தியங்கள் விரும்பினால் இணைவதற்கு வழிவகுக்கப்படுமெனவும், மொழியைப் பொறுத்தவரை தமிழ் மொழி வடக்கு கிழக்கில் நிர்வாகமொழியாக அங்கீகரிக்கப்படுமெனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட மறுகணமே தென்னிலங்கையில் சிங்கள மக்கள், மதகுருமார், அரசியல் தலைவர்கள் புத்திஜீவிகள், இனவாதிகள் மதவாதிகள் என அனைத்து தரப்பினரும் தமது எதிர்ப்பை காட்ட கங்கணம் கட்டிக்கொண்டு முன்வந்தார்கள்.
பிராந்திய சபைகள் என்ற ரீதியில் இலங்கையை இனரீPதியாக துண்டாட பண்டா முயற்சிக்கிறார் என பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு, ‘எனது உயிரைக் கொடுத்தாவது நாட்டை காப்பாற்றுவேன்’ என டட்லி சேனாநாயக்கா துவேஷத்தை தூண்டடிய நிலையில், இவ்வொப்பந்தத்தை ஐக்கிய தேசியக்கட்சி கடுமையாக எதிர்த்தது. ஜே.ஆர்.ஜயவர்தன இந்த ஒப்பந்துக்கு எதிராக கண்டி நோக்கி தனது சகாக்களுடன் யாத்திர சென்றார். டட்லி சேனாநாயக்கா ஊர்வலத்தின் முன் சென்று தலைமை தாங்கினார். பௌத்த குருமார் நூற்றுக்கணக்கானோர் பிரதமர் பண்டாவின் இல்லத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டுமொத்த சிங்கள மக்களின் இந்த எதிர்ப்புக்கு காரணம் பண்டா – செல்வா ஒப்பந்தம் தமிழர்களுக்கு சமஷ்டி மூலம் நாட்டை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது என ஐக்கிய தேசியக்கட்சியினர் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்த நெருக்கடிநிலை உக்கிரம் அடையவே இனப்பிரச்சினையை தீhப்பதற்கான முதலாவது ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் (1958) வெடித்தது. இந்த இனக்கலவரத்தின் பின், 1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி பண்டாரநாயக்க, தல்துவே சோமராம தேரர் என்பவரால் சுடப்பட்டார். மறுநாள் 26 ஆம் திகதி மரணித்தார். சமஷ்டிக்கு நிகரான தீர்வுப் பொதி தீக்கிரையாக்கப்பட்டது. பண்டாவின் படுகொலையைத் தொடர்ந்து டபிள்யூ. தஹநாயக்க பிரதமராக பதவியேற்றார்.
திருமலை நவம்
(தொடரும்) Virakesari