பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளிடம் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளை மீட்கும் நடவடிக்கை முடிவிற்கு வந்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
பயணிகளை மீட்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் தொடர்பாடல்களிற்கான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர் கிளர்ச்சியாளர்கள் அனைவரையும் புகையிரதத்திலிருந்து வெளியேற்றிவிட்டோம் 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
புகையிரதத்தில் 440 பயணிகள் இருந்தனர் என அவர் தெரிவித்துள்ள போதிலும் மீட்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை.
இதேவேளை ஒவ்வொரு கட்டமாக மீட்பு பணிகளை மேற்கொண்டோம், முதலில் சுமார் 100 விடுவித்தோம்,இரண்டாவது கட்ட நடவடிக்கையின் போது விடுவிக்கப்பட்ட 80 பேர் மச் என்ற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரியொருவர் டோவ்னிற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரிவினைவாதிகளிடம் பிடிடபட்ட புகையிர பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு பொலிஸார் உட்பட பல பயணிகள் பாதுகாப்பாக தப்பிவந்துள்ளனர்.
21 பயணிகளும் நான்கு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வது மிகவும் கடினமான விடயம் மக்கள் குடியிருப்புகள் வீதிகள் போன்றவை இல்லாத இடம் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் பயங்கரவாதிகள் பெண்கள் சிறுவர்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதமேந்திய நபர்கள் புகையிரதத்தை சுற்றி ரோந்து வந்தனர்,தங்களிடம் சிக்கியிருந்த பொதுமக்களை உன்னிப்பாக அவதானித்து வந்தனர்.
விசேட படைப்பிரிவினர் பணயக்கைதிகளை மீட்பதற்காக மிகவும் அவதானமாக செயற்பட்டனர்,தாக்குதல்கள் மூலம் எஞ்சியிருந்த கிளர்ச்சியாளர்களை செயல் இழக்கச்செய்த பின்னர் 68 பணயக்கைதிகளை மீட்டனர் என டோவ்னிற்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு அதிகாரியொருவர் நடவடிக்கை முடிவடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
புகையிரதத்தை பிடித்து பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தவேளை பயங்கரவாதிகள் ஆப்கானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பிலிருந்தனர் என லெப் ஜெனரல் ஷெரீவ் தெரிவித்துள்ளார்.
புகையிரதம் பிரிவினைவாதிகளிடம் சிக்குண்ட பகுதியையும் புகையிரதத்தையும் காண்பிக்கும் ஆளில்லா விமானப்படத்தையும் பாக்கிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் மூன்று குழுக்களாக பலர் புகையிரதத்தின் அருகில் அமர்ந்திருப்பதை காணமுடிகின்றது.
இது குறித்து விளக்கமளித்த அதிகாரியொருவர் பணயக்கைதிகளை புகையிரதத்தலிருந்து இறக்கி தற்கொலை குண்டுதாரிகளின் பாதுகாப்பில் வைத்திருந்தார்கள் இதனால் மீட்பு பணிகளை முன்னெடுப்பது கடினமாகயிருந்தது என பாக்கிஸ்தான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை குண்டுதாரிகளை சினைப்பர்கள் மூலம் வீழ்த்தினோம் பணயக்கைதிகள் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என அந்த அதிகாரி
தெரிவித்துள்ளார்.