தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த ஸ்ரீஜன் பால் சிங், நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெல்லியில் இருந்ததால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.  இதற்குமுன் இதுபோன்ற நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயத்தில், டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிக்டர் 3.0 அளவுகோளில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிலநடுக்க பயத்தின் காரணமாக நொய்டா மற்றும் காசியாபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறினர்.

நிலநடுக்க நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவு கோளில் 4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தில் (seismic zoning map) நில அதிர்வு மண்டலம் 4ல் டெல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, அதிகமக்கள் தொகை அடர்த்தி, திட்டமிடாத மற்றும் பாதுகாப்பற்ற கட்டமைப்புகளின் காரணமாக நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்தான அச்சம் அதிகமாக இருக்கிறது.

குறைவான அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அதை எளிதாகக் கடந்து செல்லக்கூடிய சூழல் டெல்லியில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

1720ஆம் ஆண்டு முதல் 5.5 ரிக்டர் அளவுகோளுக்கும் மேல் 5 முறை டெல்லியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் டெல்லி நிலநடுக்கம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், பின்விளைவுகளை கருத்தில்கொண்டு எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்துகிறேன். அதிகாரிகள் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய நில அதிர்வு மையத்தின் இயக்குநர் ஓ.பி. மிஸ்ரா, “நிலநடுக்கம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply